2024-07-10

விளிம்பு ரசம்.

விளிம்பு ரசம்.

____________________________


எத்தனை ஞாபகங்களை

ஒவ்வொரு கல்லாய் அந்த‌

ஜாடியில் போடுவது?

கற்கள் தீர்ந்து விட்டன.

சிறகுகள் ஓய்ந்து விட்டன.

வாழ்க்கையின் அந்த 

விளிம்பு ரசம்

வாய்ப்படும் முன்

வானத்தில் என் இரைச்சல்கள்

பஞ்சு பஞ்சாய்

பறந்து விடும்.

அன்று அவளை பார்த்தபோது

சிரித்தாள்.

அப்புறம் ஏதோ சொன்னாளே!

அந்தக்கல்லை

நான் எங்கு போய் தேடி

அலகில் கவ்வி எடுத்து வருவது?

அது எப்போது என்

இதய நாளத்துள்

யாழ் வாசிப்பது?

அங்கும் இங்கும் பறந்ததில்

இந்த வானத்துக்குத் தான்

சிராய்ப்புகள்..கீறல்கள்..

குரல்கள் எழுப்பி எழுப்பி

கரைந்து கொண்டிருக்கிறேன்.


_________________________________________________

கல்லாடன்.

No comments: