2025-04-20

சில்லுகளாய்...

 சில்லுகளாய்...

________________________________


திருப்பி திருப்பிப்

பார்த்தேன்.

கோணல்கள் யாவும்

கோணங்கள்.

கோணங்கள் யாவும்

கோலங்கள்.

வளையல் துண்டுகள்

வண்ணம் வண்ணமாய் 

வளைய வளைய வந்தன.

குலுங்கல் குளுக் ஒலித்துண்டுகளும்

புன்ன‌கைகக்கீற்றுகளும் 

ஒளிந்து கிடக்கும்

ஒழிந்தே கிடக்கும்

நிகழ்வுத்துண்டுகளும் கூட‌

என் பிரபஞ்சத்துண்டுகளை

மேலும் மேலும் 

நொறுங்கிக்கிடப்பதாய்

நான் 

திருப்பி திருப்பிப்

பார்த்துக்கொண்டிருந்தேன்.

அது என்ன‌

மாணிக்கப்பிஞ்சுகளாய்

கையிலும் அருகிலும்

மழலைகள்.

அந்த சின்னக்குரல்களிலும்

என் கனவுச்சிதறல்கள்

தெறிப்பதை 

அவள் உணர்வாளா?

ஒரு திருமணப்பத்திரிகையை

என் கல்லறை மூடிக்கு

அலங்காரப்போர்வையாய்

மூடிவிட்டு அன்று

போனவள் தான்!

அது என்ன 

காதல் பெருங்கடல்

அவ்வளவு இனிப்பானதா?

இதோ

இந்த பாம்பு நெளியல்களாய்

கூந்தல் சிலிர்ப்புகளாய்

அந்த கிரேக்க அரக்கி போல்

இன்னும்

என் உயிர் குடித்துக்கொண்டிருக்கிறாளே.

...........

"போதும் டா

கலைடோஸ் பார்த்தது..

கொடு"

நண்பன் கலைத்தான்.

பிம்பங்கள் சில்லுகளாய்

காலடியில்.

________________________________________________‍

சொற்கீரன்.






‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

No comments: