2024-08-17

கள்ளக்குளி

 கள்ளக்குளி

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________

சொற்கீரன்



இது என்ன சொல் என்று

மிரண்டு விடாதீர்கள்.

எங்கள் கல்லிடைக்குறிச்சி 

தேசத்தில்

தாமிரபரணிதான் எப்போதும்

கொடி சுற்றிக்கொண்டு கிடக்கும்.

கன்னடியன் கால்வாய் தான்

புகழ் பெற்ற எங்கள் சூயஸ் கால்வாய்.

ஒவ்வொரு பாலத்திலிருந்தும்

விரால் பாய்ந்து

அந்த பச்சைப்பளிங்கு நீர்

பிழம்புக்குள்

முக்குளி போட்டு முக்குளி போட்டு

தண்ணீர்ப்பாசிகளின் 

நீண்ட கூந்தலுடன்

பின்னி பின்னி விளையாடிவிட்டு

கால்களினூடூ

விரையும் தண்ணீர்ப் பாம்புகளோடும்

சமரசம் செய்து கொண்டு போகும்போது

எங்கள் குமாரர் கோவில் தெருவில்

எங்கோ ஒரு மூலையிலிருந்து

"மந்திரிகுமாரியின்" 

வாராய் நீ வாராய் என்ற பாட்டு

மிதந்து மிதந்து வந்து

எங்களோடு பிசைந்து

இனிமையை பிழிந்து ஊற்றி

ஜலக்கிரீடை செய்யும்.

வாய்க்காலின்

பத்து பன்னிரெண்டு பாலங்களில்

கடைக்கோடி பாலம் வரைக்கும்

நீர்ப்பயணம் செய்து

கரையேறுவோம்

கொழுக்கு மொழுக்கென்று

அம்மணங்குண்டிகளாய்.

ஏழெட்டு வயதுகளின்

மின்னல் குஞ்சு விளையாட்டுகள் இவை.

எங்கள் கால் சட்டைகளை 

அந்த வாய்க்காங்கரை

குத்துக்கல் கண்களில்

செருகி வைத்திருப்போம்.

கண்கள் செவ செவ என்று

ஆகியிருக்கும்.

ஒரு சிரட்டைப்பயல்

ஐடியா குடுப்பான்.

வெயிலில் சுட்டுப்பொசுக்கும் 

கூழாங்கற்களை

கண்ணில் ஒற்றி ஒற்றி எடு

என்பான்.

ஆயிரத்துத்தொள்ளாயிரத்து

"ஐம்பது"களின்

எங்கள் விக்கிர்மாதித்தன் 

வீர விளையாட்டுகள்

இவை.

வகுப்புகளுக்கு கூட‌

கட் அடித்து விட்டு

இந்த வாட்டர் ஒலிம்பிக்ஸின்

விருதுகளுக்கு

எத்தனை எத்தனை வேட்கைகள்

எங்களிடையே.

விருதுகளாய்

பூவரச இலைகளை சுருட்டி

பீப்பி செய்து தருவான் ஒருத்தன்.

அந்த ஒலி எங்கள்

பிஞ்சு நரம்புகளுக்குள்ளும்

வீர யாழ் இசைக்கும்.

வீட்டுக்குத்தெரிந்தால்

முதுகு பிஞ்சுடுமே.

அப்ப..

இது "கள்ளக்குளி" தானே!

____________________________________________








விரைந்து வாருங்கள்.

 விரைந்து வாருங்கள்.

_____________________________________


நொறுங்கிக்கிடக்கிறது

மணி மண்டபம்.

நூற்றாண்டுகளை சிதிலங்களாக்கி

ராட்சத வௌவ்வால்களின்

சிறகடிப்புகளும்

நூலாம்படை வலைகளின்

ஹைபர்போலிக் ஜியாமெட்ரியில்

பாழடைந்த பிக்காஸோவின்

கோட்டுச்சித்திரங்களும்

எதைச்சொல்கின்றன?

எதோ ஒரு 

ஓநாயின் ஊளைகளையா?

கலைடோஸ்கோப் திருப்பு வண்ணங்களின்

எண்ணக் குழம்பியங்களையா?

கீட்ஸ்

எழுதினானே "கிரேக்கக்கோப்பை" என்று

ஒரு கவிதை...

அதன் சுடுகாட்டு மூச்சு வெப்பங்களில்

காதல் ரோஜாக்களின்

பேய் இதழ்கள் பிய்த்துக்கொள்ளும்

கூந்தல் கீற்றுகள் போன்ற‌

சிலுப்பல்களையா?

எதையாவது

ரத்தக்கடலின் சுநாமி அலைச்சுருட்டல்கள் போல்

நெய் ஓவியம் தீட்டிக் காட்டும்

திகில் உரிப்புகளையா?

எதை

கருப்பிடிப்பது?

எதை

உருப்பிடிப்பது?

யுகங்கள் கோரைப்பல் பிளப்புகளில்

புதிய விடியலை

உமிழ்கிறேன் உமிழ்கிறேன் என்று

பிலிம் காட்டுவதையா?

சித்தாந்தங்கள் மலடு தட்டிப்போயின.

அதனால்

மூச்சுப்பிரளயங்களில் மூண்டெழுந்து

முகம் காட்டி வரும் கப்பல்கள்

எங்கோ அங்கு 

தரை தட்டி நின்று கொண்டிருக்கின்றன.

ஓ! எங்கள் பளிங்குக்கவிதைகளாய்

அங்கே பளபளப்பாய் 

எழுதிக்காட்டிக்கொண்டிருக்கிற‌

நம்பிக்கைகளே!

வாருங்கள்...வாருங்கள்

விரைந்து வாருங்கள்.


____________________________________________

சொற்கீரன்.





என்ன செய்யலாம் சகோ?

 

 என்ன செய்யலாம் சகோ?

________________________________



என்ன சகோ

ஒரு மாதிரியாய் இருக்கிறீர்கள்.

என்ன மாதிரியாய் இருந்தாலும்

ஒரு பூ கூட

விழ வில்லையே.


சரி விடுங்கள்.

ஃபில்ம் போகலாமா?

போகலாம் தான்.

அங்கேயும் 

அந்த இமைகளின்

பிறாண்டல் இனிமையில்

நான் மாய்ந்தே போவேன்.


அப்போ

புத்தகத்திருவிழா?

ஆமாம்.

மனத்தை ஏமாற்றிவிட்டு

பக்கம் பக்கமாய்

புரட்டிக்கொண்டிருக்கலாம்.

இருந்தாலும்

அந்த அச்சுமை நாற்றத்திலும்

பட்டாம்பூச்சிகள் நசுங்கிச்சொல்லும்

சிறகுச்சுவடுகள்

சில்லிட வைக்குமே.

என்ன செய்யலாம் சகோ?


ஒன்றும் செய்யமுடியாது.

நானே அன்னமாய் அவர்களிடம்

தூது போகிறேன்.

சொல்லிமுடிப்பதற்குள்

குவாக் குவாக் என்று

சின்ன சின்ன கடுகுக்கண்கள்

கருப்பும் பச்சையும் நீலமுமாய்

மினுமினுக்க‌

சிறகு பரப்பி

என் காலைச்சுரண்டிக்கொண்டு

நிற்கிறாள்

_________________________________________

எப்சி.


2024-08-14

நுள்ளி விளையாடலாம்.

 சொற்கள் 

கத்தரிக்காய் என்றால்

கூட்டு வைக்கலாம்.

அத்திக்காய் இத்திக்காய் 

என்றால்

பாட்டு எழுதலாம்.

கோவைக்காய் என்றால்

உள்ளே மதுரைக்காயையும்

சேர்த்து துவட்டல் துள்ளலுடன்

நறு வெண்சோறு சமைக்கலாம்.

கவிதைக்கு பேர் என்ன? ஊர் என்ன?

யாதானும் ஊராமல் நாடாமால்

செம்புழுதி மண்ணின் துளியையும்

பாடலாம்.

பனை உயரக்கள்ளியின் 

சுடர்ப்பூவும் வருடலாம்.

அருகு வரும் 

அந்த அதிர்வு சிறைப்புள்ளோடு

கொஞ்சம் வாயடலாம்

வாருங்கள்.

வானத்தையும் கொஞ்சம் 

நுள்ளி விளையாடலாம்.

__________________________________________

எப்சி


2024-08-02

அவள் எனும் அனாடமி

 அவள் எனும் அனாடமி

____________________________________

சொற்கீரன்



என்ன தான் அவள்?

சங்குப்பூவா?

குவி கனவுகளின் 

கதிர் வீச்சுகளா?

சதையைத் தின்னும்

ரேடிய விளாறுகளிலா

அரிக்கப்பொகிறாள்?

பூதம் காட்டும் அவள் முல்லைகளில்

எல்லாம் 

மூழ்கடிக்கப்பட்டு விடுமா?

ராமானுஜனின் மாடுலர் ஃபங்ஷன்களா

அவள் கொத்துச்சிரிப்புகள்?

புரியாமலே

புதைந்து கொண்டு

எனை எந்த‌

குமிழிகளில்

சோழி குலுக்கிப்போட்டு

வெடிக்கச்செய்வாள்?

ப்ரத்யங்கிரஹா கோரைப்பற்கள் காட்டி

கொஞ்சும் நாணல்கீற்றுகளாய்

ஆற்றின் கரையோரம்

நிற்பாளா?

க்ளுக் சிரிப்புக்குள்

ஏலியன்கள்   குளுவானுமாய்

மில்லியன் கணக்கில்

வந்து பிம்பம் காட்டுபவளா?

யார் அவள்?

இந்த கேள்வியே போதும்

மின்னல் மழை பொழிய.

கிரீன் ஃபங்ஷன் தொகுப்புக்கணிதத்தில்

எத்தனை முறை

செருமி

இந்த இதயத்தை சுக்குநூறாக்குவாள்?

இவள் அநாடமியை

யாராவது வி ஆர் கேமிராவில்

பதிவிட்டு தரமுடியுமா?

அது போதும் என்று

இந்த எல்லா கனவுச்செதுக்கல் மற்றும்

கொத்தும் உளிக்காயங்களிலிருந்து

தப்பி

பறந்து விடுவேன்.

அவளின் இந்த பிம்பம் போதும்

அதில் 

ஆயிரம் பிம்பம் காட்டி

மறைந்து ஒளிர்வேன்.


_____________________________________________________







உன்னிடம் வாசித்துக்காட்ட‌..

 

உன்னிடம் வாசித்துக்காட்ட‌

________________________________________

கல்லாடன்.



இந்த கவிதையை 

உன்னிடம் வாசித்துக்காட்ட‌

மிக மிக ஆசை.

இதை படிக்கும் போது

அது உன் செவிகளில்

காட்சிகளை பூத்துச்சொரியுமா?

இந்த வானத்து சிமிழுக்குள்

உன்னை இன்னொரு வானமாக‌

காட்டி வியக்க வைக்குமா?

உன் ஒரு துளி முறுவலுக்குள்

எத்தனை ஆயிரம் வானப்படுதாக்களை

நான் சுருட்டி சுருட்டி 

விரித்திருப்பேன்.

ஒவ்வொரு எழுத்தும்

ஒரு கருப்பை.

அது பிறப்பிக்கும்

ஒவ்வொரும் உயிர்ப்பும்

எத்தனை குழிகளை வெட்டி

வைத்திருக்கின்றன தெரியுமா?

எதிலாவது நான் விழுந்து

மூடப்பட்டு

சலவைகல் எழுத்துக்களாய்

பொறிக்கப்பட்டு விடுவேன்.

பிறந்து பிறந்து 

இறந்து இறந்து

இந்த விநாடிமுள் 

சுற்றி சுற்றி வந்து 

பட்டாம்பூச்சி இறகுகளை

மில்லியன் கணக்கில் குவிக்கிறது.

அந்த வர்ணங்களின் பிரளயங்களில்

எல்லாம் காணாமல் போகிறது.

காலம் கூட‌

காலமாகி விட்டதாகத்தான்

சொன்னார்கள்.

இன்னும் அதை

படித்து முடிக்கவில்லை.

நீயும்

கேட்டு முடிக்கவில்லை.

வரிகள் படபத்துக்கொண்டிருக்கின்றன.

இந்த பஃறுளியாறு

பரல்களை பரப்பிக்கொண்டு ஓடுகிற‌து.

கூழாங்கற்களினூடே

நினவுக்கபாலங்களின் சிதிலங்களும்

சரசரத்துக்கொண்டு ஓடுகின்றன.


___________________________________________________




2024-07-28

கிழக்கு தோறும்

 



கோழி கூவிற்று.

அது அடைகாத்து 

வைத்திருந்த 

விடியல் முட்டையும்

உடைந்து சிதறி 

வெளிச்சச் சிறகை

விரித்து வெளியே வந்தது.

தமிழனின் மூளி வானம் மட்டும்

மொக்கையாக‌

அப்படியே இருந்தது.

பத்துப்பாட்டும் 

எட்டுத்தொகையும் 

தந்தவன்

தர்ப்பைப்புல்லொடு

தடுமாறும் 

மந்திரங்கள் சொல்லி

தடங்கள் மறந்தவன்.

தமிழ்ச்சுவடுகள் அழித்து

அமிழ்ந்து போனவன்

மீண்டு 

என்று எழுவான் என்று

இந்த உழக்குகளின் 

கிழக்கு மேற்குகளே

கிழக்கு தோறும்

விழித்து 

நோக்கிக்கொண்டிருக்கிறது.


_______________________________________

சொற்கீரன்

2024-07-20

சப்பரம்

 சப்பரம்

______________________________



என்ன தூங்கி விழுகிறாய்?

ஏன் கனவுகள் வந்ததில்லையா?

இப்போது எதுவும்

செய்யத்தொன்றவில்லை 

என்றாலும்

உனக்கு நீயே தான்

சாதித்துக்கொள்ளவேண்டும்.

அடடே

அந்த சாதியை குறிப்பிட்டு விட்டேனா?

இரவு முழுவதும் 

மின்சாரபல்புகள் நாளங்களாய்

தொங்க 

அந்த நாக்குத்துறுத்தி சாமி

முண்டைக்கண்ணும் அருவாளுமாய்

சப்பரத்தில் வலம் வந்திருப்பாரே.

உற்சாகம் தான்.

பானம் தான்.

கையில் வண்ணவண்ணக்கயிறுகள் தான்.

"டேய் டேய்..

இங்கேயே திருப்பிரலாம் சப்பரத்தை

அந்தத் தெருவு வாசன கூட‌

படப்படாது டோய்.."

அப்புறம் அங்கே

கொஞ்சம் தள்ளு முள்ளு.

சாமிகளே...

முண்டக்கண்ணு 

துருத்திக்கொண்டிருந்தது போதும்

கொஞ்சம் இறங்கி வந்து

என்னன்னு தான் பாருங்களேன்.

ஒவ்வொரு ஆண்டும்

இந்த அருவாள்கள் ருசிபார்க்க‌

இந்த மக்கள் தலைகளா?

வெறியை வைத்து

தீப்பந்தம் கொளுத்தி

எத்தனை காலம் தான் 

இருட்டுக்குள்ளேயே கிடப்பீர்கள்

சாமிகளே....

சப்பரம் தள்ளாடி தள்ளாடி

சாய்ந்து கொண்டே

அந்த தெருவைத்தாண்டியது.

அவனுக்கு 

தூக்கம் தூக்கமாகத்தான் வந்தது.

துண்டு துண்டாய்

மனிதர்கள் சிதறிக்கிடந்ததாய்த் தான்

கனவுகள்..

அதையெல்லாம் விரட்டிவிட்டு

அந்த வீட்டு வாசலில் நின்று

அவனைப் பார்த்து பார்த்து

விழுங்க நினைத்த 

அவள் விழிகள் எல்லாம்...

வரும் என்று தான் பார்க்கிறான்.

சுள்ளென்ற வெயிலில்

வாசலில் கெண்டை மீன்கள் 

வறுவலுக்காக கருவாடுகள் ஆக‌

காத்திருந்து

விரிக்கப்பட்ட துணியில்

வெறும்

துள்ளலும் துடிப்புமாய்

தெரிகின்றது.


____________________________________________________

கல்லாடன்










குற்றால அருவி.

 குற்றால அருவி.

_______________________


இத்தனை பேர்

இத்தனை நாளாக‌

குளித்துக்கொண்டிருக்கிறார்களே

அந்த திவலைகளின்

கவலைகளை கேட்டறிந்தார்களா?

அந்த மணித்துளிகளின்

உள் பொதிந்து இருக்கும்

மனத்துளிகளை

ஓர்மையோடு தழுவியதுண்டா?

எங்கோ

வானம் கிழிந்து கொடுத்த‌

நீர்ப்பிழம்பு

பாறையில் மண்டை சிதறி

சூரியன் குத்தி குத்தி

கொப்பளித்த‌

அந்த ஏழுவர்ண ரத்தத்திலா

இவர்கள் குளியல்?

மரத்துப்போன மனிதர்களுக்கு

மண்ணும் பாறையும் கூட பேசும்

என்று

தெரிந்திருக்கவா போகிறது?


____________________________________________

கல்லாடன்

 


2024-07-18

நன்றாக கேட்டது!


நன்றாக கேட்டது!

___________________________________________

அம்பைவாணன்.


செங்கல்கள் அடுக்கிவிட்டார்கள்.

அடுத்து

கலவை பூசும் சத்தங்களுக்கும்

நான் காத்திருக்க வேண்டுமா என்ன?

அல்லது

அந்த வரட்டிகளை வைத்து

சன்னல் மூட்டங்களில் 

கண்கள் அமைத்து

தீயின் கூந்தல் நீளமாய்

மயில் தோகை போல‌

வானம் முழுதும் அடைத்து 

அகவுமே

அதற்கும் காத்திருக்க வேண்டுமா?

என் இடுப்பு டப்பியைத்தேடுகிறேன்.

அதில் தானே 

அந்த குவாண்டம் 

டெலிபோர்டேஷன் ஈக்குவேஷன்

இருக்கிறது.

அதன் மூலம் அந்த 

ஈகிள் கேலக்ஸிக்கு போகலாம்

என்று தானே இருந்தேன்.

அதற்குள்ளாகவா எல்லாம்...

"வாங்கோ..

அந்தக்கலயத்தில் அஸ்தியை எடுத்துண்டு

காசி..ராமேஸ்வரம் போய்

கரைச்சுடுங்கோ..."

இந்த சத்தம் மட்டுமே எனக்கு

நன்றாக‌ கேட்டது.


______________________________________________


2024-07-11

தேசிய மொழி.

 யார் அங்கே?

என் குரல் கேட்கிறதா?

ஏன் கத்துகிறாய்?

மவுனத்தின் அதிர்வெண் 

மவுனம் தானே.

அப்புறம் எப்படிக்கேட்கும்?

தன் குரலே

தனக்கு கேட்க‌

காதுகள் இல்லையா?

மவுனம் அங்கே இருந்து

கழன்று கொண்டது.

இப்போது

அது

காதல் தேசத்தின்

தேசிய மொழி.

_______________________________________‍‍

அஞ்சிறைத்தும்பி

நமக்கு மட்டும்...

 

நமக்கு மட்டும்...

__________________________________‍



தூரத்து புள்ளிகள்

தொலை நோக்கியில்

பூதங்கள் காட்டுகின்றன.

அவை இந்த பிரபஞ்சங்களையே

விரீர் என்று திறந்து போட்டு விடும்

கருந்துளைகளாம்.

அவற்றின் பூட்டு சாவிகளே

அவை தானாம்.

ஒளியாண்டுகளில்

அவை தொலைந்து கிடக்கின்றன.

அவற்றை உள்ளங்கையில்

வைத்துக்கொண்டு

மாவடு ஊறுகாயாக ஆக்கி

கணிதச்சோற்றில் தொட்டுக்கொண்டு

சாப்பிட்டுக்கொண்டே இருக்கின்றனர்

விஞ்ஞானிகள்.

எக்ஸோ ப்ளானெட்டுகளில்

உள்ள மனிதர்களோடு

கை குலுக்கிக்கொள்ளும்

தியரிகளையும் 

வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு மட்டும் 

துரோணாச்சாரியார்களும்

அஸ்வத்தாமாக்களும் தான்

அமாவாசை தர்ப்பணத்துக்கு

வெர்ச்சுவல் ரியாலிடியின் 

தர்ப்பை புல்லோடு

உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.


__________________________________________________

கல்லாடன்







மராமரங்கள்

 


எப்போதாவது

எதையாவது கவிதை என்று

நான் எழுதும்போது

மட்டையாகிக்கிடக்கும்

அந்த தருணங்களின்

மராமரங்கள் வழியே

என் மீது பெய்தது

அம்பு மழை.

அந்த ரத்த வெள்ளத்திற்குப் பிறகு

நான் கவிதையின்

அந்த சிவப்பு அணுக்களை

தேடிச்செல்ல முடிவதில்லை.


_________________________________________

கல்லாலன்

2024-07-10

விளிம்பு ரசம்.

விளிம்பு ரசம்.

____________________________


எத்தனை ஞாபகங்களை

ஒவ்வொரு கல்லாய் அந்த‌

ஜாடியில் போடுவது?

கற்கள் தீர்ந்து விட்டன.

சிறகுகள் ஓய்ந்து விட்டன.

வாழ்க்கையின் அந்த 

விளிம்பு ரசம்

வாய்ப்படும் முன்

வானத்தில் என் இரைச்சல்கள்

பஞ்சு பஞ்சாய்

பறந்து விடும்.

அன்று அவளை பார்த்தபோது

சிரித்தாள்.

அப்புறம் ஏதோ சொன்னாளே!

அந்தக்கல்லை

நான் எங்கு போய் தேடி

அலகில் கவ்வி எடுத்து வருவது?

அது எப்போது என்

இதய நாளத்துள்

யாழ் வாசிப்பது?

அங்கும் இங்கும் பறந்ததில்

இந்த வானத்துக்குத் தான்

சிராய்ப்புகள்..கீறல்கள்..

குரல்கள் எழுப்பி எழுப்பி

கரைந்து கொண்டிருக்கிறேன்.


_________________________________________________

கல்லாடன்.

2024-07-09

அச்சமில்லை அச்சமில்லை.

 அச்சமில்லை அச்சமில்லை.

_______________________________

சேயோன்.



அரைக்கால் 

டிகிரி கோணத்தில்

அந்த ஓரவிழி

என்னைச்சுருட்டிக்கொண்டு

விட்டது.

முகம் தெரியாது.

அகம் தெரியாது.

எந்த 

குறுந்தொகையும் 

கலித்தைகையும் 

கொண்டு 

அவள் முகத்தை ஒற்றிகொள்வது.

எதையோ தவறவிட்டு 

அவள் ஓடிவிட்டாள்.

அருகில் பார்த்தேன்.

கசங்கிய கைக்குட்டை

கலை வேலைப்பாட்டுடன் தான்.

தொடவே பயம்.

என்ன செய்வது?

திரும்பி விட்டேன்.

விடிய விடிய 

ஜேம்ஸ்வெப் தொலை நோக்கிப் 

புகைப்படங்கள் போல்

அத்தனை கேலக்சிகளும் 

பிசைந்து கொண்டு

என் இதயம் நுழைந்தது

அவள் முகத்தோடு.


__________________________________________





2024-07-07

தாலாட்டு

 




தாலாட்டு

___________________________________



என்னைத்தாலாட்ட 

ஆரம்பித்துவிட்டாய் 

உன் நினைவுகளால்.

மாமன் அடித்தானோ?

மாமி அடித்தாளோ?

பாசத்தைப்பிழிந்து காட்ட‌

இந்த மாமூல் கேள்விகளில்

தேங்கிக்கிடக்கும் 

இசையமைப்புகளுக்கு

அமைவான 

அம்மாவின் மியூசிக் நோட் ஷீட்டுகளை

அந்த ஆண்டவனாலும் 

திருடிக்கொண்டு விடமுடியாது.

உன்னைப்பற்றிய பகல் நேரத்து

சொப்பனங்களில்

அப்ப்டித்தான் சொக்கி சொக்கி

விழுகிறேன் போலிருக்கிறது.

கொலவெறி கொலவெறி என்று

யாரோ ஒரு சினிமாக்காரர்

பாடிய அந்த சாங்க் புக் வரிகள்

அப்போதைய‌

ஜனாதிபதி மாளிகை வரைக்கும்

அலையடித்ததாக 

சொல்லுகிறார்களே.

அது போல் தான் உன் தாலாட்டு

இந்த மொட்டைவெயிலுக்கும்

குஞ்சம் கட்டி அழகு பார்க்கிறது.

இந்த சவலைப்பிள்ளை 

இப்படியே கத்திக்கொண்டு 

கிடக்கவேண்டியது தான்

உன்னுடனான‌

என் அடுத்த சந்திப்பு வரை.


___________________________________

சேயோன்.

2024-07-06

ஒரு நாவல்

 


ஒரு நாவல்

___________________________

கல்லாலன்.



புத்தகத்தை எடுத்தால்

நாவல் நம்மை

கரைத்து விடுகிறது.

வரிகளுக்குள்

பிறகு அதன்

சொற்களுக்குள்

நாம் 

பதியம் போடப்பட்டு

காகித வானத்தில்

மகரந்த சேர்க்கையின்

மத்தாப்பூக்களாய்

மூளிக்கனவுகளில்

முளை விடுகின்றோம்.

கதையின் பாத்திரங்கள்

கட புட என்ற 

சத்தம் எழுப்பிய போதும்

காதலும் பெண்ணும் கலந்த‌

ரசாயனத்தில்

அந்த எழுத்தாளனின் 

சொல் வெட்டுகளே

நம் வாழ்க்கைக்குள் விழுந்த‌

கல் வெட்டுக்கள்.

உதாரணம் சொல்லுங்கள் 

என்கிறீர்களா?

அந்த "மோகமுள்"

இன்னும் தைத்துக்கொண்டே 

இருக்கிறது.

வானத்தை அண்ணாந்து 

பார்த்தாலும்

அந்த வானவில்லின் ரத்தம்

ஏழு வர்ணங்களில்

சொட்டிக்கொண்டே இருக்கிறது.


_________________________________________________

2024-07-05

ஈரோடு தமிழன்பன் .

 ஈரோடு தமிழன்பன்

__________________________________‍‍‍


உங்கள் வரிகள் பதியாத‌

காகிதங்கள்

மக்களே இல்லாத மெரீனா பீச்.

அதனால்

உங்கள் பக்கங்களில்

புரண்டு எழும்

அல்லது தடவிக்கொள்ளும்

சிறு பூச்சியாக ஊர்வதில்

எனக்கு ஒரு பெருமிதம்

உலகம் சுற்றும் ரசிகன் என்று.

தமிழுக்கு சொற்கள் 

தேவையில்லை.

அதன் மூண்டு எழும் கனலே

அங்கு அங்கு நடப்பட்டிருக்கும்

மைல் கற்கள் என்று

காட்டி விடுகிறீர்கள்.

தமிழின் தொன்மை கூறும்

கீழடிகள் எல்லாம்

சிலருக்கு எலும்புக்குவியல்களாம்.

ஆம் அதைக்கோர்த்து தான்

தேவநாகரியாய் அதை

கழுத்தில் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

உங்களின் சின்ன நிறுத்தற்குறிகளும்

அரைப்புள்ளிகளும் போதும்

அதில் பொங்கித் ததும்பும்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளின்

தமிழ் வீச்சுகளைக்

கண்டு கொள்ள.

உங்கள் எழுத்துக்கள் ஊழிப்பேரலைகள்.

இந்த உதவாக்கரைகள் எந்தக்

கரைகளிலாவது ஒதுங்கிக்கொள்ளட்டும்.


_________________________________________________

சொற்கீரன் 03.07.2024






2024-07-03

"மௌவல்" பின்னூட்டக்கவிதை

 


"மௌவல்" பின்னூட்டக்கவிதை 

08 13 PM/   03 07 24

 thiru  இராஜாஅபி. kavithai

_________________________________________________


அன்பு நண்பரே

முழு நிலவையும் 

உருக்கி வார்த்து தான் 

தந்திருக்கிறீர்கள் 

கவிதை என்று.

இருப்பினும் 

அவள் மூளி மவுனத்தில்

மூண்டெரியும்

காடுகளை 

உங்கள் மிச்சக்கவிதைகளுக்கு

பதுக்கி வைத்துக்கொண்டீர்களா?

கவிதை அருமை!

__________________________________________

அஞ்சிறைத்தும்பி.


2024-07-02

புள்ளிகள்

 புள்ளிகள்

_______________________________________


இதுவும் கடந்து போகும்

என்று

நம் தலைமீது எப்போதும்

சும்மாடு ஆக உட்கார்ந்திருப்பதே

கவிதை.

எழுதும் வரிகளில்

மெய் எழுத்துக்களின் 

மேற்புள்ளிகள் கூட சிலுவைகளே.

_______________________________________

சொற்கீரன்.

2024-06-26

சிதறல்களாய்...திவலைகளாய்.

 சிதறல்களாய்...திவலைகளாய்.

._________________________________________‍



சருகுகள் சரசரத்தன.

அவற்றின் பச்சையங்கள் 

மக்கிய பின்னும்

மாயமாய் கொலுசுகள் கொண்டு

கிசுகிசுத்தன.

அந்த ஒலிச்சரங்கள்

யாருமற்ற அந்த மாந்தோப்பில்

உரையாடல்களை அரங்கேற்றுகின்றன.

இலைகள் ஈரம் இழந்து உலர்ந்த பின்

எப்படி இதயத்தின் ஈரம்

இங்கே சுருதி கூட்டுகிறது?

அவளா?

அவனா?

சொற்கள் பின்னி முடித்து

பூ வைத்துக்கொண்டது போல்..

கிளுகிளுப்பும்

வளையல் ஒலிகளும் தான்

அந்த சருகுகளில் 

சன்னல்கள் திறந்து காட்டின.

குயில்களின் குக்கூக்கள்

திடீரென்று

வானம் முழுவதையும் 

ஒலி பெருக்கியாக்கி...

அந்த ஓசைபிரளயத்தில்

அவர்கள் கடல்களாய் சுருண்டு எழுந்து..

சிதறல்களாய்

திவலைகளாய்

அங்கே

பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர்.


_____________________________________________________‍

அஞ்சிறைத்தும்பி.






2024-06-23

என்டாங்கில்மெண்ட்

 அதே கவலை தான்.

அதே அதே..எப்படி

என்ற 

மண்டைக்குடைச்சல்கள்.

"கண்ணொடு கண்ணிணை நோக்கியது..."

மட்டுமே நிகழ்ந்தது.

அப்புறம்

கோடி கோடி ...ஒளியாண்டுகள் தூரம்.

குவாண்டம் என்டாங்கில்மெண்ட்

என்று கணித சமன்பாடுகளை

நீட்டிக்கொண்டு

போக முடியவில்லை.

இதோ 

அந்த கண்களுக்கும்

இந்தக்கண்களுக்கும்

இடையே

அம்புகள்..ஈட்டிகள்

ரத்த அணுக்கள் ஒவ்வொன்றும்

ராட்சத கதாயுதங்களாய்

முரண்டு பிடித்துக்கொண்டு

இனிமையின் குருட்சேத்திரம்.

உனது வெற்றி எனது தோல்வி.

எனது வெற்றி உனது தோல்வி.

கீதைகள் எல்லாம்

சொற்கள் ஒடிந்து உடைசல்கள் ஆகின்.

கிருஷ்ணன்கள் கூட‌

எவண்டா இதை மேய்ப்பது என்று

மாடுகள் மேய்க்கப்போய் விட்டான்.

இனிய தேன்மழைக்குள்

அடர்மழையின் 

கொடும் போர்..போர்.

_____________________________________

அஞ்சிறைத்தும்பி.

 




2024-06-22

குடி மகனே குடி!

 குடி மகனே குடி!

__________________________________

ருத்ரா


தப்பில்லை.

உன் உள்நாக்கைக்கொண்டு

உரசி உரசி

இந்த வானக்கூரையை

இடித்துத்தள்ளு.

அப்புறம் வெட்டவெளிதானே

உன் கோவணம்.

உனக்குள் நொதித்த‌க் 

குமிழிகளையெல்லாம்

வேதங்கள் என்று சொல்லு.

புராணங்கள் என்று வாந்தியெடு.

இன்னும்

மனு சாஸ்திர மெத்தனாலையும்

கலக்கு கலக்கு 

என்று கலக்கிக்கொண்டே இரு.

மக்கள் என்று

மனித வெளிச்சங்கள் என்று

எதுவுமே

இங்கு மிச்சம் இருக்க வேண்டாம்.

புல் பூண்டுகள் மட்டும்

புருஷ சூக்தம் 

சொல்லிக்கொண்டிருக்கட்டும்.

போதையை வைத்துக்கிறுக்கியதெல்லாம்

புரிந்து கொள்ள மீண்டும்

போதையை ஏற்றிக்கொண்டாக வேண்டும்.

யாகத்தில் குதிரைமாமிசங்கள் மட்டும்

வெந்து கொண்டிருக்கட்டும்.

யாருக்கு இவை?

பிரம்மனுக்கா?

இங்கே எல்லாம் வெந்து வெந்து

தின்று தீர்க்கப்படும்

பிரம்மனையும் சேர்த்து தான்.

அப்படியும் 

பிதுங்கி வழியும் சமஸ்கிருத எச்சில்களில்

பிரம்மத்தை தேடி

அலைவதும் வீணே.

சோமச்செடியை நசுக்கிய‌

ரசத்தில் நுரைத்த‌

பொய்யே பிரம்மம்.

சரி தானே...

சஹநாவவது சஹநோ புனக்து..

சொல்லுங்கோ..சொல்லுங்கோ

நாழியாறது

நாலு ஆத்துக்கு போணுமோ 

இல்லியோ...


_______________________________________________________________










விடுங்கள் பிழைத்துப்போகட்டும்

 விடுங்கள் பிழைத்துப்போகட்டும்

___________________________________

"பேப்பரட்டீஸ்"




என்னத்தை எழுதுவது என்று

எழுதி முடித்து 

அதோ கசக்கி தூக்கி

எறிந்தாயிற்று.

எழுத்து எதையோ முட்டிக்கொண்டு

முரண்டிக்கொண்டு 

நிரடுகிறது இடறுகிறது..

முரண்படு முரண்படு

அப்போது தான் உன்னை எரிக்கும்

தீயை உணர்வாய்.

வேண்டாம் வேண்டாம் 

கன்னத்தில் போட்டுக்கொள்.

கண்களை மூடிக்கொள்...

உடன்பாடு என்று

சாக்கடைச்சேற்றை அள்ளிப்

பூசிக்கொள்.. 

இப்படி

கவிதைகளுக்கும் 

இலக்கியங்களுக்கும்

காகித கசக்கல்களுக்கும்

குப்பைத்தொட்டிகளுக்கும் இங்கு

பஞ்சமில்லை.

விடுங்கள் 

விருதுகள் பிழைத்துப்போகட்டும்.


_______________________________________________

அது யார் "பேபரட்டீஸ்" என்று கேட்கிறீர்களா?

அவன் பெயர் எழுதப்பட்ட காகிதங்களைக்கூட

சிந்திக்க வைத்தான் சாக்ரட்டீஸ்.

இன்று வெறும் பேப்பர்கள்தானே உலாவருகின்றன.

உலகம் மற்றும் உலக மானிடம் என்பது

எங்கே இருக்கிறது என்று

உற்று நோக்கவேண்டிய டெலஸ்கோப்புகள் தான்

நம் கண்டுபிடிப்புக்கு காத்திருக்கின்றன.

இந்த "பேப்பரட்டீஸும்" இப்படி ஒரு கனவு வாதியே.

___________________________________________________________








2024-06-21

விஷ சாராயம்.

 



விஷ சாராயம்.

___________________________________


பச்சையாகச்சொன்னால்

சமுதாய எதிரிகளின்

இச்சையான சொல் இதுவே தான்.

சில எக்காள ஊடகங்களின் 

ஊது குரல்களும் இதுவே தான்.

கூலி வர்க்கம் தானே

விடுங்கள்

ஏன் இந்த கூச்சல்?

வேர்வையின்

உப்புக்கரிக்கும் வர்க்கத்தின் மீது

உப்பரிகை வர்க்கத்தின் பார்வையும்

இது தானே.

கொச்சைப்படுத்தப்பட்ட‌

பொருளாதார சங்கிலிகளில்

நைந்தவனாய் நாயனாய்

கூளமாகிப்போனவனா மனிதன்?

அரசியல் என்றால் என்ன?

இதில் இன்னும் கொஞ்சம் கிக்

கிடைக்குமா?

என்று தேடிக்கொண்டே இருப்பவனா

இவன்?

ராமன் ஆண்டால் என்ன?

ராவணன் ஆண்டால் என்ன?

ஓட்டு அப்பங்கள்

பிய்த்து பிய்த்து

தின்று பார்த்தும்

"டிஜிட்டலில்" சுட்ட‌

அந்த அரை வேக்காடுகளின்

குடியாட்சிகளில் ருசியே இல்லை.

சோமக்கள்ளில் தான்

ஆயிரம் ரெண்டாயிரம் வருடங்களாய்

மந்திரங்கள் சொன்னோம்.

மெத்தனால் அங்கே எந்த‌

எத்தனால் கலக்கப்பட்டது?

வர்ணப்போதைகளில்

மனிதம் இங்கே

இன்னும் இன்னும்

பிணங்களே தான்.


______________________________________________

ருத்ரா.

2024-06-20

தவளைக்கல்

 


தவளைக்கல் எறிந்தது

போல் இருந்தது.

வட்டம் வட்டமாய் 

பளிங்குப் பரப்பில்

கவிதைகள் தோற்றுக்கிடந்தன.

அந்த அலைகள் யாவும்

விழிகள்...விழிகள்..

அவ்வளவு தூரத்துக்குப்போய்

மூழ்கிய போது

அந்த ஓட்டாஞ்சல்லி

கால்களை அகல விரித்து

தாவும் தவளையாய்

காட்சிக்குள் கரைந்தே போனது

மூச்சு இரைக்கும் துடிப்பு.

விழுங்கிய தருணங்களே

பிரசவித்து உயிர்த்தன.

மலைகளின் பின்னிருந்து

உதயமானது போல்...

எல்லாம் புதிது.

பெண்ணே!

உன் ஓரப்பார்வைக்குள்

இத்தனை ஏவுககணைக்களைக் 

கொண்டா அந்த‌

தவளைக்கல் எறிந்தாய்.

__________________________________________

அஞ்சிறைத்தும்பி.

தோட்டத்துக்குள்





என்னை

ஏன் எழுப்பினாய்?

எழுப்பியது அம்மா தான்.

பத்து மாதம் தூங்கி

என்னைத்தூங்கவிடாமல் 

பண்ணினாயேடா..

போதும் எழுந்திரு.

இந்த உலகம் ஒரு வினாடியில் கூட‌

சும்மா இருப்பதில்லை..

பையன் 

பெரிய ஆளாய் வரவேண்டும்

அவள் கவலை அவளுக்கு.

என் கவலையின் வண்ணத்திரைப்படம்

இப்போது தான்

கனவு ரீல் விட்டுக்கொண்டிருக்கிறது.

பட்டாம்பூச்சி தோட்டத்துக்குள்

நுழைந்து விட்டேன்.

கொத்து கொத்தாய் மில்லியன்களாய்

எத்தனை எத்தனை

அங்கே மொய்த்துக்கிடக்கின்றன.

அந்த ஒன்று எங்கே?

அந்த சிறகு ஓரத்தில்

ஒரு மச்சம் உண்டே...

தெரியவில்லை

அடுத்த கனவில் பார்ப்போம்.

போர்வயை சலிப்போடு

உதறினேன்.


_____________________________________________________‍

அஞ்சிறைத்தும்பி.

2024-06-19

இரைவனே இப்போது மிச்சம்.

 இறைவா! எங்கே இருக்கிறாய்?

_________________________________________

சொற்கீரன்.




இறைவனிடம்

என் மனம் திறந்து

அவன் மனம் திறந்து

பரிமாறிக்கொள்ளலாம் 

என்று பார்த்தால்

இவர்கள் மறைத்துக்கொண்டல்லவா

இருக்கிறார்கள்.

நான்கு திசைகளிலும் மறைத்து

நான் மறை என்றார்கள்.

சரி 

நீங்களே

மந்திரம் சொல்லிக்கொள்ளுங்கள்.

நாங்கள்

வெள்ளைக்காரன் சன்னல் வழியாக‌

பிரம்மத்தைப்பார்த்துக்கொள்ளுகிறோம்

என்றால்

அய்யோ

கடவுளையே தீட்டு ஆக்கிவிட்டார்களே

என்று 

கோர்ட்டுக்கே போய்

அரசியல் சாசனம் என்று

அட்டை மட்டும் போட்டுக்கொண்டிருக்கும்

அந்த மனு சாஸ்திரத்தையே

நம் தலையில் பாரம் ஏற்றினார்கள்.

கடவுளுக்கே அந்த அநீதி பொறுக்காமல்

இவர்கள் மீது அவர்

அம்பு விட்ட போது

அந்த பிரம்மத்துக்கே

பிரம்ம ஹத்தி தோஷம் வந்து விட்டதாய்

சம்ப்ரோக்ஷணம் செய்து

அந்த பிரம்மத்தை

அசுத்தத்தாலேயே

அபிஷேகம் செய்தார்கள்.

அவமானம் தாங்காமல்

பிரம்மம் எங்கோ போய்விட்டது.

பொருள் தொலைந்து போன‌

ஸ்லோகங்களை மட்டும் தான்

உமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சூழ்ச்சிகளுக்கு

இரையாகிப்போன‌

இரைவனே இப்போது மிச்சம்.


______________________________________________



2024-06-18

எலியட்டுக்கு அது போதும்!

 எலியட்டுக்கு அது போதும்.

__________________________________________

சொற்கீரன்



பாழ்நிலங்கள் என்ற தலைப்பில்

டி எஸ் எலியட்

மனம் வெதும்பியிருக்கிறார்.

இந்த முட்காட்டில்

எந்த ரோஜாவுக்காக

நீங்கள் எலும்புக்குவியலாய்

நொறுங்கிக்கிடக்கிறீர்கள்?

சொற்கள் தானே

அவைகள் உளிகளா என்ன‌

என்று

அலட்சியமாக 

நீங்கள் 

கடந்து போய்க்கொண்டிருக்கலாம்.

ஆனால் அந்த சிற்பங்கள்

நம் மனத்துக்குள் எல்லாம்

ரத்தம் வடித்துக்கொண்டிருக்கிறதே..

இதோ இந்த உலகம்

இப்படித்தான் முடிந்து போகப்போகிறது

என்று...

ட்ரம்ஸ் அடிக்கிறானே!

அது அச்சமா?

நம்பிக்கையின் கருச்சிதைவா?

கனவுகளின்

காகிதக்கசக்கல்களா?

இன்று ஜேம்ஸ்வெப் தொலைநோக்கிகள்

நம் முதுகுத்தண்டில்

சில்லிட வைக்கும் கோட்பாடுகளை

ஊற்றிக்கொண்டே இருக்கிறது.

என் செந்தமிழ்த்தினவுகள்

அந்த செவ்வாய்க்கோளின்

கருப்புக்குழிக்குள்

நம் வேர்ப்பிடிப்புகள் 

இருக்கின்றன என்று

கட்டுரைகள் எழுத வெறியேற்றுகின்றன.

அசட்டு அறிவுகளின் அரிப்புகள்

எங்கெல்லாம் 

கரையான் புற்றுகளாய் 

வால்மீகிகளை

கருவுற்றிருக்கும் என்பதையும் 

சொல்ல முடிவதில்லை.

அவன் கூட தமிழ் இலக்கியத்தின்

மரவ மரத்தையும் (மரா மரங்கள்)

குரவ மரத்தையும் 

தழுவிக்கொண்டு ஓடி 

அம்பு விட்டிருக்கிறான்.

கவிஞன்

மனிதனை "உட்கூடு"அற்றவன்

என்று ஹால்லோ மென் என்றானே.

அண்டத்தின் அந்த கடைசி

சிவகாசி வெடி வெடிப்பதற்குள்

நீ 

சிரித்து விடு.

எலியட்டுக்கு அது போதும்!


_____________________________________________________

2024-06-12

முட்டுக்கொடுத்தவர்கள்

 கல்லாடன் கவிதைகள்

____________________________________________
12.06.2024


முட்டுக்கொடுத்தவர்கள் எல்லாம்
ஆகா ஓகோ என்கிற 
ஜனநாயகத்தூண்கள் அல்ல.
அந்தக்கட்டைக்கால்களையும்
குதிரைபேரம் செய்து
ஒரு சர்வாதிகார மிருகக்குட்டியை
எப்படி தன்
செல்ல பொமரேனியன் ஆக்கிக்கொள்ள முடியும்
என்பதில் கரை கண்டவர்கள் இவர்களே.
கறையாகிப்போனது
நம் ஜனநாயக எண்ணிக்கை கணக்குத்தான்.
"வார் ஃபார் பீஸ்"...
அமைதி அமர்த்திவைக்க போர் என்பார்கள்.
ஏன் அந்த விஷ்ணுவே ஒரு "பெனவெலண்ட் டிக்டேட்ட‌ராக"
அவதரித்து
இந்த ஜனநாயக விரோதிகளை
வதைத்துவிட்டு செல்லலாகாதா என்று
தினமும் விஷ்ணுசஹஸ்ரநாமம் சொல்பவர்கள்
ஏங்கி ஒரு அறிக்கை விடலாம்.
"மாமா...பேஷா செஞ்சுட்டாப் போறது..
கன்யாகுமரிலே பாத்தேளோ இல்லியோ..
இனி இந்த "தேசவிரோதிகள்" தலைகளையெல்லாம்
கொய்யாமல் விடாது என் விஷ்ணுச்சக்கரம்."
முதல் தலை அவருடையது தான்.
3வது முறையிலிருந்து இன்னும்
3000ஆவது வரைக்கும் இது தான்.
அரக்கர்கள் எல்லாம் ஓடி ஒளிந்தார்கள்.
ஏனென்றால்
தேவலோகமே மிகப்பெரும் கொடிய‌
அரக்கர்களையும் மிஞ்சிய‌
அரக்கர்களின் கூடாரம் ஆகிப்போனதால் தான்.
யூ ட்யூபுகளில்
இனிமேல் இந்த ஏமாற்றுவேலைகள் எல்லாம்
நடக்காது... 
அவர் சோலி முடிஞ்சுது
இவர் சோலி முடிஞ்சுது
என்று
"ஃபால்ஸ் ஹோப்" கொடுக்கும்
அறிவாளிப்பேச்சாளர்களே!
அதோ அந்த‌
காஞ்சுபோன புல் கூட‌
எழுந்து கொண்டு இனி பற்றிகொள்ளும்
என்கிற எதேனும் ஒரு 
இக்னிஷன் பாய்ண்ட்
புலப்படும் வரை இந்த‌
புலம்பல் காவியங்களுக்கு
முற்றுப்புள்ளி வையுங்கள்.
"விண்குழலின் புல்லாங்குழல்கள்"
விடியல்கள் தருவதில்லை.
__________________________________________________




______________________________________

2024-06-11

சொடக்கு எடுத்துக்கொண்டிருங்கள்.

சொடக்கு எடுத்துக்கொண்டிருங்கள்.

______________________________________

கல்லாடன்.




அழகான 

பெண்ணின் புகைப்படம்

ஒன்று போதும்.

அதில் சொற்களை

ஈ மொய்க்கவிட்டு

லைக்குகளை

ஆயிரக்கணக்கில் 

ஜி ஐ எஃப் பாப்கார்ன்ஸ்களின்

துள்ளல்களில் கோர்த்து

உன் முகச்சன்னல்களை

தினம் தினம் 

திறந்து மூடுகிறாய்.

இன்று 

பிறக்கும்போதே

இறந்து பிறப்பவை தான்

கவிதைகள் என‌

உலா வருகின்றன.

ஏன் ப்ரொ?

இத்தனை காழ்ப்பு?

தெரியவில்லை.

சொற்கள் என்றால்

வல்லினம் மெல்லினம் இடையினம்

இவற்றின்

"சுடிதார்" அலைப்பாய்ச்சல்கள் தானா?

இன்னும் இன்னும்

முறைத்த ஜீன்களின் கிழிசல்

பார்வைகள் தானா?

