கள்ளி வனம்
___________________________________
சொற்கீரன்
அந்த தூணில்
கள்ளி அடர்ந்து கிளைத்து
முட்களின் கூந்தலில்
கண்ணுக்குத்தெரியாத ஒரு
ரோஜாவைக்காட்டி
என்னை வதைத்துக்கொண்டே
இருக்கிறது
கடந்த நாற்பது ஐம்பது
ஆண்டுகளாய்.
அதில் "ஜான் கீட்ஸின்"
கவிதை வரிகள் கலவரப்படுத்திக்கொண்டே
இருக்கிறது.
"ஸ்வீட்டெஸ்ட் ம்யூசிக் இன் தி
சேடெஸ்ட் தாட்ஸ்"
அம்பதுகளில் தேன்குரலை பிழிந்து தரும்
ஜிக்கி அவர்களின்
பாடல்களின் அம்புப்படுக்கையில்
இனிமையில் திகட்டும்
அதை விட இனிமையான ஒரு
துயரம்
நெய்து கொண்டே இருக்கும்.
கள்ளியே!
முள்ளைக்காட்டி நீ
தள்ளி தள்ளி போனாலும்
என் அனிச்சத்தின் மலர் மெத்தை
நீயே தான்.
விரல் தட்டும் கவிதைக்குள்
ரத்தமாய் சொட்டினாலும்
வான நினைப்புகளின்
ஊற்று அது.
________________________________________________
No comments:
Post a Comment