2016-09-18

இனியதோர் விடியல் ஆக்கு !

ஆகஸ்டு பதினைந்தே வருக வருக!
==================================================ருத்ரா

காலண்டர் தாள் சரசரப்புகளில்
ராணுவ பூட்ஸ்களின்
மரியாதை ஒலிகள் கேட்கின்றன.
அலங்கார வண்டிகள்
மாநிலம் மாநிலமாய்
பொம்மைக்காட்சிகளில் உயிர் பூசி
மிதந்து வருகின்றன.
ஆனந்த வெள்ளம் திரள்கிறது.
வந்தேமாதர முழக்கத்தின்
புடைப்பு பரிமாணம்
நம் நெஞ்சங்களில் விம்மிப்பெருகுகின்றது.
அது முக்காலங்களின்
வரலாற்றுக்கனத்தின்   பரிமாணம்.
நேற்று இன்று நாளை
என்று
எப்படிப்பார்த்தாலும்
வேர்வை கண்ணீர் ரத்தம்
என மூன்று அதிர்வலைகளில்
கனல் மூட்டும் பரிமாணம்.
சாதி சமய வர்ணங்கள் அற்ற
சமூக நீதியின் ஜனநாயகப்பூங்கா நோக்கி
நடை போட வந்திருக்கும்
இன்றைய "ஆகஸ்டு பதினைந்தே"
உன் பின்னே
சுரண்டல் அநியாயங்களால்
நியாயக் க‌பாலங்களின்
நொறுங்கும் ஒலி கேட்கிறதா?
மேலை நாடுகளில்
மனிதன் கீழே மலங்கழிப்பான்.
ஆனால்
மனிதன் மலங்களுக்கும் கீழேயும்
வாழ்ந்துகழிக்கும் நாடாய்த்தான்
நமது புண்ணிய பூமி புல்லரித்து நிற்கிறது.
நாம் எல்லோரும் கடவுளின் குழந்தைகள்
என்று
நம் மீது  நாமே
பூமாரிப்பொழிந்து
புளகாங்கிதம் அடைந்த போதும்
அஞ்சாவது வர்ணத்தவர்கள்
யாருக்கோ பிறந்தவர்கள் என்று
எகத்தாளம்
செய்பவர்களின பூமியா ..நம்
இந்திய பூமி?
சாதிக்கலப்புத் திருமணங்களை
பொறுத்துக்கொள்ளாமல்
ஆணவக்கொலை என்ற பெயரில்
கசாப்பு செய்வதையும்
ஆடாமல் அசையாமல் நின்று
பார்த்துக்கொண்டிருக்கும்
"மரப்பாச்சி" ஜனநாயக‌மா
இந்த ஜனநாயகம்?
"ஆகஸ்டு பதினைந்தே!"
வழக்கமாய் கிழித்துப்போடும்
வெறும் காலண்டர் தாள் அல்ல நீ!
இன்று
புதுத்தீயில் புதுப்பித்து பதிப்பித்து
புடம்போட்டு வந்த
புதிய ஆகஸ்டு பதினைந்து நீ!
புதிய அர்த்தங்களோடு
காலண்டர் தாள்கள்
அக்டோபர்களையும் நவம்பர்களையும்
அந்த அசைவுகளில்
அசைபோடத் தொடங்கினால்
அதன் காற்றுக்கென்ன வேலி இங்கே?
அந்த கேள்வியின்
ஊற்றுக்கென்ன பதில் கள் இங்கே?
ஓ! எங்கள்  இதயமான  இந்தியாவே!
சமுதாய நீதியின் வெளிச்சமாய்
ஒரு "ஆகஸ்டு பதினைந்தை"
எங்களின்
இனியதோர் விடியல் ஆக்கு !
அதுவரை
எங்கள் நாளங்களும் நரம்புகளும்
புடைக்கட்டும்.
துடிக்கட்டும்.
"ஜெய்ஹிந்த்"

============================================================

__________________________________

ஆழ்ந்த நம் இரங்கல்கள்
===================================ருத்ரா இ பரமசிவன்

(கவி வேந்தன் நா.முத்துக்குமார் மறைவுக்கு
நம் ஆழ்ந்த இரங்கல்கள்)



வயதுகளின் நுழைவாயில்
கட்டி முடிக்கும் முன்னே
வாழ்க்கைக்கோபுரமே
சாய்ந்து விட்ட கொடுமை என்ன?

இப்படியே விட்டால் நீ
பாட்டெழுதி பாட்டெழுதியே
நூலேணி ஏறி வந்து என்
அரியணையையும்
அபகரிக்கும் அபாயம்
வந்து விடும் என்று தான்
இப்போதே உனை நான்
எடுத்துக்கொண்டேன்
என் மடியில்
என்றெழுதினான் ஒரு பாட்டு
இறைவனுமே!
................
இந்தப்பாட்டும்
நா(வல்ல)முத்துக்குமார்
எழுதிக்கொடுத்து
இறைவன்
கீழே வீசியது தான்.

=====================================================================















2016-09-17

தமிழர்களே!தமிழர்களே!




தமிழர்களே!தமிழர்களே!
====================================================ருத்ரா

தமிழர்களே!தமிழர்களே!
உங்கள் முகத்தில் நீங்களே
கரி பூசி கொண்டீர்கள்.
செம்மொழிப்பூங்காவின்

அந்த அய்யன் வள்ளுவன்
அட்டைப்படத்தையும்
முகப்பையும்
அந்த பச்சைப்பொய்கள்
(பச்சை ஸ்டிக்கர்கள்)
மூடியிருக்கின்றனவே!

தமிழ் செம்மொழி என்றாலே
எரிச்சல் கொண்ட‌
எத்தர்கள்
உங்கள் கைகள் மூலம்
உங்க‌ள் முக‌ங்க‌ளிலேயே
க‌ரி பூசிக்கொண்டிருக்கிறார்க‌ள்.

இன்னொரு அதிர்ச்சியான‌
உண்மை உங்க‌ளுக்கு தெரியுமா?
வேத‌ங்க‌ளை தொகுத்த‌தே
வியாச‌ன் எனும் திராவிட‌ன் தான்.
நீல‌மேக‌ சியாம‌ள‌ வ‌ண்ண‌ங்க‌ளில்
அதாவ‌து திராவிட‌க்க‌ருப்பு வ‌ர்ண‌ங்க‌ளில்
பிற‌ந்த‌ திராவிட‌ர்க‌ளான‌
ராம‌னும் கிருஷ்ண‌னும்
ஆண்ட‌ திராவிட‌ பூமியே இந்தியா!

திராவிட‌நாடு திராவிட‌ருக்கே!
திராவிட‌ர்க‌ளின் பாட்டன்க‌ள் ஆன‌
த‌மிழ‌ருக்கே இந்தியா சொந்த‌ம்.
அரிய‌ என்ப‌தே ஆரிய‌ ஆயிற்று.
அரிய‌ இன‌மே
க‌ண‌வாய் வ‌ழியே புகுந்து
க‌ண்ணிய‌ம‌ற்ற‌ ஆக்கிர‌மிப்பில்
இன்னும் ந‌ம்மை
தின்ன‌த்துடிக்கிற‌து.

கண‌க்கீட்டாள‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை
வெறுமே
மூன்று ச‌த‌வீத‌ம் என்கிறார்க‌ள்.
முந்நூறு ஆண்டுக‌ளுக்கு முன்னே
ம‌ட்டும் வ‌ந்த‌
வெள்ளை ஆதிக்க‌ம் அல்ல‌ இது.
மூவாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு
முன்னே வ‌ந்து
ப‌த்தாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கும்
முன்னே இருந்த‌
இந்த‌ ப‌ர‌த‌வ‌ர்க‌ள் மீதும்
(இது சிந்து வெளித்திராவிட‌னின்
நெய்த‌ல் நில‌ப்ப‌ர‌த‌வ‌ன்)
அவ‌ர்க‌ளின் பார‌த‌த்தின் மீதும்
ச‌வாரி செய்துக்கொண்டிருக்கும்
ஆதிக்க‌ம் இது.

ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ஆண்டுக‌ள்
க‌ல‌ப்பில்
இந்த‌ திராவிட‌ இந்திய‌ன்
வெள்ளையாயும்
க‌ருப்பாயும்
வெள்ளையும் க‌ருப்பும் க‌ல‌ந்த‌
ப‌ழுப்பாயும்
இருப்ப‌து ம‌ட்டுமே
நிஜ‌மான மூவ‌ர்ண‌ம்.

பொய்யாய் நான்கு வ‌ர்ண‌ம்
பேசுப‌வ‌ர்க‌ள் தான்
சிவ‌ப்பான‌ செம்மையான‌
சிற‌ப்பான‌ ந‌ம் த‌மிழ் மொழி மீது
தார் பூசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சாமி படத்தின் மேல்
இப்படி ஒட்டினால்
இந்துக்க‌ள் ம‌ன‌ம்
புண்ப‌ட்டு போய்விடும்
த‌மிழ‌ர்க‌ளின் பூமி இது.
வான் புக‌ழ் வ‌ள்ளுவ‌னை
இப்ப‌டி மூடி ம‌றைத்தால்
மனம் புண் ப‌டாத‌
த‌மிழ‌ர்களின்
தமிழ்நாட்டுப் பூமி இது.

த‌மிழ‌ர்க‌ளே! த‌மிழ‌ர்க‌ளே!
இன்னும் நீங்க‌ள்
தூங்கிக்கொண்டிருந்தால்
த‌மிழ்ப்பூஞ்சோலைவ‌ன‌ம்
தார்ப்பாலைவ‌ன‌ம் ஆகிவிடும்!
விழித்திடுங்க‌ள் த‌மிழ‌ர்க‌ளே!

====================================================ருத்ரா
ஆதார‌ச்செய்திக‌ளுக்கு
இவ‌ற்றை சொடுக்குங்க‌ள்:

vedas-compiled-and-worte-by-dravidians[1].html (text/html) 42.00K
Sri Rama’s Ancestor, Vaivasvata Manu was a Dravidian King Srimad Bhagavatam « Ancient Indians – Satya Samhita.url (application/octet-stream) 1.00K
========================================================================
29  அக்டோபர் 2011 ல் எழுதியது.

2016-08-11

குரல்





குரல்
================================================ருத்ரா இ பரமசிவன்

ஒற்றையாய் நின்று ஒரு தவம்.
குருவிக் கூட்டங்களுக்கு ஏங்கி
அந்த பஞ்சு சிறகுகளின் வருடல்களுக்கு
கனவு கண்டு
நிற்கிறது இந்த ஒற்றை மரம்.
சூரியக்குளியலில்
வருடங்கள் எனும் சோப்புக்கட்டிகள்
கரைந்து
இப்படி ஒரு சிறு மரமாய் நிற்கிறது.
இலை இடுக்குகளில்
வெள்ளி ஒழுகும் வெளிச்சத்தின்
குமிழிப்பூக்களில்
தன் கன்னி ஏக்கங்களை
நிரவிக்கொள்ளும் சல சலப்புகளே
அதன் இதயத்துடிப்புகள்.
சிறுவர்களின் சைக்கிள் சக்கரங்கள்...
கால் பந்தாட்டக்காரர்களின்
விறைப்பான உதைப்புகள்..... .
அடியில் சிலநேரங்களில்
இளஞ்ஜோடிகள்
தங்கள் தாகத்தை
சில நுணுக்கமான சிற்பவடிவங்களைப்போல் 
வெளிப்படுத்தும் இனிய தருணங்கள்.....
எல்லாமும்
அதன் வேர்த்தூவிகள் முனை வரைக்கும்
நனைத்து நிற்கும்.
அதன் இலை நரம்போட்டத்திலும்
"மெகந்தி"தீட்டும்.
"இப்போது தான் தெரிந்ததா?
என்னை?
வாருங்கள் ..வந்து அமருங்கள்"
அதன் குளிர்நிழலில் சற்று
அமரலாம் என்று அங்கே சென்ற
எனக்கு
அந்த மெல்லிய இனிய குரல் கேட்டு
திடுக்கிட்டு விட்டது.
இது என்ன குரல்?
யார் பேசுவது?
எனக்கு உடம்பு சில்லிட்டு விட்டது.
திரும்பி பிடரி தெறிக்க விரைந்தேன்.
"போகாதீர்கள் ...போகாதீர்கள்.."
குரல்
என்னைத் தொடருகிறது!

==================================================



2016-01-30

இங்கு வருமா அந்தக்குருவிகள் ?





இங்கு வருமா அந்தக்குருவிகள் ?
================================================ருத்ரா இ,பரமசிவன்.

ஊசி அலகுகள் பிளக்க
அந்தக் குருவி கிறீச்சிட்டது.
அந்த ஊசிக்குள்ளிருந்தா
ஏழு கடல்களையும்
ஏப்பமிடும்
அந்த ஒலிக்கடல்?
ஒன்றல்ல இரண்டல்ல
ஏழெட்டு குருவிகள்..
ஒரு காலை நேர "நடை"யலின் போது
அந்த குறுகல் சந்து வழியே சென்றேன்.
பரட்டைத்தலை போல
பிய்ந்த காய்ந்த சருகுப்பொடியாய்
உதிரும் கூரைக்குடிசைகள்
ஊடே நடந்தேன்.
இங்கெல்லாம்
இன்னும் கிழக்குத் திசைகள்
சுவடுகளே காட்டவில்லை
என்பது
அவ்வளவு அம்மணம்!
சித்தாந்தங்கள் எல்லாம்
இங்கு ரூபாய்க்கு பத்து கிலோ கிடைக்கும்.
ஆனாலும்
இன்னும்
இந்தியாவின் ஜென்ம பூமிக்கு
ஒரு கட்டணக்கழிப்பிடத்தின்
அடிக்கல் கூட
அயல் நாட்டான்
கடன் தொகையில் தான்.
குருவிகளின்
ஊசிக்குத்தல்களில்
ரத்த நாளங்களில் எல்லாம்
ஒலி அமுத வெள்ளம்.
பழுப்பும் கருப்பும்
கொஞ்சம் பச்சையும் கலந்து
பிசைந்த அந்த
பிஞ்சுப்பிரபஞ்சங்கள்
குடிசைகளின் கூரை விழுதுகளில்!
இந்த இசை விருந்துக்கு
நட்சத்திர ஓட்டல்களில்
கத்தை கத்தை கரன்சிகளே சமன்பாடு.
என் இதயம் வலித்தது.
அகண்ட இந்தியாவின்
ஆரிக்கிள் வெண்டிரிக்கிள்களில்
சாக்கடைகளே இன்னும் வர்ணங்கள்.
அந்தக்குருவிகள்
செவிக்குள்  பெய்த அதிர்வெண்கள்
இந்த உலகத்தையே
சுருட்டிப்போட்டுவிடும்.
இந்த "செஞ்சுருட்டி" ராகத்துக்கு
பூஞ்சக்காளான் பிடித்த
வீணைகளால் பயனில்லை.
ஏக்கம் பூசிய விழிகளுடன்
காத்திருக்கிறேன்.\
இங்கு வருமா அந்தக்குருவிகள் ?

===========================================================