டாஸ்மாக்
____________________________________________
செங்கீரன்
தமிழனே!
நீ இப்படி நுரைத்து நொதித்து
பாட்டிலுக்குள்
கல்லறை கட்டிக்கொண்டிருப்பதே
போதும்
என்று கிடந்தால்
அந்த வடவன்
சிந்துபாத் கிழவனாக
உன் தோள்மீது
சவாரி செய்து கொண்டிருக்கும்
அவலத்தை
எப்போது உணரப்போகிறாய்.
நீ நினைத்துக்கொண்டிருக்கிறாய்
"வெள்ளைக்காலர்" யுகத்துக்கு
பரிணாமம் அடைந்து கொண்டிருக்கிறாய்
என்று.
வெற்றுத்தமிழ் பேசும்
பல்கலைக்கழகத் தாழ்வாரங்கள்
தமிழை உலகம் போற்ற வைக்கும்
பணியில்
இன்னும் தொய்ந்து தான் கிடக்கின்றன.
உன்
நரம்புக்கணுக்களில்
தமிழ் தான்
எரிமலைக்குழம்பை
பாய்ச்சிக்கொண்டிருக்க வேண்டும்.
நீயோ
குத்தாட்டக்குப்பைகளிலும்
சினிமா மாயையின்
காக்காவலிப்பு நுரைதள்ளும்
மூடச்சீற்றங்களிலும் தான்
முடங்கிக்கிடக்கிறாய்.
உன் உயிர் மூச்சில்
தமிழின் மின்சாரம் பாய்ந்து
கொண்டிருக்கவேண்டும்.
வடவனின் சூழ்ச்சிச்சாக்கடைகள்
உன்னை
மத போதைகளின்
ஆபாசக்கிடங்குகளில்
தள்ளிவிடும் முன்
ஓ தமிழா!
வீறு கொண்டு எழு!
தமிழ்
வாழ்க வாழ்க வாழ்கவே!
___________________________________________
No comments:
Post a Comment