2014-02-25

காலம் என்றொரு கண்ணாடி

காலம் என்றொரு கண்ணாடி
==================================ருத்ரா


முகம் பார்க்கலாம்.
மூக்கு நுனியில் உள்ள‌
பருவை கிள்ளலாம்.
வடகலையோ தென்கலையோ
இல்லை வெண்ணீறோ
நெற்றியில் தீட்டிக்கொள்ளலாம்.
புருவமத்தியில்
குண்டலினியை குங்குமமாக‌
வைத்துக்கொள்ளலாம்.
சாய்ங்காலம் பார்க்கப்போகும்
காதலனுக்காக‌
இமைகளின் மயிர்க்கால்
ஒவ்வொன்றையும்
மின்னல் துரும்பு கொண்டு
மயக்கத்தின் மின்சாரப்பூச்சுகளால்
துடிப்புகளை
உயர்த்தலாம்.
இல்லையென்றால்
ஒட்டுப்பொட்டை அதன் பரப்பில் ஒட்டி
விதவையாய் கிடக்கும்
கண்ணாடியை
சுமங்கலி ஆக்கலாம்.
வயதுகளைப்பற்றி
கொஞ்சமும்
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்
வட்டச்செயலாளர்கள்
மீசையை துல்லியம் ஆக்கும்போது
ஆங்காங்கே தலை காட்டும்
"வெள்ளைய"ஆதிக்கம் கண்டு
வெகுண்டெழுந்து
அதற்கு கரி பூசலாம்
இல்லை
வேரோடு பிடுங்கி எறியலாம்.
இல்லை
நடுக்கூடத்தில்
ஆளுயரத்தில் மாட்டி
உள்ளே வருவோரின்
உச்சி முதல் உள்ளங்கால் வரையான‌
காக்காய்வலிப்பு நெளிப்புகளின்
பிம்பங்களை
வடிகட்டி வைத்துக்கொள்ளலாம்.
இருப்பினும்
இதற்கு
ரசம் போகலாம்.
சிறுபயல்கள்
சச்சின் இடத்தைப்பிடிக்க‌
பழகுகிறேன் என்று
கல் போன்று கெட்டித்த‌
கிரிக்கெட் பந்தால்
தூள் தூள் ஆகலாம்.
கண்ணாடித்தூள் எல்லாம்
கூட்டிப்பெருக்கிய பின்னும்
என் மடியில்
வடுக்களாய் கிடப்பது
கண்ணாடியின் பரிமாணங்களா?
காலத்தின் பரிணாமங்களா?

================================================ருத்ரா

No comments: