2025-04-27

நீ

 

நீ

____________________________________________


நினைவோரங்களில்

கனவு மிச்சங்கள்

எலும்புத்துண்டுகளாய்

எதையோ சொல்கின்றன?

ரோஜாக்கள்

வலம் வந்த சுவடுகளில்

எருக்கம் பூ மேடுகள்.

சூரியனையே சிறகாக்கி

துடைத்து துடைத்து

பளிச்ச்சிட்ட வானத்தில்

மொட்டை இருட்டின்

மூளித்திரைகள்.

சிந்தனைக்கீற்றுகள்

தடம் அழிந்து இடம் இழந்து

ஈசல் சிறகுகளின்

குவியல்களாய்

குப்பை மேடுகள்.

ஓ! தமிழா!

உன் வீடு எங்கே?

பேய் மந்திரங்களின்

பிண்டம் தின்றா

உன் மொழி வளர்த்தாய்?

உன் சிந்து தமிழ்

சிதைந்து போன 

சிதிலங்களிலிருந்து

என்றைக்கு உன்

முகம் மீட்கப்போகிறாய்?

உன் அகம் சிவக்கப்போகிறாய்?

போலிகளின்

"ஊடகத்து" நாடகங்களில் நீ

"கான முயல் எய்த அம்புகளையா"

இன்னும் பொறுக்கிக்கொண்டிருக்கிறாய்?

இமயம் உன்னால் 

வரம்பு கட்டப்பட்ட வெற்றிகளை யெல்லாம்

தொலைத்து விட்டு இந்த‌

கூழாங்கற்களையா

சேகரித்துக்கொண்டிருக்கிறாய்?

காக்கைகள் கூட‌

அவற்றைக்கொண்டு தன்

நெருப்புத்தாகத்தை

தணிக்க முயலும்போது

நீ அவற்றில்

"பரம பதம்" ஆடிக்கொண்டிருக்கிறாய்.

சொர்க்கம் எனும்

பொய்க்குமிழிகளும்

உன்னை  வெறும் பாவ மூட்டைகள்

ஆக்கி விட்ட‌

புளுகு மூட்டைகளுமா

உன் "சீறும் குமரிக்கண்டம்?"

விழிவு தான் உன் வழி!

அழிவு அகற்ற

 நீ

விழித்தெழு! சிலிர்த்தெழு!

தமிழா!

சிலிர்த்தெழு!


__________________________________________

சொற்கீரன்.

2025-04-23

பாலையா‍ நாகேஷ்!

 

பாலையா‍ நாகேஷ்!

_________________________________


"பாலையா"

இவருக்கு யாரைப் போடுவது

என்று 

குழம்பிப்போய்

மறு ஆக்க கதை உரிமையை

வேண்டாமென்று

கிளம்பிப்போனாராம்

திரு மனோபாலா அவர்கள்.

நான் இது வரை

ஐம்பது அறுபது தடவைகளுக்கு

மேல் பார்த்திருப்பேன்

அந்த "காதலிக்க நேரமில்லை"யை.

கதை சொல்லும் 

காட்சிக்கு

அந்த இருவரை

எங்கே போய் தேடினாலும்

கிடைக்கவே மாட்டார்கள்.

"கோழப்பய கோழப்பய.."

என்று

அட்டகாசமாய் பாலையா

சிரித்துக்கொண்டிருக்கும் போதே

"ஒரு திகில் ஊளையிடும்"

குரல் 

நாகேஷிடமிருந்து

வெளிப்படும் பாருங்கள்!

இந்த காட்சியையே

இன்னும்

ஆயிரம் தடவை பார்த்து பார்த்து

சிரிக்கலாம்.

ஓ! எமன் எனும்

எமகாதகப்பயலே

இவர்கள் இரண்டு பேரையுமாவது

எங்களுக்கு

கொண்டு வந்து

திருப்பிக்கொடுத்து விட்டுப்போயேன்.

சிரிப்பு என்பது

எல்லா மரணங்களையும்

அழித்துத் துடைத்துவிடும்

என்று அல்லவா

இந்த இரு நகைச்சுவை மன்னர்களும்

சொல்லி விட்டுச்

சென்றிருக்கிறார்கள்.

அறுபத்தியோரு ஆண்டுகளையும்

விழுங்கிக்கொண்டு அந்த‌

காட்சிகள் 

இன்னும் எங்கள் விலாக்களில்

கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டே

இருக்கின்றன.

படம் பார்ப்பது என்ற உணர்வு

அங்கே இல்லை.

அந்த அறையின் சோஃபா

விளிம்பில் இன்னும்

அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பது

போன்ற‌

ஒரு "ஹேலூசிஷனை"

என் நினைவு மண்டலத்தில்

ஒரு சிரிப்பு மூட்டமாய்

எழுப்பிக்கொண்டிருக்கும்படி

செய்த ஸ்ரீ தரின் 

அந்த அசுர சாதனைக்கு

எத்தனை விருதுகளை வேண்டுமானலும்

அபிஷேகம் செய்யலாம்.

____________________________________________

சொற்கீரன்



37 DIMESIONS OF "PHOTONS"

 


 முப்பத்தேழு முகங்களில்  ஒளிர்வான்கள்

37 DIMESIONS OF "PHOTONS"


Majorana 1 Quantum Chip Just CRACKED the Shocking Truth About Photons in 37 Dimensions

உலக புத்தக தினம்.

 

உலக புத்தக தினம்.

_______________________________


அச்சும் காகிதமும்

குவாண்டத்து

கரையான்களின்

தீனிகள் ஆன பின்

நாவல்களும்

கவிதைகளும்

மட்டுமே 

இங்கு மொட்டைவெளிகள்.

வணிகம் மருத்துவம் ஆனது.

மருத்துவம் வணிகம் ஆனது.

பசி மொய்க்கும் 

பொருளாதாரம்

டிஜிடல் சோற்றை

அளைந்து கொண்டிருக்கிறது.

மனிதன் கவலை

உடனுறை மனிதனின் 

பட்டினிச்சாவுகளில் இல்லை.

இற்று விழ்ந்த அவன்

எலும்பு மிச்சங்களிலும் இல்லை.

எங்கோ பல‌

ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள‌

ஏதோ ஒரு கோளின்

நீலக்கண்ணும் பச்சை உடம்புமாய்

உள்ள "அயலி"களின் மீது 

மட்டுமே.

ஆன் லைன் ஆராய்ச்சிகளுக்கும்

குவாண்டம் சிமிலேஷன்களுக்கும்

குறைச்சல் இல்லை.

அரசமரத்து

அறிவொளியின்

"புத்தம்"தந்த புத்தகம்

இன்று வெறும்

எழுத்துக்காடுகளா?

மனிதம் அரிக்கப்பட்டு விட்ட‌

வெறும் மண்டைக்காடுகளா?

காலம் தான் பதில் சொல்லும்

என்பதும் வெறும் பொய்யே.

காலம் என்பதும்

இந்த கணித இயற்பியலில்

கருந்துளையால்

என்றோ தின்னப்பட்டு விட்டது.


__________________________________________

சொற்கீரன்

2025-04-21

காகிதக்காடுகளாய்...

 

காகிதக்காடுகளாய்...

___________________________________


புத்தகங்கள்

காகிதக்காடுகளாய்

நம் வழியெல்லாம்

சிதறி அடைத்துக்கொண்டு

இருப்பதாய்

ஒரு திருப்பம் நம் எதிரே

மூச்சு முட்டிக்கொண்டு

நிற்கின்றன.

மனித அறிவுப் பரிமாணத்தின்

பாதைக்கு 

இன்னும் இன்னும்

மைல் கற்கள் 

வேண்டும் வேண்டும்.

நம் தோள்மீது 

அமர்ந்து கொண்டிருக்கும்

புராணத்து சித்ரகுப்தன் கூட‌

கையில் 

மடிப்பொறியோடும்

ஏ ஐ சொடுக்கு சிட்டிகைகளோடும் 

தான் அப்பிக்கொண்டிருக்கிறான்.

நம் கற்பனை நமைச்சல்களுக்கும்

நம் முதுகு சொறிந்து விடும்

கவிதைத்தினவுகளுக்கும்

ரீல்கள் கணக்கில்

காகிதத்தீனிகள்

சவைக்கப்பட்டு சவைக்கப்பட்டு

குவிந்த‌

அச்சுக்குப்பைகள்

கோடி கோடி கோடி.

மனிதனே

நீ மிருகமாய் இருந்தபோது கூட‌

இப்படி

மரங்களைத் தின்றது

இல்லையே.

இப்போது உன் அசுரப்பசிக்கு

டிஜிடல்களும் க்யூபிட்களும்

நீண்டு கொண்டே போய்

மில்லியன் மில்லியன்

ஒளியாண்டுகளையும் கூட‌

"ஸ்நேக்ஸ் டைம்" கொறிப்புகளாய்

அல்லவா 

ஆக்கி விட்டிருக்கின்றன.

உன் பசி அப்போதும் 

அடங்க வில்லையே.

அந்த ப்ராக்ஸிமா எக்ஸோப்ளேமட்டில்

இருப்பதாய் கருதப்படும்

அந்த நீலவிழி ஏலியன் குஞ்சுகளுடன்

கும்மாளம் போடும்

அல்காரிதங்களில்

புதிய "அகர முதல"வை

தேடிக்கொண்டிருக்கிறாய்.

இந்த புத்தகங்கள் உன் எழுத்துகளின்

ஃபாசில்களை

புதைத்துக்கொண்ட‌

அடி வயிற்று மண் திட்டின்

சொப்பன‌ங்களாகவே

மக்கிக்கொண்டிருக்கட்டும்.

மயக்கம் என்ன எழுத்தாளனே.

"கிளிக்" பிரபஞ்சத்தில்

எங்கோ ஒரு கருந்துளைக்கு

வளையல்கள் மாட்டி

சிலிர்ப்பு கொள்!

களிப்பு கொள்.


_________________________________________

சொற்கீரன்

2025-04-20

சில்லுகளாய்...

 சில்லுகளாய்...

________________________________


திருப்பி திருப்பிப்

பார்த்தேன்.

கோணல்கள் யாவும்

கோணங்கள்.

கோணங்கள் யாவும்

கோலங்கள்.

வளையல் துண்டுகள்

வண்ணம் வண்ணமாய் 

வளைய வளைய வந்தன.

குலுங்கல் குளுக் ஒலித்துண்டுகளும்

புன்ன‌கைகக்கீற்றுகளும் 

ஒளிந்து கிடக்கும்

ஒழிந்தே கிடக்கும்

நிகழ்வுத்துண்டுகளும் கூட‌

என் பிரபஞ்சத்துண்டுகளை

மேலும் மேலும் 

நொறுங்கிக்கிடப்பதாய்

நான் 

திருப்பி திருப்பிப்

பார்த்துக்கொண்டிருந்தேன்.

அது என்ன‌

மாணிக்கப்பிஞ்சுகளாய்

கையிலும் அருகிலும்

மழலைகள்.

அந்த சின்னக்குரல்களிலும்

என் கனவுச்சிதறல்கள்

தெறிப்பதை 

அவள் உணர்வாளா?

ஒரு திருமணப்பத்திரிகையை

என் கல்லறை மூடிக்கு

அலங்காரப்போர்வையாய்

மூடிவிட்டு அன்று

போனவள் தான்!

அது என்ன 

காதல் பெருங்கடல்

அவ்வளவு இனிப்பானதா?

இதோ

இந்த பாம்பு நெளியல்களாய்

கூந்தல் சிலிர்ப்புகளாய்

அந்த கிரேக்க அரக்கி போல்

இன்னும்

என் உயிர் குடித்துக்கொண்டிருக்கிறாளே.

...........

"போதும் டா

கலைடோஸ் பார்த்தது..

கொடு"

நண்பன் கலைத்தான்.

பிம்பங்கள் சில்லுகளாய்

காலடியில்.

________________________________________________‍

சொற்கீரன்.






‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