2021-09-08

பிள்ளையாரப்பா சரணம்!

 பிள்ளையாரப்பா சரணம்!

_______________________________ருத்ரா



விநாயகப்பெருமானே

போற்றி! போற்றி!

ஒரு மலைஜாதிப்பெண்ணை

உன் தம்பிக்கு 

மணமுடிக்க நீ

என்னவெல்லாம் 

திட்டம் போட்டாய்.

இவர்களோ

அப்படி மலைஜாதிப்பெண்ணை

உயர் ஜாதி இளைஞன்

திருமணம் புரிந்தால்

உயிரோடு கொளுத்திவிடுவார்களே.

சரி.

உன் அப்பா 

எவ்வளவு நியாயவாதி?

தன் உடம்பில் பாதியை

உன் அம்மாவுக்குத் தந்து

ஆணும் பெண்ணும் சமம்

என்று

உலகிற்கு காட்டியும்

இவர்கள்

அப்படியெல்லாம் இல்லை

ஆணுக்குப்பெண்

அடிமையோ அடிமை என்று

மிகவும் கீழே அல்லவா

போட்டு நசுக்கி வைத்து

மனு சாஸ்திரம்

எழுதி வைத்திருக்கிறார்கள்.

பெண்மையின் தாய்மை

எனும் 

திருக்கோயிலின் கருவறையை

தீட்டு என்றும்

அதனால் அந்த சொர்க்கத்தையே

நரகம் என்றல்லாவா

சொல்லுகிறார்கள்.

நீ கூட‌

அந்த தாய்மை சுடரும்

பெண் போல் எனக்கு

ஒரு பெண் பார்த்துக்கொடு அம்மா

என்று 

கேட்டதாய்த் தானே

சப்பளாக்கட்டைகள் தட்டிக்கொண்டு

கதை சொல்கிறார்கள்

இப்போ உனக்கு 

மிக உயரமாய் சிலை வைத்து

கொணடாடுகிறார்களே

அது 

கிரேக்க நாட்டுக்கதையின்

ட்ரோஜான் குதிரை எனும்

மாயக்குதிரை போல்

அல்லவா இருக்கிறது!

சங்கத்தமிழ் மூன்றும் தா

என்று 

நாங்கள் கேட்கிறோம்.

இவர்களோ

வித விதமான

மசோதாக்களை அல்லவா

உன் "லம்போதர" வயிற்றுக்குள்

அடைத்து வைத்திருக்கிறார்கள்.

நாளை இனி

இந்த நாட்டுக்கு தேர்தலே

தேவையில்லை என்று

ஒரு மசோதாவை

அதில் ஒளித்து வைத்திருந்தால்

என்ன செய்வது?

விநாயகப்பெருமானே

நீ தான் 

எங்களைக் காப்பாற்ற வேண்டும்.

அன்று

மாமனிதர் திலகர் 

உன்னை வைத்து தானே

எங்களுக்கு

சுதந்திரம் வேண்டும் என்று

கர்ஜித்தார்.

அதே போல் நாங்களும்

உன்னை வைத்து தான்

இந்த ஜனநாயகத்தை

காப்பாற்ற வேண்டும்.

அப்பனே!

பிள்ளையாரப்பா!

உன் தும்பிக்கை 

ஒரு தும்பிக்கை அல்ல.

இந்த நாட்டு கோடிக்கணக்கான‌

மக்களின் 

கோடி கோடி நம்பிக்கைகளின்

மொத்த உருவகம் அது.

யானை என்றால் 

மதம் பிடிக்கத்தானே செய்யும்

என்று

இவர்கள் ஊற்றும்

செயற்கை மதநீர் கொண்டு

உன்னை

"மதம்"பிடிக்க விடாதே!

உன் அப்பா 

சொல்லியிருக்கிறார்

அன்பே சிவம் என்று.

அதுவே 

எல்லா மதங்களுக்கும்

அன்பு காட்டுவது

என்று தானே பொருள்.

அந்த "பரம்பொருளை" அறியாமல்

எல்லாவற்றிலும் பொருள் சம்பாதிக்க‌

இவர்கள்

ஒரு குத்தகை பாரதம் அல்லவா

நடத்துகிறார்கள்.

நாளை

உன்னையே

உலகத் தனியாருக்கு "பேட்டெண்ட்" போட்டு

பில்லியன் டாலர்களாய்

மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள்.

விநாயகப்பெருமானே!

எங்களைக் காப்பாற்ற‌

நீ உன்னை முதலில்

காப்பாற்றிக்கொள்.

சரணம் சரணம்

பிள்ளையாரப்பா

சரணம்!



___________________________________



No comments: