ஈரோடு தமிழன்பன்
__________________________________
உங்கள் வரிகள் பதியாத
காகிதங்கள்
மக்களே இல்லாத மெரீனா பீச்.
அதனால்
உங்கள் பக்கங்களில்
புரண்டு எழும்
அல்லது தடவிக்கொள்ளும்
சிறு பூச்சியாக ஊர்வதில்
எனக்கு ஒரு பெருமிதம்
உலகம் சுற்றும் ரசிகன் என்று.
தமிழுக்கு சொற்கள்
தேவையில்லை.
அதன் மூண்டு எழும் கனலே
அங்கு அங்கு நடப்பட்டிருக்கும்
மைல் கற்கள் என்று
காட்டி விடுகிறீர்கள்.
தமிழின் தொன்மை கூறும்
கீழடிகள் எல்லாம்
சிலருக்கு எலும்புக்குவியல்களாம்.
ஆம் அதைக்கோர்த்து தான்
தேவநாகரியாய் அதை
கழுத்தில் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
உங்களின் சின்ன நிறுத்தற்குறிகளும்
அரைப்புள்ளிகளும் போதும்
அதில் பொங்கித் ததும்பும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளின்
தமிழ் வீச்சுகளைக்
கண்டு கொள்ள.
உங்கள் எழுத்துக்கள் ஊழிப்பேரலைகள்.
இந்த உதவாக்கரைகள் எந்தக்
கரைகளிலாவது ஒதுங்கிக்கொள்ளட்டும்.
_________________________________________________
சொற்கீரன் 03.07.2024
No comments:
Post a Comment