போதும்..போதும்

மண்டை கலங்கிய பெரிசுகளே

போய் உட்கார்ந்து

ஜனநாயகத்துக்கு

சொடக்கு எடுத்துக்கொண்டிருங்கள்.


___________________________________________________

2024-05-31

தடாகம் ஒலிக்கிறது

  தமிழ்க்கோட்டம்.

____________________________

கல்லாடன்.


"தாமரைப்பூத்த தடாகமடா..."

இசைப்பேரரசு தண்டபாணி தேசிகரின் 

தமிழ்த்தேன்குரல் தெறிக்கவிடும்

திராவிட மகரந்தங்கள்

இந்தியா முழுவதும்

மானிட அறம் பாடட்டும்.

ஆரியத்தின்

அரிதார சூழ்ச்சிகளும்

மானிடத்தைக்கருவறுக்கும் 

அத்துமீறல்களும் அடாவடிகளும்

அழிந்தொழியட்டும்.

பளிங்கு நீரன்ன மனங்களின்

வெள்ளத்தனைய மலர் நீட்டம்

தமிழ்க்கோட்டம் அமைக்கட்டும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் 

நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

என்று நாம் தெளிந்த பின்

முறுக்கு நூல் வர்ணத்து 

முடக்கு வாத பேதங்கள் 

முற்றாக ஒழிந்திடவே

அந்த தடாகம் ஒலிக்கிறது

தடங்கல்கள் யாவும் தவிடு பொடி!


_______________________________

2024-05-30

ஒன்றுமில்லை

 ஒன்றுமில்லை

______________________________________________

கல்லாடன்.



விரீர் என்று

வீடு திறந்து கிடந்தது.

நாள் பட்ட தூசிகளின் படலம்

ஏதோ ஒரு அழுக்கு கம்பளம் 

விரித்தாற்போல் கட்டி தட்டியிருந்தது.

பொருட்கள் வைத்தது வைத்தபடியே 

இருந்தன.

அப்போது தான் ஹேங்கரில் மாட்டிய‌

சட்டை சரியாக மாட்டாமல்

ஒரு பிணம் போல் தொங்கிக்கிடந்தது.

ஒலி அடங்கிய வீட்டில்

இனம் தெரியாத செவிப்புலன்கள் நழுவிய‌

கிரீச்சுகள் கேட்டன.

சுவர்க்கோழிகளும் கூப்பிட்டன.

யாரும் வீட்டில் இல்லை.

மவுனம் என்ற அரக்கன்

மவுனமாக அந்த சோபாவில் 

உட்கார்ந்தது போல் இருந்தது.

பீரோக்கள் கூட திறக்கப்படவில்லை.

உடைக்கப்படவில்லை.

அந்த குடும்பத்தவர்களின்

புகைப்படங்கள் சுவர் முழுவதும்

அப்பிக்கிடந்தன.

எல்லோரும் அங்கே கூடி அமர்ந்து

சள சளப்பது போல்

ஒரு பிம்பம் அல்லது நிழல்.

புழக்கடைக் கதவுகளும் திறந்தே கிடந்தன.

படுக்கை அறையில்

தலையணைகள் மட்டுமே

கட்டிப்புரண்டு கிடந்தன.

சன்னல்கள் இமைவிரிய 

முண்டைக்கண் துருத்தி 

எட்டிப்பார்ப்பது போல்

திறந்தே கிடந்தன.

நாலைந்து ஊசிக்குருவிகள்

சிரிச் சிரிச் என்று

ஒரு இனிமையை 

இசை அமைத்துக் கொண்டிருந்தன.

அடுப்படியில்

காய்கறிகள் இறைந்து கிடந்தன.

அரிசி டப்பா சீனி பாட்டில்

காப்பிப் பொடி பாட்டில் எல்லாம்

மவுனமாய்

கொலு வைத்துக்கொண்டிருந்தன.

கிருஷ்ணன் 

மரக்கிளையில் உட்கார்ந்து கொண்டு

கோபிகைகளின் புடவைகளை

சுருட்டி வைத்துக்கொள்ள 

கோபிகைகள் நீர் மட்டத்தில்

அமிழ்ந்தும் அமிழாமலும்

கைகள் உயர்த்திய படியே

ஆனால் ஒரு நிசப்தமான‌

நிலையில் நின்று கொண்டிருப்பதாய்

ரவிவர்மா வரைந்திருப்பாரே

அது தான்

அங்கே உருவெளித்தோற்றம் 

காட்டியது.

ஒரு சர்வாதிகாரம்

இப்படித்தான்

ஜனநாயகத்தை

சுருட்டி வைத்துக் கொண்டு

போக்கு காட்டுமோ?

என்ன நடந்தது?

அந்த வீட்டில்.

அருகில் விசாரித்ததில் ஒன்றுமே

தெரியவில்லை.

ஆனால் 

மனிதம் எனும்  மாண்பு 

அங்கு தோலுரிந்து துகிலுரிந்து

எல்லாம் இழந்து ஒரு கொடூரத்தீயை

எரிய விட்டுக்கொண்டிருக்கிறது

என்பது மட்டும்

கிராஃபிக்ஸாய் 

காட்டிக்கொண்டே இருக்கிறது.

எல்லாம் முடிந்த காட்சியா?

இனிமேல் தான்

எல்லாம் துவங்கப்போகிறது

என்ற காட்சியா?

அரசியல் வக்கிரங்கள்

என்னென்னவோ "ஹோலோ கிராஃபிக்ஸ்"

காட்டலாம்.

போகட்டும்.

ஒன்றுமில்லை.

அங்கே ஏலியன்கள் இருக்கின்றன‌

என்று சொல்லிக்கொள்வோம்.


___________________________________________________________





மான் தோலை விட்டு ....

 தியானம்

__________________________________________

கல்லாடன்.


கண்ணை மூடிக்கொண்டாய்.

மூக்குத்துளைகளை

விரற்பிடிக்குள்

பிடித்து பிடித்து

வீணை மீட்டினாய்.

ஏதோ குண்டலினி அண்டலினி என்று

ஸ்லோகங்களை அடுக்கிக்கொண்டு

சிதைகளை அடுக்கிக்கொள்ளாமல்

ஒரு உள் தகனத்துக்கு

தயார் ஆகினாய்.

எங்கோ

பில்லியன் ஒளியாண்டுகள் தூரம்

தாண்டி நிற்கும்

அந்த பரஞ்சோதியைக்கூட‌

கொக்கிப்போட்டு

இழுத்துக்கொள்ளலாம் என்றெல்லாம்

சொற்பொழிவுகளை தயார் செய்து

எழுத்திக்கொடுத்த‌

அந்த பி ஹெச் டி காரர்களின்

காகிதங்களும் கையில் ரெடி தான்.

இதுவும் ஆத்மீகத்தின் 

ஒரு குவாண்டம் என்டாங்கில்மென்ட் தான்

என்று பரபரப்போடு கூறுவாய்.

வாயில் ஈ நுழைவது தெரியாமல்

கேட்பவர்கள் உறைந்து போவார்கள்.

சொற்களின் குடலையெல்லாம்

உருவியெடுத்து

பொய்மை மசாலாக்கள் சேர்த்து

அவதார ஆவேசங்களோடு

சுடச் சுட அப்புறம்

நீ பிதற்றும்

சொல்லாடல்களை

ஒத்திகை பார்க்கும்

உள் அரங்கக்கூடாரத்தில் மூடிக்கொண்டு

முனகிக்கொண்டிருக்கிறாய்

சத்தங்கள் எல்லாம் வெந்து அவிந்து போன‌

நிலையில்...

நீ என்ன சொல்ல வருகிறாய்?

நீ இன்னும் உன் ஓர்மைக்குள்

பிடித்துக்கொள்ளவே இல்லையே.

நான் இல்லை இல்லை என்று

எத்தனையோ முறைகள்

மவுனமாய் உனக்குச்சொல்லியும்

அந்த இல்லாத உண்மையை 

நீ இன்னும் 

தேடவே இல்லையே.

மீண்டும் மீண்டும்

பொய்மை வலை பின்னி

இந்த வெறுமையை பிடித்து விட்டேன்

என்று

பாஷ்யங்களின் எக்காளம் ஊதுவதற்கு

கன்னம் புடைத்து

கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்தது போதும்.

முதலையிடம் கடன் வாங்கிய கண்ணீரை

முதலையிடமே கொடுத்து விட்டு

எழுந்து போ...

ஒரு கேளா ஒலி எனும் ஒரு அல்ட்ரா சானிக்ஸ்ல்

கடவுள் 

விரட்டியது உணர்ந்து

மான் தோலை விட்டு 

அவர் எழுந்துகொள்கிறார்.


________________________________________________________________




2024-05-27

கல்லாடன்.

 கவிப்பேரரசு அவர்களே

_______________________________________

கல்லாடன்.


கவிப்பேரரசு அவர்களே!

மரபுச்செய்யுள் எனும்

மணி மண்டபத்தில்

கவிதைகள் 

சிறைவைக்கப்பட்டிருந்த‌

காலம் ஒன்று உண்டு.

எதுகை போனை என்பது

வெறும் பூட்டு சாவிகள் இல்லை.

தமிழின் வைரச்சொற்களுக்கு

பட்டை தீட்டுவதும் 

அவையே தான்.

கரு தரித்து உரு தரித்து

வந்த தமிழ்ச்சொல்

தான் வழிந்த தடம் யாவும்

தேனாறுகளாய்

பாய்மம் பெறும்

பான்மையோடு பால் வார்த்த‌

சொல் நிலவுகள் உலவும்

பொன் முற்றங்களே

புதுக்கவிதைகள் ஆயின.

சுட்டெரிக்கும் அறச்சீற்றம் கூட‌

அந்த முற்றங்களில்

முகம் காட்டி

மானுடம் பூசிய‌

புதுத்தமிழ் வானங்கள்

அங்கே குமிழியிட்டன.

புதுக்கவிதைகள்

செய்யுட்களில் 

நுரைக்கோட்டை கட்டிக்கிடந்து

புலப்படாத நூற்றாண்டுகளில்

பனை ஓலைக்கீறல்களில் கூட‌

புதுக்கவிதை சிற்பம் செதுக்கியது.

குறுந்தொகையில் 

அப்படி ஒரு சொற்சிதறல்

"கல் பொரு சிறு நுரை"...

காதலின் இன்பம் 

பிரிவின் துன்பத்துள் தான்

சுடர்ந்து சுடர்ந்து 

இன்று வரை 

வெளிச்சம் காட்டிக்கொண்டே

இருக்கிறது.

இந்த சொல்லாடலே 

அந்தப்புலவனுக்கு பெயர் சூட்டியது

"கல் பொரு சிறு நுரையார்"

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே!

உங்கள் ஒரு சொல் 

இன்னொரு சொல்லை காதலிக்கும்.

வைரங்கள் வைரங்களை

கட்டியணைக்கும்

கதகதப்பில் கூட‌

காதலின் "கல் பாக்கங்கள்"

கூடு கட்டிக்கொண்டிருக்கும்

இனிய ஆவேசங்களில் உங்கள்

ஆற்றல்களின் மனப்பீலிகள்

கற்பனை அலை விரிக்கும்.

போகட்டும் 

மிகவும் குறுகிப்பொன‌

இந்த உலகத்தைத்தூக்கி

குப்பையில் போடுங்கள்.

அந்த நோபல் பரிசுகளின்

தூசு துரும்புகளால்

மாசு பட்டுப்போக வேண்டாம்

உங்கள் 

கணியன் பூங்குன்ற 

பனை நுங்கு மென்மைத்

தமிழ் இனிமைப் பாட்டுகள்.



_________________________________________

2024-05-18

சாய்வு நாற்காலியில் ஒரு ஏக்கம்.


சாய்வு நாற்காலியில் ஒரு ஏக்கம்.

-------------------------------------------------------

விடியன் 



ஊசியில் நூல் கோர்க்க 

முடியவில்லை.

கண்ணும் கையும் 

ஒத்துழைக்க வில்லை.

இந்த மாபெரும்  

வானக்கிழிசலை  

எப்போது தைத்து முடிப்பது?

--------------------------------------------------------


2024-05-17

வார் ரூம்

வார் ரூம்

‍‍‍‍_____________________________________

கல்லாடன்

  


ஒரு முதுகெலும்பை

படைத்து வைத்துக் கொண்டு

நிமிர்ந்து நிற்பதாய்

டிங்கரிங் செய்து கொண்டிருக்கும்

முட்டாளே!

இப்போது பார்..

சைத்தான் கர்ஜித்தான்.

கடவுளை சவாலுக்கு அழைத்தான்.

மூளைக்குள் கடவுளாய் புகுந்து

பக்தியாய் சகதியாய் சாதிகளாய்

சாக்கடையாய் 

சிந்தனைகள் அற்ற 

முடை நாற்றமெடுத்த 

உலகம் ஆக்கினான்.

இறுதியில் நாடகம் முடிந்து

இருவரும் அந்த க்ரீன் ரூமுக்குள்

கை குலுக்கிக்கொண்டே

நுழைந்தார்கள்.

அறிவு கல்லறைக்குள் படுத்துக்கொண்டது.

மனிதம் மழுங்கிப்போனது.

மதம் தூவியது எங்கும்

மரணத்தின் விதைகளை.

______________________________________________


அகழ்நானூறு‍ 75"

 



அகழ்நானூறு‍  75"

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________________________

சொற்கீரன்


(அகநானூறு பாடல் 186..புலவர் தெரியவில்லை)


கல்லூற்று கலித்தநீர் கவிழ்த்த கை

நீடு வாங்கி மருப்பு பொருதிற‌ங்கும்

மல்லல் மழகளிறு பிடி யுண்ண 

நீர் வார்க்கும் கற்சுரம் கனைகுரல்

தழல் சடை வெண்வெயில் ஞாயிற்றின்

நீடூழி முள்ளிய பரந்தலை ஒரு கண்

நிழல் பார்த்து ஏங்கி நடுக்குறும் ஆறும்

அடு கடாம் நீந்தல் யாவும் பொருட்டறன்று.

பொருள்வயின் தேட்டை பொரி பரல் இடற‌

பொலங்கிளர் அவள் முகத்து மைவிழி படுப்ப‌

ஓர்ந்து உய்த்து நீள் அத்தம் அவண் நண்ணி

வேனில் ஓதியும் நிறம் பெயர்த்து வெரீஇ

யாஅம் ஏறியபின் பாண்யாழ் ஆங்கு 

பாலை இன் பண் பனி இசைபருகிக்

கிடத்தலின் நயமும் நனி கண்டு ஏகும்

தலைவன் ஊரும் பொள்ளா வெள்ளிடை

அவள் செஞ்சீறடி பளிங்கின் தோற்றும்

கல்லென் ஆறும் அவன் களி கூட்டும்.


_________________________________________________________

மேட்ரிக்ஸ் (நிரல்கள்)

 




மேட்ரிக்ஸ்  (நிரல்கள்)

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________________________

"கல்லாடன்"

‍‍‍‍‍‍‍

‍‍‍‍‍


ஒரு முட்டுச்சந்துக்குள்

நுழைந்து விட்டோமா?

செயற்க நுண்ணறிவு எனும் 

கூரிய முனை

குத்திக்கிழித்ததில்

அந்த "பிரம்மம்" எனும்

பேரண்டத்தின் பெரு அண்டம்

பிரசவித்து விட்டது.

அது பொய்மை எனும் மெய்மை

என்று புலப்படும் முன்

மனிதனின் ஆதிக்க வெறி

பல் வேறு தந்திரங்கள் கொண்டு

மூட முயல்கிறது.

ஆட்சி எந்திரங்களின்

கட கடத்த குரூர‌

பல் சக்கரங்களில்

அப்பாவித்தனமான‌

மனிதப்பூச்சிகள்

இரையாக்கப்படுகின்றன.

பல பல நூற்றாண்டுகளாய் 

ஊசிப்போன கருத்தோட்டங்களில்

தினம் தினம் சிலந்திவலைகள் 

பின்னப்படுகின்றன.

இங்கு நமது மூல‌

அறியல்களுக்கும்

அறிவீனங்களுக்கும்

மூலன் வியாசன் என்று தானே

சொல்லப்படுகிறது.

இந்த ஏ ஐ ஆயிரம் ஆயிரம் 

வியாசன்களை

படம் வரைந்து பாகம் குறித்துக்காட்டி

பிம்பங்களை கோடி கோடியாய்

குவித்து விடும் போலிருக்கிறதே.

இந்த கணினி யுகம்

முத்தி முத்தி 

மூக்கறுந்து போன‌

இவர்களின் கலியுகங்களின் 

எல்லாவற்றையும் கருச்சிதைய வைத்து

ஒரு புரட்சியின் 

விளிம்பில் நின்று கொண்டு

இன்னும் பல விளிம்புகளுக்கு போவேன்

என்றல்லவா

கொக்கரித்துக்கொண்டிருக்கிறது.

மூளை நியூரான்களுக்குள்

பயணித்து

கடவுள் எனும் அந்த‌

கானல் நீர்க்குதிரையை

செதில் செதிலாக 

செதுக்கி நமக்கு

டாய் ஸ்டோரி 

சொல்ல வந்து விட்டதே.

அறிவியல் கிளர்வின்

"மேட்ரிக்ஸ்" சரங்கள்

நிரல்களின்

மழை மழையாய் நம்

மொண்ணையான

மண் கோட்டைகளை எல்லாம்

அரித்துக்கொண்டு அடித்துக்கொண்டு

ஓடுகின்றன.

அறிவின்

மனிதம் கொண்டு சிந்திக்கும்

சமூகம் கொண்டு பிறப்பிக்கும்

நியாய சூரியன்களே இனி

இந்த இருட்டுப்பிண்டத்தை

கிழித்து

முளைத்து வரும்.


________________________________________________________









2024-05-12

அன்னையர் தினம்


அன்னையர் தினம்.


___________________________________________


ருத்ரா



என்னைக் கொண்டாட‌


இன்றைக்கு ஒரு தினம் மட்டும்


போதுமா?


மகளே


மகனே


ரீல்ஸில் ஆடி ஆடி


நிறைய லைக்குகள் அள்ளுவீர்களே


எனக்காக


அந்த கைபேசிச் சன்னல்களில் வரும்


சொர்க்கத்தினவுகள்


பலி கொடுக்கப்படுவதை


நான் விரும்பவே இல்லை.


அன்று என்றைக்கு உன்னை


மசக்கையில் ஓங்கரித்தேனோ


அந்த ஓங்காரம் தானே


என் பிரம்மம்.


இந்த வலி


பல கோடி வருடங்களாய் 


பின்னிய சங்கிலியில் செய்யப்பட்டது.


இதன் ஆதாரம் சேதாரம்


எல்லாமே இந்த "பொன் வலி" தான்.


இப்படி 


வலித்தும் அந்த வலியை மறைத்தும்


மாயம் செய்யும் 


பிரம்மையை போர்த்திக்கொண்டவளே


பெண் எனப்பட்டவள்.


பொன்னே!மணியே!


என்று நான் ஒலிப்பதெல்லாம்


எந்த அட்சைய த்ரிதியைகளின்


விளம்பர தூசி துரும்புகளாலும்


மாசு பட முடியாதது.


கண்ணே!


உன்னை பிரசவித்து வலித்து


அதை அரங்கேற்றும் காட்சிகள் 


இருக்கட்டும்.


ஆனால் 


உன்னைப் பிறக்காமலேயே


தத்து எடுத்ததையே


உன்னைப் பிறப்பித்ததாய்


புல்லரித்து 


அன்பின் பிழம்பாய் தன் மீது 


பூசிக்கொண்டு...அப்புறம்


ஒரு பிரிவின் போது


துடி துடித்துக்கதறும்


"பானுமதி" அவர்களின் "அன்னை" அவதாரம்


நடிப்பு என்று


கொச்சைப்படுத்தப்படுவதே


வலிகளுக்குள் பொறுக்க முடியாத‌


வலியாகும்.


ஒரு உண்மையான 


அன்னையர் தினம்


அந்த சினிமாக்காட்சி ஒன்றே


என்றென்றைக்கும் 


போதும்!


ஒரு அன்னை


த‌ன் குழந்தைக்காக தவிக்கும்


தவிப்பை விட‌


பிறர் குழந்தையை தன் குழந்தையாய்


நினைத்து தவிக்கும் தாயின் தவிப்பு 


ஆயிரம் கோவில்களுக்கு சமம்!


_______________________________________________

2024-05-11

மகனே...

 



மனிதனே

என்று

கடவுள் முணுமுணுப்போடு

அரை மனதாய் கூப்பிட்டார்.

மனிதனின் கூகிள்முன்

அவரது மழுவாயுதம் சூலாயுதம்

எல்லாம்

மடங்கிக்கொள்ளுமே

என்ற தயக்கம் தான்.

இருப்பினும்

அவர் தானே கோடி கோடி

பிரபஞ்சங்களின் கரு.

பரவாயில்லை இந்த விளையாட்டு யுத்தம்

என்று

மெல்லிதாய் "மகனே" என்றார்.

இப்போது தான்

அந்த ஜெல்லி போர்த்த கூகிள்குழம்பு

அவருக்கு வழி விட்டது.

நுழைந்து விட்டார்

நுங்கு போல் குழைந்து கிடக்கும்

அந்த மனிதனின் முரட்டுப்பாறைக்குள்.

மகனே

உன்னிடம் கேட்கிறேன்

அந்த ஞானப்பழத்தை என்னிடம் 

கொடுத்து விடு.

உன் சிந்தனைகளால்

உன் அறிவுக்கூர்மையால் 

எச்சில் படுத்தப்பட்டதைக் கேட்கிறேன்.

மனிதனை மனிதனாகவே படைக்க‌

உன் "அல்காரிதங்களை"க்கொண்டு

அலங்காரம் செய்யப்பட்ட 

அந்த‌

ஞானப்பழத்தையே கேட்கிறேன்.


______________________________________________________



ஞானப்பழத்தை...

 



மனிதனே


என்று


கடவுள் முணுமுணுப்போடு


அரை மனதாய் கூப்பிட்டார்.


மனிதனின் கூகிள்முன்


அவரது மழுவாயுதம் சூலாயுதம்


எல்லாம்


மடங்கிக்கொள்ளுமே


என்ற தயக்கம் தான்.


இருப்பினும்


அவர் தானே கோடி கோடி


பிரபஞ்சங்களின் கரு.


பரவாயில்லை இந்த விளையாட்டு யுத்தம்


என்று


மெல்லிதாய் "மகனே" என்றார்.


இப்போது தான்


அந்த ஜெல்லி போர்த்த கூகிள்குழம்பு


அவருக்கு வழி விட்டது.


நுழைந்து விட்டார்


நுங்கு போல் குழைந்து கிடக்கும்


அந்த மனிதனின் முரட்டுப்பாறைக்குள்.


மகனே


உன்னிடம் கேட்கிறேன்


என் ஞானப்பழத்தை என்னிடம் 


கொடுத்து விடு.


கடவுள் குழைந்தார் கெஞ்சினார்.


சரி வாங்கிக்கொள்ளுங்கள்.


டேடா சையன்ஸ் டிகிரி ஏதாவது


வைத்திருக்கிறீர்களா?


அப்படியென்றால்....


அப்போது தான் சாட் ஜி பி டி..ஏ ஐ


எல்லாம் புரியும்.


கடவுளுக்கு மிஞ்சியா கம்பியூட்டர்கள்?



முணு முணுப்பு வாதிகள்


மூச்சடைத்துப்போய் தான் நிற்கிறார்கள்.


கடவுளின் நரம்பு முடிச்சுகள் எல்லாம்


பை க்யூபிட் கேட்களில்


ஃபூரியர் உருமாற்றங்களில் 


கோர்த்துக்கிடப்பது வியப்பு அலைகளில்


விரிந்து கிடக்கிறது.


இருப்பினும்


பிள்ளை விளையாட்டு 


தொடர்ந்தது...


தொடர்கிறது...


தொடர்ந்து கொண்டிருக்கிறது...


சாதி மத சாக்கடைக்குள் 


சப்பளாக்கட்டைகள் வீழ்ந்து கிடக்கின்றன.


"பொன்னார் மேனியனே...


புலித்தோலை அரைக்கசைத்து..."


இசைப்பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறது.


_____________________________________________________________‍



தூங்கப்போனார்...

 தூங்கப்போனார்...

_______________________________________

ருத்ரா



என்ன‌

என்னைக்

கண்டு பிடித்து விட்டாயா இல்லையா?

இன்னும் இல்லை.

உனக்கு ஆயிரம் பெயர் சூட்டி

அழகு பார்ப்பதிலேயே

எல்லாம் முடிந்து விட்டது

என்று 

பிரசாதம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

அப்படியா?

அந்த பிரசாதம் தான் என்ன என்றாவது

தெரிந்து கொண்டாயா?

அதைப்பற்றி என்ன?

எல்லாம் 

சர்க்கரைப்பொங்கலும் புளியோதரையுமாய்

ருசிக்கத்தானே செய்கிறது!

சரி சரி..

என்னைக்கண்டு பிடித்து விட்டாயா

இல்லையா?

அதற்குள் 

அவர் ஸ்லோகங்களால்

திணறடிக்க ஆரம்பித்து விட்டார்.

தன்னைப்பற்றி 

தானே இன்னும் 

ஒரு கணித சமன்பாட்டுக்குள்

வர முடியவில்லையே

என்ற ஏக்கமே

அந்த "எம்பெருமானுக்கு".

அர்ச்சனைச்சீட்டுக்குள் அடங்கி

கோத்திரங்களுக்குள்

சுருங்கிக்கிடக்கிறார்கள்

இந்த "ஜனங்கள்" என்ற‌

ஒரு கவலை மட்டுமே கடவுளுக்கு.

நாமக்கல் நாமகிரித்தாயார் மூலம்

அந்த 

புள்ளாண்டன் ராமானுஜனுக்கு

ஆயிரக்கணக்காய் ஓதிய‌

கணக்குத்தேற்றங்களுக்கு

உலகத்து கணித விஞ்ஞானிகளும்

மோடுலர் ஃபார்ம்

என்று ஒரு துப்பு கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இந்த சுண்டல்வாதிகள் இருக்கட்டும்

அந்த அறிவு தளும்பிய மெண்டல் வாதிகள்

நிச்சயம் 

என்னைக்கண்டுபிடித்துவிடுவார்கள்.

ராமானுஜனின்

மாக் தீட்டா ஃபன்க்ஷன் எனும் நூலேணியில் 

அவர்கள் ஏறத்துவங்கி விட்டார்கள்.

அவர்கள் வழி தனி வழி.

என்னை இல்லைவே இல்லை

என்று சாதித்து தான் 

என்னை அடையாளப்படுத்துவார்கள்.

அறிவின் அடையாளமே

கற்பனை அடையாளங்களையெல்லாம்

அழித்து புறந்தள்ளி

உண்மைக்குள் புகுவது தானே.

இவர்கள் புளுகி புளுகி

புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கட்டும்.

எனக்கு அவர்களே கடவுள்.

நிச்சயம் என்னை அவர்களின் கோயில் உள்ளே

ஒளி கூட்டி உட்கார்த்தி வைத்து

இந்த இருட்டுப்பிண்டங்களிலிருந்து

விடுவித்து விடுவார்கள்.

கடவுள் நிம்மதியாகத்

தூங்கப்போனார்.


________________________________________________________________





2024-05-10

பொறி

பொறி
----------------------------------------------

நாள் என ஒன்று போல் காட்டி
உயிர் ஈரும் 
வாள் மீது தான்
உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்.
திமிங்கிலத்தின் முதுகின் மீதே
குட்டித்தீவு என்று
டூர் போய்க் கொண்டிருக்கிறோம்.
அதெல்லாம் சரி.
தேர்தல் காலத்தில்
உங்களுக்கு எச்சில் ஊற வைத்து
இனம் தெரியாத 
ஒரு மசால்வடையைச் செருகி
உங்களைக் கவ்விப் பிடிக்கும்
அந்த  எலிப்பொறி தான்
உலகத்து நவீன கணிப்பொறி
என்று
பட்டன் தட்டிக் கொண்ருக்கிறீர்களே
எப்போது
விழித்துக்கொள்ளப் போகிறீர்கள்?
---------------------------------------------
ருத்ரா.

டாஸ்மாக்

 

டாஸ்மாக்

____________________________________________

செங்கீரன்



தமிழனே!

நீ இப்படி நுரைத்து நொதித்து

பாட்டிலுக்குள்

கல்லறை கட்டிக்கொண்டிருப்பதே

போதும் 

என்று கிடந்தால்

அந்த வடவன் 

சிந்துபாத் கிழவனாக‌

உன் தோள்மீது 

சவாரி செய்து கொண்டிருக்கும்

அவலத்தை 

எப்போது உணரப்போகிறாய்.

நீ நினைத்துக்கொண்டிருக்கிறாய்

"வெள்ளைக்காலர்" யுகத்துக்கு

பரிணாமம் அடைந்து கொண்டிருக்கிறாய்

என்று.

வெற்றுத்தமிழ் பேசும்

பல்கலைக்கழகத் தாழ்வாரங்கள்

தமிழை உலகம் போற்ற வைக்கும் 

பணியில் 

இன்னும் தொய்ந்து தான் கிடக்கின்றன.

உன் 

நரம்புக்கணுக்களில்

தமிழ் தான் 

எரிமலைக்குழம்பை

பாய்ச்சிக்கொண்டிருக்க வேண்டும்.

நீயோ

குத்தாட்டக்குப்பைகளிலும்

சினிமா மாயையின்

காக்காவலிப்பு நுரைதள்ளும் 

மூடச்சீற்றங்களிலும் தான்

முடங்கிக்கிடக்கிறாய்.

உன் உயிர் மூச்சில்

தமிழின் மின்சாரம் பாய்ந்து

கொண்டிருக்கவேண்டும்.

வடவனின் சூழ்ச்சிச்சாக்கடைகள்

உன்னை

மத போதைகளின் 

ஆபாசக்கிடங்குகளில்

தள்ளிவிடும் முன்

ஓ தமிழா!

வீறு கொண்டு எழு!

தமிழ் 

வாழ்க வாழ்க வாழ்கவே!

___________________________________________


2024-05-09

சோம்னாம்புலிசம்

 சோம்னாம்புலிசம்

_________________________________________

ருத்ரா.


தூக்கத்தில் நடக்கின்ற 

வியாதி தான்

நமக்கு.

எழுபத்திஐந்து சொச்சம் வருடமாய்

அலைந்து திரிந்தும் 

தூங்குகின்றோம்.

அடிமாடுகளாய் அந்த‌

நாலுவர்ணத்தை

மூணு வர்ணமென்று

அசைபோட்டு அசை போட்டு

தூங்கிக்கொண்டு தான் இருக்கிறோம்.

அடிமைத்தனம் கெட்டியான

விலங்குகளை 

சுதந்திரம் என்று

அர்த்தம் எழுதி எழுதி

தூங்கிக்கொண்டு தான் இருக்கிறோம்.

கடவுள் கைநிறைய வைத்திருக்கும்

அபினிப்புராணங்களில்

அமிழ்ந்து கிடந்து

தூங்கிக்கொண்டிருக்கிறோம்.

மனிதனுக்கு மனிதன் 

வாழ்வதற்கு கிடைக்கும் 

உரிமைகள் எல்லாம்

கந்தல்களாய் கிடக்கும் 

கனவுச்சதைகளில் போர்த்துக்கொண்டு

தூங்கிக்கொண்டு தான் 

இருக்கிறோம்.

ஓட்டு எந்திரம் 

நம்மையே பட்டன்கள் ஆக்கி

அமுக்கிக்கொண்டிருக்கும்

ஓர்மையும் இன்றி

கூர்மை மழுங்கிப்போன‌

சமூகநீதிகளால்

அடைபட்டு 

ஆனாலும் தூங்கிக்கொண்டிருக்கிறோம்.

கனவில் கழுவேற்றப்படுகிறோம்.

நனவில் பிய்ந்து கிடக்கிறோம்.

ஆனாலும்

தூங்கிக்கொண்டு தான் இருக்கிறோம்

துருப்பிடித்த நூற்றாண்டுகளின்

வரலாற்று ரணங்களோடு...


_______________________________________________


2024-05-08

"கல்பொரு சிறுநுரை..."

"கல்பொரு சிறுநுரை..." _____________________________ கல்லாடன் அந்த பெருமூதாட்டி நரம்பு விடைத்து எலும்பு துறுத்தி நடைபாதையில் சுருண்டுகிடந்தாள். அருகில் போய் கேட்டதில் சொன்னாள் என் கூடு சிதைந்து போனது. எல்லாம் போனபின் இங்கு தான் என் குறிஞ்சி முல்லை மருத நெய்தல் பாலைத்திணைகள் எல்லாம்.. இவ்வளவு மூச்சும் ஒலியும் சங்கத்திணைகளா? வியப்புற்று வினவினேன். தமிழ் ஆசிரியையாய் இருந்து "ஓய்வு"பெற்றும் அவள் வாழ்க்கை இங்கே கொண்டு வந்து விரட்டியிருக்கிறது. பாட்டி என அழைக்க முனைந்த போதும் அவரை அம்மையே என்று விளித்துக்கேட்டேன். கன்னித்தமிழ் என்றாலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு ஆன‌ கிழவித்தமிழ் தானே.. அவர் குரல் சீறியது. கிழமை என்பது உரிமையின் கனல். இந்த மண்ணின் கிழவிக்கு இன்னும் கருப்பையில் நெருப்பை மூட்டிக்கொண்டிருப்பது அவள் "பகுதி விகுதி" உரிந்த‌ சொற்கூட்டமே. அந்த சொற்கூட்டம் இன்னும் ஆயிரமாயிரம் சூரியப்பிஞ்சுகளை தூவிக்கொண்டிருப்பது உனக்குத்தெரியுமா? எந்த சொற்கள் அம்மையே? ..கல்பொரு சிறுநுரை... அவள் கண் குழியிலிருந்து காலம் முழுதும் அவிந்து போன‌ ஒரு மூளி ஒலிப்பிழம்பிலிருந்து தேனின் மெல்லருவி கசிந்து கொண்டிருந்தது. _________________________________

2024-05-07

சுஜாதாவின் விசைப்பலகை

 



சுஜாதாவின் விசைப்பலகை


______________________________________________ருத்ரா






சுஜாதாவின் "யாகம்"

________________________________



"என் கையைப் பின்பக்கத்தில் கட்டினாள்."அழைத்துச் செல்லுங்கள்" என்றாள்.


ஆறு பேர் என்னை நெருங்கினார்கள்."






சுஜாதாவின் "யாகம்" சிறுகதை இப்படி முடிகிறது.




அப்புறம் நம் விஷுவலைசேஷனில்


எல்லாம் தெரிகிறது.


எல்லாம் புரிகிறது.


ஒரு வீட்டுக்கு ஒருவனை பலிகொடு.


ஒரு ஊருக்கு நாலு பேரை பலிகொடு.


ஒரு நாட்டுக்கு


ஆயிரம் ஆயிரமாய் பலி கொடு.


பிரம்மம் எனும் ஆர்கசம் எனும் பேரின்பம்


அப்போது தான் உச்சம் பெரும்.


வேத ஸ்லோகங்களின் 


அடி அமிலம் 


இப்படித்தான் 


மனிதனோடு சேர்த்து 


சமூகத்தை எரிக்கிறது.


எரிக்கிறதை


புனிதமாகச்சொன்னால் "யாகம் அல்லது யக்ஞம்".


கோத்ராவும் புல்வாமாவும்


அப்படித்தான் என்று


பத்திரிகைகள் எழுதலாம்.


வேதங்கள் காற்றின் ஒலிகள்.


அது மனித நாக்குகளில் வருடப்படும்போதே


அபவுர்ஷம் என்பதிலிருந்து


புருஷம் ஆகி தீட்டு ஆகிவிடுகிறது.


அப்புறம் எதற்கு இந்த‌


புருஷ சூக்தங்களும்


வர்ணாசிரமங்களும்?


சுஜாதா 


(அவர் பூணூலில் இருந்தால்)


இப்படி எழுதுவது


ஒரு எழுத்தின் நேர்மையின் நெருப்பாகத்தான்


இருப்பதாக நமக்கெல்லாம்


சிலிர்க்கிறது.


ஆரியம் திராவிடம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம்


இன்னும் வடமொழிகளும் கூட‌


ஃபிஸிக்ஸின் "க்ராண்ட் யுனிஃபிகேஷன்" போல்


ஒரு புள்ளியில் நிலைகுத்துகிற வேலையை 


சுஜாதா அவர்கள் செய்திருப்பார்.


இப்போதும் கணிமொழிக்குள்


தமிழின் ஒரு சங்கப்பலகையை


தோண்டியெடுக்கும் தமிழ் அறிவு ஜீவிகள்


செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.


சுஜாதாவின் எழுத்துக்குள்


நம் தமிழ் தொன்மையின் ஃபாசில்கள் கூட‌


உறங்கிக்கொண்டிருக்கலாம்.


வேதத்தை அகழ்வாராய்ச்சி செய்தால்


தமிழ் எனும் அந்த ராட்சச டினோசார்களின்


எலும்பு மிச்சங்கள் கிடைக்கலாம்.


பக்கங்களை சேர்த்துக்கொண்டே


கடைசி அட்டைக்கு காத்திருக்காமல்


ஆயிரம் ஆயிரம் பக்கங்களை 


அடுக்கிக்கொண்டே போகும்


அசுர புத்தகம் சுஜாதா.


அத்தனையிலும் அறிவுத்தேனின் 


இனிப்புகள் பிலிற்றும்


இன்ப அனுபவங்கள்.


அவர் எழுத்துக்களுக்குள் நுழைந்து


ஒரு ஹிக்ஸ் போசானின்


செக்ஸ் கலைடோஸ்கோப்பை


அதாவது 


("கப்ளிங்க் கான்ஸ்டன்ட்டும்


ஃபெய்ன்மன் டையாகிராம்ஸ்ம்")


சுழற்றி சுழற்றி


படித்துப்பார்க்க ஆசை.


சுஜாதாவின் விசைப்பலகைக்கு


பல கைகள் உண்டு.




____________________________________________________________________

2024-05-04

அகழ்நானூறு-71

 அகழ்நானூறு 71

-------------------------------------

சொற்கீரன்.



எல்வளை ஊர்தரு 

மெலி இறை நோக்கி

பீலி பெய் வருடல்

பொய் மழை தூஉய்

அவன் வரல் எதிர்க்கும்



2024-04-30

மே தினம்.

மே தினம்

----------------------

செங்கீரன்.


உனக்கு இன்னும்

எத்தனை உறக்கங்கள்

வேண்டும்?

ஒரு தடவை விழித்ததே

போதும் என்று

மீண்டும் உறக்கமா?

அறிவுப்பிழம்பின்

அந்த லண்டன் 










2024-04-29

"வாக்"

 "வாக்"

-----------------------------------

பூங்காவில் நடப்பதே

வாழ்க்கை ஆனது.

கண் காது வாய்

மூக்கு எல்லாம்

கிளைகள் இலைகள் சருகுகள்

மற்றும்

காக்காய் எச்சங்கள் தான்.

-----------------------------------------

சேயோன்.






ஹைக்கூ சன்னல்கள்

 

பனங்கட்டையில் 

ஊசியை நட்டு இழு...

எறும்புகள் சிரிக்கின்றன.


தேர்.

---------------------------------------

சேயோன்.



2024-04-26

அவன் அன்றி ஓர் அணுவும்...


யாரோ சாவி

கொடுக்கிறார்கள்.

யாரோ செய்த பொம்மை தான்

நான்.

ஏதோ ஒரு

 "எக்ஸோப்ளானட்டிலிருந்து"

ஏ ஐ மூலம்

எவனோ ஒருவன் இங்கே

என்னை

தும்மச் சொல்கிறான்.

துடிக்கச் சொல்கிறான்.

இப்படி கூட நம் அறிவின் 

சாரம் சோரம் போய்விடலாம்.

அவை

நம் புராணங்களின்

"அல்காரிதங்கள்" என்று கூட

"தீஸிஸ்"கள்

குவிக்கப்படலாம்.

உள்ளே இருக்கும்

உச்சிக் குடுமிகள் யாவும்

நச்சுக் குடுமிகளே.

அதற்காக மனிதர்களை

நசுக்கி நசுக்கி

கொல்கிற 

அந்த வர்ணாசிரமத்தின்

மரண மத்தாப்புகளை

இந்த தீபாவளிக்குள்ளாவது

கொளுத்தி அழித்திட

 வேண்டாமா ?

அதற்கு

முதலில் மூடத்தனத்தின்

வேர் மூலங்களை...

சாதி மத 

சூழ்ச்சிகளையெல்லாம்....

சாம்பலாக்குவோம்.

வரலாறு 

விழித்துக்கொள்ளட்டும்!

--------------------------------------------

ருத்ரா.


















இன்னமும் ஒலிக்கின்றன



பாழும் கிணறு என்று 

தெரிகிறது.

அடியில்

பேரழிவு நிழலாடுகிறது.

ராமரும் கை தொட்டு

கொடுத்து விட்டார்.

வில்லை வளைத்து

முறிக்க காத்திருக்கிறார்கள்.

அக்கிரமங்களின்

அம்பு மழையில்

வரலாறுகள்

கந்தல் கந்தல்கள் தான்.

"யாரங்கே?

அந்த 

தேச விரோதச்சொல்லை

ஒலித்தது?....

யார்? யார்? யார்?...."

சூலாயுதங்களும் 

கதாயுதங்களும்

வெறி கொண்டன.

அவை என்ன சொற்கள் ?

ரத்தச்சேற்றில்

அமிழ்வதாயினும் அவை

இன்னமும் ஒலிக்கின்றன.

"வெல்க ஜனநாயகம்."

--------------------------------------------

ருத்ரா.











,








2024-04-24

ஈசல் சிறகுகள்.



ஐனநாயகம்

என்ற சிந்தனை 

பெரும்பான்மையாக

இல்லாத நாடுகளில்

சிறுபான்மையான

சதுரங்க கட்டங்களே

பகடைகள் மூலம்

ஆள்வதற்கு

பவனி வருகின்றன.

இவர்களின் 

பரமபதக்கட்டங்களில்

சாதி மத பாம்புகளே

ஏணிகளை விழுங்கிவிடும்

அனக்கொண்டாக்களாய்

ஆட்சி செலுத்துகின்றன.

இந்த எந்திரங்களின்

தந்திரமான 

இருட்டு மூலைகளில் தான்

வாக்கு ஈசல்களின்

உதிர்ந்த சிறகுகள்

குவிந்து கிடக்கின்றன.

-------------------------------------------

செங்கீரன்.




"பாவம் மனிதர்கள்"



அந்த பெருமாள் கோயில்

பிரகாரங்களில் சிதறிக்கிடந்த

தானியங்களை

வயிறு புடைக்கத் தின்று விட்டு

அந்த மசூதியின் 

உச்சி மாடங்களில் போய்

ஆனந்தமாய்

அடைந்துகொண்டன

புறாக்கள்.

"பக்கூம் பக்கூம்"

என்று 

பேசிக்கொண்டன

"பாவம்...மனிதர்கள்" என்று.

--------------------------------------------சேயோன்.




2024-04-23

சேயோன் கவிதைகள்

 உலக புத்தக தினம்

----------------------------------

சேயோன்.


அறிவு மரத்தின்

நுனிக்கொம்பர் ஏறி

அஃதிறந்தூக்கிய

பின்னே

மனிதனுக்கு

புத்தகங்கள் வெறும்

காகித சடலங்களே.

ஏடுகளும் சிலேட்டுகளும்

எங்கோ எகிறிவிழுந்தன.

"காலிகோ பைண்டு"

கனத்த புத்தகங்களும்

குப்பைத்தொட்டி

இரைப்பைக்குள்ளே

இறந்து பட்டன.

பிஞ்சு மனிதக்குஞ்சுகள் கூட

கை பேசி சொடுக்கலில்

சாட் ஜிபிடியின்

செயற்கை மூளையில்

அண்டங்கள் அனைத்தையும்

அங்குலம் அங்குலமாய்

அளைந்து

விளையாடுகின்றன.

"குவாண்டம்

எண்டாங்கிள்மெண்டில்"

சன்னலைத் திறந்தால்

ஆயிரம் ஆயிரம் சூரியன்கள்

குளிர் பூந்தமிழில்

பூச்செண்டு 

நீட்டக்காத்திருக்கும்.

---------------------------------------------




















2024-04-22

தலை எது?வால் எது?

 தலை எது? வால் எது?

---------------------------------------------

ருத்ரா.


ஆதியும்அந்தமும் இல்லாததே

"சனாதனம்" என்பவர்களே

பிரம்மத்தின் 

தலை எது? வால் எது?

அறிந்துகொண்டீரா?

அது 

இரண்டல்ல என்றீர்கள்.

ஒன்றே தான் என்று

சுட்டுவதற்கும்

இயலாது என்றீர்கள்.

அப்புறமும்

நாக்கில் நரம்பின்றி

நாலு வர்ணம் சொல்கின்றீர்.





----------------------------------------------








எத்தனை இரைச்சல்கள்.

எத்தனை இரைச்சல்கள்

-------------------------------------------ருத்ரா.


எத்தனை இரைச்சல்கள்

மந்திரங்கள் என்ற பெயரில்?

எத்தனை யாகங்கள்

உயிர்களைத் தீயிலிட்டு?

எத்தனை பொய்மைகள்

மாயைகளால்

மெருகேற்றப்பட்டு?

போதும் இறைவா!

உன்னைப் பற்றிய ஓர்மை

உனக்கே இல்லாதபோது

எங்களுக்கு எதற்கு

குண்டலினிகளும்

கபாலம் பிளந்து

அந்த "பிரம்மரந்தரங்களும்?"

பாஷ்யங்களின்

வெறும் ஓசை தெறித்த 

மகரந்தங்கள்

மனிதம் அற்ற

மலட்டு வர்ணங்களிலா

"சுப்ரபாத" வெளிச்சங்களை

காட்ட இயலும்?

------------------------------------------







 


2024-04-19

தேர்தல்



இங்கே

பொய்க்கால்

குதிரையாட்டங்கள்

தூள் கிளப்புகின்றன

நிஜக்குதிரைகள்

அங்கே

குதிரைபேரத்திற்கு

அந்த "நாற்காலி"கள்

அருகே காத்திருக்கும்போது.

------------------------------------------------ருத்ரா.


2024-04-12

பட்டாம்பூச்சிகள்


வர்ணாஸ்ரமம்

இல்லாத

வர்ணங்களின் ஆசிரமம்.


பட்டாம்பூச்சிகள்

--------------------------------------

சேயோன்



ஆர்டெலிஜென்ஸ்

ஆர்டெலிஜென்ஸ் 

-------------------------------------

ருத்ரா.


பிரம்மமே இல்லை என்று

பிரம்ம சூத்திரத்திற்கு

பாஷ்யம் எழுதியது

கைபேசியோடு 

தைத்து வைத்திருந்த

ஒரு "ஆப்ஸ்".

வாதராயணர் ஸ்லோகங்கள்

பேசாமல்

மிச்சர் 

தின்று கொண்டிருக்கின்றன. 

----------------------------------------------





2024-03-05

அவனா? இவனா?

 

அவனா? இவனா?

----------------------------------------ருத்ரா.


அச்சமும் கவலைகளும் 

நம் எதிரில் 

ஊமைகளாய் நிற்கின்றன.

அவைகளுக்கு 

கடவுள்கள் என்று 

பெயர் சூட்ட 

வைத்தது யார்?

நம் நரம்புகளில் 

வீணையை மீட்டி 

கொத்துக் கறி போட்டது யார்?

இனிமையாய் இருந்தாலும் 

காலத்துச் சுருதிக்கட்டைகளின்

காதுகளைத் திருகியா 

தேன் எடுப்பது? 

வண்டி வண்டியாய் 

வார்த்தைச்சகடங்கள்

கட கடத்த மந்திரங்களின் அடியில் 

நசுங்கி க் கிடப்பது யார்? 

கடவுளா? மனிதனா?

அவனை இவன் தான் 

அடையாளம் காட்ட வேண்டும்!

-----------------------------------------------------


 


2024-03-02

தமிழ் மூச்சுகள்

தமிழ் மூச்சுகள்.

--------------------------------------ருத்ரா 


காற்றில் உற்றுக் கேள் 

அந்த பனை  ஓலைகளின் 

உரசல்களை.

நம் தமிழ் மூச்சுகளின் 

எழுத்தாணிக் கீறல்கள்