நமக்கு மட்டும்...
__________________________________
தூரத்து புள்ளிகள்
தொலை நோக்கியில்
பூதங்கள் காட்டுகின்றன.
அவை இந்த பிரபஞ்சங்களையே
விரீர் என்று திறந்து போட்டு விடும்
கருந்துளைகளாம்.
அவற்றின் பூட்டு சாவிகளே
அவை தானாம்.
ஒளியாண்டுகளில்
அவை தொலைந்து கிடக்கின்றன.
அவற்றை உள்ளங்கையில்
வைத்துக்கொண்டு
மாவடு ஊறுகாயாக ஆக்கி
கணிதச்சோற்றில் தொட்டுக்கொண்டு
சாப்பிட்டுக்கொண்டே இருக்கின்றனர்
விஞ்ஞானிகள்.
எக்ஸோ ப்ளானெட்டுகளில்
உள்ள மனிதர்களோடு
கை குலுக்கிக்கொள்ளும்
தியரிகளையும்
வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நமக்கு மட்டும்
துரோணாச்சாரியார்களும்
அஸ்வத்தாமாக்களும் தான்
அமாவாசை தர்ப்பணத்துக்கு
வெர்ச்சுவல் ரியாலிடியின்
தர்ப்பை புல்லோடு
உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.
__________________________________________________
கல்லாடன்
No comments:
Post a Comment