2025-04-21

காகிதக்காடுகளாய்...

 

காகிதக்காடுகளாய்...

___________________________________


புத்தகங்கள்

காகிதக்காடுகளாய்

நம் வழியெல்லாம்

சிதறி அடைத்துக்கொண்டு

இருப்பதாய்

ஒரு திருப்பம் நம் எதிரே

மூச்சு முட்டிக்கொண்டு

நிற்கின்றன.

மனித அறிவுப் பரிமாணத்தின்

பாதைக்கு 

இன்னும் இன்னும்

மைல் கற்கள் 

வேண்டும் வேண்டும்.

நம் தோள்மீது 

அமர்ந்து கொண்டிருக்கும்

புராணத்து சித்ரகுப்தன் கூட‌

கையில் 

மடிப்பொறியோடும்

ஏ ஐ சொடுக்கு சிட்டிகைகளோடும் 

தான் அப்பிக்கொண்டிருக்கிறான்.

நம் கற்பனை நமைச்சல்களுக்கும்

நம் முதுகு சொறிந்து விடும்

கவிதைத்தினவுகளுக்கும்

ரீல்கள் கணக்கில்

காகிதத்தீனிகள்

சவைக்கப்பட்டு சவைக்கப்பட்டு

குவிந்த‌

அச்சுக்குப்பைகள்

கோடி கோடி கோடி.

மனிதனே

நீ மிருகமாய் இருந்தபோது கூட‌

இப்படி

மரங்களைத் தின்றது

இல்லையே.

இப்போது உன் அசுரப்பசிக்கு

டிஜிடல்களும் க்யூபிட்களும்

நீண்டு கொண்டே போய்

மில்லியன் மில்லியன்

ஒளியாண்டுகளையும் கூட‌

"ஸ்நேக்ஸ் டைம்" கொறிப்புகளாய்

அல்லவா 

ஆக்கி விட்டிருக்கின்றன.

உன் பசி அப்போதும் 

அடங்க வில்லையே.

அந்த ப்ராக்ஸிமா எக்ஸோப்ளேமட்டில்

இருப்பதாய் கருதப்படும்

அந்த நீலவிழி ஏலியன் குஞ்சுகளுடன்

கும்மாளம் போடும்

அல்காரிதங்களில்

புதிய "அகர முதல"வை

தேடிக்கொண்டிருக்கிறாய்.

இந்த புத்தகங்கள் உன் எழுத்துகளின்

ஃபாசில்களை

புதைத்துக்கொண்ட‌

அடி வயிற்று மண் திட்டின்

சொப்பன‌ங்களாகவே

மக்கிக்கொண்டிருக்கட்டும்.

மயக்கம் என்ன எழுத்தாளனே.

"கிளிக்" பிரபஞ்சத்தில்

எங்கோ ஒரு கருந்துளைக்கு

வளையல்கள் மாட்டி

சிலிர்ப்பு கொள்!

களிப்பு கொள்.


_________________________________________

சொற்கீரன்

No comments: