2014-02-25

வாசலில் ஒரு கோலம்

வாசலில் ஒரு கோலம்.........................ருத்ரா
=======================================

வாசலில் ஒரு புள்ளிமான்
தன் புள்ளிகளையெல்லாம்
உதிர்த்துவிட்டு சென்றதோ!
அவள்
விரல் வழியே
வாசல் எல்லாம்
மின்னலில் ஜாங்கிரிகள்.
லால்பாக்கும் கப்பன்பாக்கும்
பெங்களூரை விட்டு
பெயர்ந்து வந்தன‌
இங்கு பூக்களாக‌
இறைந்து கிடக்க.
மேகப்பஞ்சுகள் தூரிகைகள் ஆகி
வானவில் அக்ரிலிக் குழம்பை
சித்திரக்கொடிகளாய்
வாசலில் படர்ந்து கிடந்தன.
இதனுள்
என் இதயத்தை
அவள்
எங்கே வரைந்து வைத்திருக்கிறாள்?
அவள் கால் பதிந்த தடங்களில்
சிற்றெரும்புகளின் வியூகம்.
அவைகளுக்கு கூட‌
அவள் இனிய ஸ்பரிசம்.
என் இதய ஸ்பரிஸம்
இங்கே எங்கு துடிக்கிறது?
கோலம் முழுவதும்
என் சுவாசங்களால்
ஒற்றி யெடுத்தேன்.
எங்கே இதில்
அவள் அன்பின் வாசனை?
அங்கேயே நின்றேன்.
எவ்வளவு நேரம் நின்றேன்?
எனக்குத்தெரியவில்லை.
என் கால்களின் அடியில்
திடீரேன்று
உலுக்கல்
குலுங்கல்
குலுங்கியது பூமி மட்டும் அல்ல.
அண்டமே அதிர்ந்தது.
இலைச்சருகுகள் போல்
நட்சத்திரங்களின் இடிபாடுகள்.
"துடிப்பை இன்னுமா உணரவில்லை?"
இடையில்
லேமினேட் ஆகி
ஒரு துடிப்பில் அதிர்ந்து
படலமாய்க்கிடந்தேன்.
அவள் கவிதை படர்ந்த காகிதம் போல.
அவள் துடிப்பா அது?
ஆம்.எங்கள் துடிப்பு தான் அது.
ரிக்டர் ஸ்கேலில்
"பதினாறு"இருக்கும்.

=====================================ருத்ரா

No comments: