2014-06-28

"ஓலைக்கிளிக‌ள்"





"ஓலைக்கிளிக‌ள்"
==================================ருத்ரா இ.பரமசிவன்
(அன்னைய‌ர் தின‌ம்)....



அம்மா
உனக்கு ஒரு பரிசு வாங்க‌
கடை கடையாய்
ஏறி இறங்கினேன்.
என்ன வாங்குவது?

இறுதியாய்
கிரிஸ்டலில்
இதயம் வாங்கினேன்.
உள்ளே
பச்சை நரம்புகளில்
சிவப்புக்கடல்.
அந்த‌
உன் கருப்பையை
ஈரம் சொட்ட சொட்ட‌
என் கைப்பையில்
நான் திணித்துக்கொண்டேன்.

அந்த‌ ப‌த்துமாத‌ இருட்டுக்குள்
சூரிய‌ப்பிழ‌ம்பாய்
நான் உருப்பிடிக்க‌
நீ உன்னை
உலைக்க‌ள‌மாய்
காய்ச்சிக்கிட‌ந்த‌தை
எந்த‌ மெம‌ரி சிப்பில்
இட்டு வைக்க‌ முடியும்?
ம‌ல‌ட்டு டிஜிட‌ல் க‌ர்ப்பப்பையை
ம‌டிப்பொறியாய்
சும‌ந்து சும‌ந்து
ப‌ன்னாட்டுக‌ம்பெனியின்
ப‌ண‌ங்காட்டு க்யூபிகிள்க‌ளில்
வியூக‌ம் அமைத்துக்கிட‌க்கும்
வித்தைக‌ளில்
உன் ம‌க‌ள்
இந்த‌ உல‌க‌த்தையே
பாப்கார்னாய் கொறித்து
கொழித்து வாழ்கிறாள்.

அந்த ப‌தினைந்தாயிர‌ம் ரூபாய் கிரிஸ்ட‌ல்
அழ‌கான‌ ப‌ரிசு தான்.
என் கைப்பை
குலுங்கி குலுங்கி
வீடு நோக்கி வ‌ந்த‌து.

வ‌ரும் வ‌ழியில்
ஒரு பிளாட்பார‌த்தில்
ஒரு ந‌லிந்த‌ தாய்
தோளில்
துணித்தொட்டிலில்
சுருண்டுகிட‌க்கும்
குழ‌ந்தையை சும‌ந்துகொண்டு
வியாபார‌ம் செய்து கொண்டிருந்தாள்.
"அம்மா
இந்த‌ பொம்மையை வாங்கிக்கொள்ளுங்க‌ள்"
ஓலைக்கிலுகிலுப்பை.
ஓலைக்கிளிக‌ள்.
ஓலையில் கொண்டைச்சேவ‌ல்க‌ள்
அம்மா..அம்மா
ஐந்து ரூபாய்க்கு ரெண்டு
வாங்கிக்கொள்ளுங்க‌ள்.."

குழ‌ந்தையோ
அப்போது தான்
அரையும் குறையுமாய்
அவள் மார்பை
ச‌ப்பிப்பார்த்து ஏமாந்து
ப‌சி ம‌ய‌க்க‌த்தில்
க‌ண்மூடிக்கிட‌ந்த‌து..
"இந்த‌ ம‌ர‌ப்பாய்ச்சியையாவ‌து..
வாங்கிக்கொள்ளுங்க‌ள்
மூன்று ரூபாய் தான்..."

என்னால்
அவ‌ளைக்க‌ட‌ந்து போக‌முடிய‌வில்லை.
சிறுவ‌ய‌தில்
அம்மா வாங்கிக்கொடுத்த‌
அந்த‌ ஓலைக்கிளி
எழுப்பிய
கீச்சு மொழியின்
சி சி ப்ள‌ஸும்
ஊப்ஸும்
இப்போது தான் புரிந்த‌து.
பிர‌ச‌வ‌ வ‌லியில்
என் அம்மா குழ‌றிய‌
பைன‌ரி ஒலிப்பு அது..
"என் க‌ண்ணே
என் க‌ண்ணே"

அடுத்த‌ க‌ண‌ம்
அந்த‌ அம்மாள்
கையில் உள்ள‌
ஓலை உருவ‌ங்க‌ளை
எல்லாம்
அள்ளிக்கொண்டேன்
என் அம்மாவுக்கு.
கைப்பையில் இருந்து
ஆயிர‌ம் ரூபாய்க்க‌ட்டை
அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாய்
அவ‌ள் கையில் திணித்து விட்டு
ந‌ட‌ந்து கொண்டே இருந்தேன்
"அம்மா
சில்ல‌றை இல்லையே.."
அவ‌ள் குர‌ல் என் காதுக‌ளில்
விழ‌வில்லை.

அவ‌ள் ஒரு தாய்.
அந்த‌ துணிச்சுருணையில் நான்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍========================================ருத்ரா
12 மே 2013

2014-06-27

பெண்ணே !

Rainbow-Hair-Technology-Woman-Wallpaper-1280x800.jpg
http://black-wallpapers.com/wallpapers/rainbow-hair-technology-woman-wallpaper/ WITH COURTESY



பெண்ணே !
===========================================ருத்ரா இ.பரமசிவன்

தண்டைகள் குலுங்க‌
கிளிந்தட்டு விளயாடிய போது
நினைத்திருந்தாயா?
கிளிச்சிறகுகளை கத்தரித்து விட்டு
கூண்டுக்குள் வைத்து
கூடி கும்மாளம்
அடித்துக்கொண்டிருப்பார்கள் என்று.
ஆனாலும் கிளியே பார்.
காலம் மாறிவிட்டது.
வயதுக்கு வந்து விட்டாய் என்று
உலக்கைக்கோடுகள் போட்டு
உன் உலகத்தை குறுக்கி வைத்தவர்கள்
மாறித்தான் போனார்கள்.

குங்கும செப்புக்குள்
ஒரு மாளிகை கட்டி
உன்னை வைத்திருந்தவர்கள்
மாறித்தான் போனார்கள்.

முரட்டுத் தாய் மாமன்களின்
மீசைக்கு நெய்தடவி
ஆசைக்கு தீனியாகி உன்னை
உறவு என்னும் கொட்டாங்கச்சிக்குள்
மடக்கி வைத்தவர்கள்
மாறித்தான் போனார்கள்.

காதலாவது கத்தரிக்காயாவது என்று
வரதட்சிணையும் கழஞ்சுத்தங்கமும்
கொடுத்து வாங்கிவந்த கணவனுக்கு
கத்தரிக்காய் வதக்குவதும்
கறி சோறு ஆக்கிப்போடுவதுமே
உன் எல்லை என்று இருந்தவர்களும்
மாறித்தான் போனார்கள்.

பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சு
என்றவர்களும்
புதை குழிக்குப்போய்
ரொம்ப நாளாய் ஆச்சு.
அவர்களும் மாறித்தான் போனார்கள்.

இப்போது பார்.

மாட்டுச்சங்கிலியை நினவுபடுத்தும்
மாங்கல்யம்
சுவரில் ஆணியில்
தொங்குகிறது.

பந்தல் கெட்டிமேளம் மொய்களோடு
அத்தியாயத்தை முடித்துக்கொள்ள்ளும்
கல்யாணங்கள்
பதிவாளர் அலுவலகத்தில்
கையெழுத்துக்கு வந்தது.

பெண்ணே!
வளையல்களை மட்டும் குலுக்கி
கிளர்ச்சியூட்டும் உன் கையில்
விஸாவும் பாஸ்போர்ட்டும் அல்லவா இருக்கிறது.

உனக்கு எதற்கு இந்த‌
வேதமும் பிரம்மமும்
என்று ரகசியம் காத்தவர்கள்
உன் அறிவுச்சுடரில்
பிரம்மன்கள் எல்லாம்
அணைந்து போய் நின்ற ரகசியத்தை
இவர்கள் புரிந்து கொண்டார்கள்.

உன் அறிவுப்பெட்டகம் திறந்த போது
இந்த அஞ்சறைப்பெட்டிகளோடு
கம்பியூட்டர்களும் அல்லவா
திறந்து கொண்டுவிட்டன.
அதில் உன் சமையல் திறங்கண்டு
அடிமையாகின பலப்பல‌
பன்னாட்டுக்கம்பெனிகள்.

அம்மிக்கல் இருந்தபோது நீ அரைத்தாய்.
மிக்ஸி வந்த போது
இவனும் அரைக்கிறான்.
கிணரும் கல்லும் இருந்தபோது
நீயே எல்லாம் துவைத்தாய்.
வாஷிங் மெஷினில்
இன்று அவனும் துவைக்கிறான்.
அடுக்களையில் அன்று
பாத்திரங்கள் தேய்த்து தேய்த்து
மல்யுத்தம் புரிந்தாய்.
டிஷ் வாஷரில்
அள்ளிப்போடுகிறான் பாத்திரங்களை
இவனும் இன்று.
"டெம்பரேச்சர் ஆவன்"
குமிழ்கள் இருவரும் திருகலாம்.
சமையலும் கூட பொதுவுடைமை.

ஓ! பெண்ணே!
எந்திரமாய் இருந்தாய்.
எந்திரப்புரட்சியில்
எழுச்சி கொண்டாய்.

பெண்ணே!
நீ இவர்களுக்கு எந்திரமாய் இருந்தபோதும்
அறிவுக்கண் விழித்து
அதிர்ச்சி வைத்தியம் அளித்துவிட்டாயே.
இப்போது எந்திரங்களின் எந்திரங்களுக்கெல்லாம்
பொறி நுட்பம் எழுதத்தெரிந்த பிறகு
இந்த உலகம் கூட‌
உன் கால் கொலுசுவின்
ஒரு குண்டுமணிக்குள் தான்
குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

பெண்ணே! நீ வாழ்க!