விஷ சாராயம்.
___________________________________
பச்சையாகச்சொன்னால்
சமுதாய எதிரிகளின்
இச்சையான சொல் இதுவே தான்.
சில எக்காள ஊடகங்களின்
ஊது குரல்களும் இதுவே தான்.
கூலி வர்க்கம் தானே
விடுங்கள்
ஏன் இந்த கூச்சல்?
வேர்வையின்
உப்புக்கரிக்கும் வர்க்கத்தின் மீது
உப்பரிகை வர்க்கத்தின் பார்வையும்
இது தானே.
கொச்சைப்படுத்தப்பட்ட
பொருளாதார சங்கிலிகளில்
நைந்தவனாய் நாயனாய்
கூளமாகிப்போனவனா மனிதன்?
அரசியல் என்றால் என்ன?
இதில் இன்னும் கொஞ்சம் கிக்
கிடைக்குமா?
என்று தேடிக்கொண்டே இருப்பவனா
இவன்?
ராமன் ஆண்டால் என்ன?
ராவணன் ஆண்டால் என்ன?
ஓட்டு அப்பங்கள்
பிய்த்து பிய்த்து
தின்று பார்த்தும்
"டிஜிட்டலில்" சுட்ட
அந்த அரை வேக்காடுகளின்
குடியாட்சிகளில் ருசியே இல்லை.
சோமக்கள்ளில் தான்
ஆயிரம் ரெண்டாயிரம் வருடங்களாய்
மந்திரங்கள் சொன்னோம்.
மெத்தனால் அங்கே எந்த
எத்தனால் கலக்கப்பட்டது?
வர்ணப்போதைகளில்
மனிதம் இங்கே
இன்னும் இன்னும்
பிணங்களே தான்.
______________________________________________
ருத்ரா.
No comments:
Post a Comment