2025-04-23

பாலையா‍ நாகேஷ்!

 

பாலையா‍ நாகேஷ்!

_________________________________


"பாலையா"

இவருக்கு யாரைப் போடுவது

என்று 

குழம்பிப்போய்

மறு ஆக்க கதை உரிமையை

வேண்டாமென்று

கிளம்பிப்போனாராம்

திரு மனோபாலா அவர்கள்.

நான் இது வரை

ஐம்பது அறுபது தடவைகளுக்கு

மேல் பார்த்திருப்பேன்

அந்த "காதலிக்க நேரமில்லை"யை.

கதை சொல்லும் 

காட்சிக்கு

அந்த இருவரை

எங்கே போய் தேடினாலும்

கிடைக்கவே மாட்டார்கள்.

"கோழப்பய கோழப்பய.."

என்று

அட்டகாசமாய் பாலையா

சிரித்துக்கொண்டிருக்கும் போதே

"ஒரு திகில் ஊளையிடும்"

குரல் 

நாகேஷிடமிருந்து

வெளிப்படும் பாருங்கள்!

இந்த காட்சியையே

இன்னும்

ஆயிரம் தடவை பார்த்து பார்த்து

சிரிக்கலாம்.

ஓ! எமன் எனும்

எமகாதகப்பயலே

இவர்கள் இரண்டு பேரையுமாவது

எங்களுக்கு

கொண்டு வந்து

திருப்பிக்கொடுத்து விட்டுப்போயேன்.

சிரிப்பு என்பது

எல்லா மரணங்களையும்

அழித்துத் துடைத்துவிடும்

என்று அல்லவா

இந்த இரு நகைச்சுவை மன்னர்களும்

சொல்லி விட்டுச்

சென்றிருக்கிறார்கள்.

அறுபத்தியோரு ஆண்டுகளையும்

விழுங்கிக்கொண்டு அந்த‌

காட்சிகள் 

இன்னும் எங்கள் விலாக்களில்

கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டே

இருக்கின்றன.

படம் பார்ப்பது என்ற உணர்வு

அங்கே இல்லை.

அந்த அறையின் சோஃபா

விளிம்பில் இன்னும்

அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பது

போன்ற‌

ஒரு "ஹேலூசிஷனை"

என் நினைவு மண்டலத்தில்

ஒரு சிரிப்பு மூட்டமாய்

எழுப்பிக்கொண்டிருக்கும்படி

செய்த ஸ்ரீ தரின் 

அந்த அசுர சாதனைக்கு

எத்தனை விருதுகளை வேண்டுமானலும்

அபிஷேகம் செய்யலாம்.

____________________________________________

சொற்கீரன்



No comments: