2009-03-24

"வெள்ளை அங்கிக்குள் ஒரு வெளிச்சக்கடல்"

"வெள்ளை அங்கிக்குள் ஒரு வெளிச்சக்கடல்" (அன்னை தெரஸா)
============================================================ருத்ரா
25.03.09
அன்னை...
அன்னை...
நாக்கிற்கும்
பல்லிற்கும் இடையே
சத்தங்களின்
சம்மட்டிகளுக்குள்
கிடந்த
வார்த்தையின்
வெறும் நசுங்கல் வடிவம் இது..
'அன்னை தெரசா '
என்று நாங்கள்
உன்னை உச்சரிக்கும் வரை !
'அன்னை தெரசா '...என்று
எங்கள் இதயங்கள்
ஒலிக்கும் போது
தேச-உலகப் பரிமாணங்கள்
காணாமல் போயின.
மத வேலிகள் எல்லாம்
மறைந்து போயின.
இன-மொழிக்கூடுகள்
இற்று விழுந்தன.
நீலக்கோடுகள் போட்ட
வெள்ளை அங்கிக்குள்..
வெள்ளமாய்ப் பொங்கும்
மனிதநேயக்கடல் நீ !
அந்த வெளிச்சக்கடலில்
சாதி மதப்பூதங்களின்
இருட்டுகள் எல்லாம்
கரைந்தே போயின!

உன் முகத்தாமரை
பரந்தாமன்களின்
'நாபித்தாமரை"களை விட
உன்னதமானது.
ஏனெனில்
குப்பைத்தொட்டிகளில்
நாய்களால்
கவ்விக்கொண்டு வந்து
போடப்பட்ட
மனிதப்பிஞ்சுகள் கூட
உன் கரம்பட்டு
மாணிக்கத் தாமரைகள் ஆயின !
குளிர் பூ மழையே !
குமுறும் எரிமலைகள் கூட
உன் கண்களில் கசியும்
ஈரம் கண்டு
சுருண்டு கொள்ளும்.
உன் முகத்தில்
பழுத்த சேவையின்
சுருக்கம் விழுந்த
ஒவ்வொரு வரியும்
யதார்த்தமான
பைபிள் வாசகங்கள்.
நடைமுறைக்கு வந்த
கீதைப்பேருரைகள்.
மனிதனின் அருகாமைக்கு
வந்து விட்ட
அல்லாவின் அருள்மொழிகள்.


மீன் வேடம்...
ஆமைவேடம்..
வராக வேடம்...
சிங்க வேடம்...என்று
கடவுள்
பத்து விதமாய் வந்த போதும்
பத்தவில்லை.
அதனால்
மானுட நேயம் போதிக்க
வேடம் போடாமல் வந்த
அவதாரம் நீ !


பசிப்பவனுக்கு
உடனே புரியும் மொழி
எபிரேயமும் அல்ல.
சமஸ்கிருதமூம் அல்ல.
ஒரு ரொட்டித்துண்டு தான்.
ஒரு கவளச்சோறு தான்.
'பரிந்து ஊட்டும் '..அந்த
தாய்மை மொழி
நீ அல்லவா!

பிணியில் கந்தலாகிக்
கிடப்பவனுக்கு
சங்கு சக்கரத்து
விசுவரூபம் தேவையில்லை.
உன் பாசத்தின்
மருந்தும் சிகிச்சையுமே
அங்கு தெய்வதரிசனம்.
மனித சேவையின்
சாந்து கொண்டு கட்டிய
எங்கள் கோவில் அல்லவா நீ !

இறைவனைத்
தொழுவதற்கு கூட
கைகள் இல்லாத
தொழுநோய்க்காரர்களின்
கைகளாய் இருந்த
கை கண்ட தெய்வம் அல்லவா நீ!
மானுட நேயத்துக்கு
சமாதி கட்டிவிட்டு
பக்தியை பரப்புவதற்கு மட்டும்
கோவில் என்று
பளிங்கில் கட்டினாலும் சரி
கடைந்தெடுத்த
கருங்கல்லில் கட்டினாலும் சரி
அவையடக்கத்தோடு
சொல்லிக்கொள்கிறேன்..
அவையெல்லாம்
சவக்கிடங்குகளே!
சைத்தான் என்பது
கடவுளின் எதிர்வடிவம்.
ஆனால்
விழுந்து கிடப்பது
குற்றுயிராய்
குலையுயிராய்
ஒரு சைத்தான் என்று
தெரிந்தாலும்
ஓடோடிச்சென்று
பணிவிடை செயவது
உனக்குத்தெரிந்த
கடவுள் வடிவம்.
நாங்கள்
தேவன் வசனங்களை
ஒப்பிக்கிறோம்.
நீயோ அவற்றை
உயிர்ப்பிக்கிறாய்.
அன்னை தெரசாவே!
அன்பின் ஆலயமே!
காலத்தால் கரையாத
மெழுகுவர்த்தியே!
மரித்துப்போனபின்னும்
மண்ணுக்கு அடியில்
தின்ன வரும்
புழுக்களுக்கு கூட
பணிவிடை செய்ய
படுத்திருக்கும்
உன்னைக் கண்டு
வெட்கம் கொண்டு
தன்னை அங்கு
புதைத்துக்கொண்டான் அவன்.
ஆம் !
அந்தக் கல்லறையில்
கிடப்பது...
நீயல்ல!
மரணதேவன்.
கால ஓட்டத்தில்
ரத்த சதையாய்
உருகியபின்னும்
எங்களது
வெளிச்சம் நீயே!
புதிய ஏற்பாடுகளையெல்லாம்
பழைய ஏற்பாடுகள் ஆக்கி
கரையான்கள்
அவற்றை
சாப்பிட்டுவிட்டுப்போகட்டும்
என்று
எப்பொதுமே
ஜெயிக்க...
எப்போதுமே
ஜெபிக்க
'மனித நேயத்தின் '
ஒரு புதிய 'புதிய ஏற்ப்பாட்டை '
எங்களிடையே
பதிய வைத்த
இந்த பிரபஞ்சத்தின்
தாயல்லவா நீ !
'கிருமிகள்
என்னைப்
புசித்துக்கொள்ளட்டும்.
புனிதப்படுத்த
என் உடல் தான் வேண்டும்
என்று நீங்கள் கேட்டால்
அந்த புனிதப்பட்டம்
எனக்குத் தேவையில்லை...
என்று
நான் கூறும் குரல்
உங்களுக்கு கேட்கிறதா ? '
ஆம்.
இத்தனை நாள்
அடம் பிடித்த
அந்த 'வாடிகனுக்கு '
அன்னையின் குரல்
கேட்டுவிட்டது.
இறுதியில்
வாடிகன் தன்னை
புனிதப்படுத்திக்கொண்டது.

தாயே !
இந்த பங்குத்தந்தைகள்
உன்னை
கொச்சைப்படுத்திய போதும்
நீயோ
உன் பங்குக்கு
இவர்களை
தூய்மைப்படுத்தி விட்டாய்.
சொர்க்கங்கள் எல்லாம்
தலை குனிந்து கொண்டது.
நரகங்கள் எல்லாம்
புனிதமாகிப்போனது.
======================================================== ருத்ரா.







தோரணங்களும் ரணங்களும் ! .....

தோரணங்களும் ரணங்களும் !
(உலக மகளிர் தினம்)
==============================================ருத்ரா
பெண்ணே
அதோ பார்!
உலக மகளிர் தின விழாவின்
தோ"ரணங்கள்" ஆடிக்கொண்டிருக்கின்றன.
கொஞ்ச நேரம்
உற்றுப்பார் அந்த ஊமை ரணங்களை.
மி்ன் மி்னி பூச்சியல்ல நீ.
மி்ன்னணு யுகத்தின் சுடரேந்தி நீ.
காதல்
உன் பயணத்தில்
ஒரு மைல் கல் தான்.
ஆனாலும்
தன் ஜிகினா எழுத்துக்களால்
அதை மாணிக்க கல்லாக்கிவிட
புறப்பட்டு விட்டது
புதுக் கவிஞர் கூட்டம்.
அந்த பாராங்கல்லில் நசுங்கிவிடாமல் இருக்க
பாராமுகம் காட்டு!..பெண்ணே
பாராமுகம் காட்டு நீ.
இந்த பட்டாளங்களிடையே
நீ பட்டுப்போய் விடாதே.
கவிதைவரிகளுக்கு
முடக்கு வாதம் ஏற்படும்போது
அவை
காதல் பற்றிய
"ஹைக்கூக்கள்" என்று
அழைக்கப்படுகின்றன.
சொற்களுக்கு
முட்கிரீடம் சூட்டி
சூன்ய வாதத்தையும்
மாயா வாதத்தையும்
காதலாக்கி
உன்னை
ஆதாம்களுக்கு ஏற்ற ஏவாளின்
மாடல்களாக்கி
மனம் களிப் பவர்களின்
தீனியாகி விடாதே.
மாதர் தம்மை அடிமையாக்கும்
மடமையை கொளுத்தும்
தீயாகி விடு.
காதல் சாக்கரின் தடவிய
இந்த பஞ்சுமி்ட்டாய்க்காரர்கள்
தூர ஓடிவிடுவார்கள்
உன்னைச்சுற்றி
சிலந்தி வலைகள் போல்
"ஜொள்" வலைகள்
பின்னும் இந்த கவிஞர்களிடம்
கவனம் தேவை..பெண்ணே
கவனம் தேவை.

இளந்தளிர்களே!
காதல் எனும்
மனிதநேயத்தின்
முதல் தீப்பொறியிலேயே
காதலைச் சுட்டு தின்று
உணர்ச்சியை பூதாகரமாக்கும்
புதுக்கவிதைப்பூச்சாண்டிகளை
புறந்தள்ளுங்கள்.

மிக மிக மெல்லிய
சோப்புக்குமிழிகளில்
சொர்க்கத்தீவுகள்
அமைத்து
கவிதைகளில்
கல்லா கட்டும்...இந்த
குல்லா வியாபாரிகளின்
குரல்களைப்
புரிந்து கொள்ளுங்கள்.
எதேச்சையாய்
அவர்கள் பேனா தெளித்த
மைப்புள்ளிகள் எல்லாம்
கால்விரல் நகத்துக்கு
பூசிய"மெகந்தி" என்பார்கள்.
சன்னல் கம்பிகள் வழியேயும்
முத்தம் இட
அந்த நிப்புமுனைகள்
உதடு குவிக்கும்.
கேட்டால்
அந்த பஞ்சுமேகம்
உன்
கன்னம் என்பார்கள்.
உன் கால்
கொலுசுகளின் ஓசைகள் பற்றி
"கொசுக்கடிகளாய்"
அவர்களின் வர்ணிப்புகள்.
அதற்கு யார் மருந்து அடிப்பது?
கவலை வேண்டாம்.
இந்த உலக மகளிர் தினமே
மருந்து அடிக்கட்டும்.
அதற்கான நேரம் இது.
உன் காற்சிலம்பை கழற்றி உடை.
உன் அறிவின் கதிரியக்கத்தில்
வைரங்கள் தெறிக்கட்டும்
வைரஸ்கள் தொலையட்டும்.
கன்னிப்பூவே!
கனவு மத்தாப்பு கொளுத்திக்கொண்டு
உன்னையே பின் தொடர்ந்து
பஸ்ஸில் ஏறி
ஒரு புழுக்கைப்பென்சிலை
வைத்துக்கொண்டு
நகரப் பேருந்து நடத்துனர்
எச்சில் தொட்டு
கொடுத்த
பஸ் டிக்கட்டின்
பிஞ்சு சீட்டில்
ஒரு பிய்ஞ்ச கவிதை என்று
வானவில்லையும்
வண்ணாத்திப்பூச்சியையும்
அதில்
கசக்கிப்பிழிந்து
வார்த்தைகளை வார்த்து தருவார்கள்.
கேட்டால்
அந்த பஸ்ஸில் வந்த
உன்
சுடிதார் வர்ணங்களே
அவை என்பார்கள்.

அண்ணா சாலை தோறும்
தூவிக்கிடப்பது
தூசிகள்
இல்லையாம்.
காதலிகளின்
இதய ரோஜாக்கள் தானாம்.
கேட்டால்
அண்ணா சாலை
அன்று மட்டும்
தார் பூசவில்லை
ரோஜாக்களை
பூசிக்கொண்டது.
ஏனெனில்
அன்று காதலர் தினம்
என்று ஒருவன் கவிதை எழுதுவான்.

வாசலில்
உன் சுண்ணாம்புக்கோல
வளைவு நெளிவுகள்
அவன் அம்மா
பிழிந்து தந்த
ஜிலேபியையை விட கூட
இனிப்பு என்பான் இன்னொருவன்
இந்த தப்புத்தாளங்களை
வைத்துக்கொண்டு
சாரம் இல்லாத சில
வாரப்பத்திரிகைகள
காரம்
ஏற்றிக்கொள்ளுகின்றன.

காதல் எனும்
பூங்குமிழிக்கு..அவர்கள்
பூப்பல்லக்கு தூக்கட்டும்.
ஆனால்
பெண்ணியம் எனும்
கண்ணியம்
உருவாகவிடாமல்
அதன் சவப்பெட்டிக்கு
அல்லவா
அந்த காகிதப்பக்கங்களில்
சல்லாத்துணி விரிக்கிறார்கள்.
மெல்லிய
மயிலிறகுகளைக் கொண்டு
காது குடையும்
இவர்களது
கிளு கிளுப்பு வேலைகளில்
இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டு
எங்கோ
தொலைந்து போகக்கூடாது அல்லவா?
கம்பியூட்டர் வகுப்புகள்
காமன் கரும்பு வில்லேந்தும்
களம் ஆகிப்போனதாய்
கணினியின்
பூலியன் அல்ஜீப்ராவில்கூட
காதலியின்
"ப்ரா" தைத்து
இவர்கள் கவிதை எழுதிவிடுவார்கள்.

கார்டியாலஜி என்றால்
இதயம் பற்றி
மட்டுமே
இந்த மக்கு டாக்டர்கள்
விரிவுரை ஆற்றுவார்கள்.
இதய வடிவில்
அவள்
அனுப்பியிருக்கும். அந்த
வேலண்டின்
"கார்டு"பற்றி
இவர்களுக்கு என்ன தெரியும்.
இந்த கார்டு
கொஞ்சம்
கசங்கினாலும்
எனக்கு
"இஸ்கேமியா" தான்.
காதலின்
இன்னொரு
இனிமையான பெயரும்.
இஸ்கேமியா" தான்.
மூட ஜனங்களே தெரிந்து கொள்ளுங்கள்
என்று
காதல் பற்றி ஒரு "மேனிபெஸ்டோ"
எழுதித்தள்ளுவான்
ஒரு இந்திரஜாலக்கவிஞன்.
புதுக்கவிஞர்களே
இன்று மட்டுமாவது
உங்கள் கவிதைகளுக்கு
விடை கொடுங்கள்.
இதற்கு
உலகத்து பெண்ணியமே
ஒன்று படு! போராடு!
இதனால் நீங்கள் இழக்கப்போவது
ஒன்றுமி்ல்லை.
முலாம் பூசிய
புதுக்கவிதைகள் எனும்
காக்காய்ப்பொன் விலங்குகளே
========================================================================ருத்ரா
08-03-2009