உலக புத்தக தினம்.
_______________________________
அச்சும் காகிதமும்
குவாண்டத்து
கரையான்களின்
தீனிகள் ஆன பின்
நாவல்களும்
கவிதைகளும்
மட்டுமே
இங்கு மொட்டைவெளிகள்.
வணிகம் மருத்துவம் ஆனது.
மருத்துவம் வணிகம் ஆனது.
பசி மொய்க்கும்
பொருளாதாரம்
டிஜிடல் சோற்றை
அளைந்து கொண்டிருக்கிறது.
மனிதன் கவலை
உடனுறை மனிதனின்
பட்டினிச்சாவுகளில் இல்லை.
இற்று விழ்ந்த அவன்
எலும்பு மிச்சங்களிலும் இல்லை.
எங்கோ பல
ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள
ஏதோ ஒரு கோளின்
நீலக்கண்ணும் பச்சை உடம்புமாய்
உள்ள "அயலி"களின் மீது
மட்டுமே.
ஆன் லைன் ஆராய்ச்சிகளுக்கும்
குவாண்டம் சிமிலேஷன்களுக்கும்
குறைச்சல் இல்லை.
அரசமரத்து
அறிவொளியின்
"புத்தம்"தந்த புத்தகம்
இன்று வெறும்
எழுத்துக்காடுகளா?
மனிதம் அரிக்கப்பட்டு விட்ட
வெறும் மண்டைக்காடுகளா?
காலம் தான் பதில் சொல்லும்
என்பதும் வெறும் பொய்யே.
காலம் என்பதும்
இந்த கணித இயற்பியலில்
கருந்துளையால்
என்றோ தின்னப்பட்டு விட்டது.
__________________________________________
சொற்கீரன்
No comments:
Post a Comment