2015-10-12

ஒன்பது ராத்திரிகள்


ஒன்பது ராத்திரிகள்
=============================================ருத்ரா இ.பரமசிவன்

முதல் நாள்
இரண்டாம் நாள்
மூன்றாம் நாள்
நான்காம் நாள்
..........................
..........................
ஒன்பதாம் நாள் ராத்திரி
எருமை அரக்கன் வதத்தோடு
வெற்றிக்கொடியேந்தி
தேவி
பத்தாம் நாள் பவனி.
பல நூறு ஆண்டுகளாய்
இந்த எருமைமாட்டுத்
தலையோடு தான்
உக்கிரமான போர்.
அடையாளங்களுக்கு
இங்கே
திருவிழா கொண்டாட்டங்கள் தான்.
அடைய வேண்டிய
விடியல்களோ வெகுதூரம்.!
அறுபது ஆண்டுகளின்
நெடிய யுகம் தாண்டியும்
நம் மீது பாயும் அரக்கர்களின்
அடையாளம் இன்னும் தெரியவில்லை.
வறுமை அரக்கனும்
ஊழல் அரக்கனும்
கருப்புப்பணம் எனும்
கொடுங்கோல் அரக்கனும்
சாதி மதங்களின்
வெறித்தீ அரக்கனும்
விழிக்க மறுக்கும் நம்
குருட்டுத்தனத்தின்
முரட்டு அரக்கனும்
நம்மை
வதம் செய்யும் இடம் எது
அறிவீரோ?
நாளை தேதி அறிவிப்பார்கள்
இடமும் அறிவிப்பார்கள்.
உங்கள் கை முத்திரை கொண்டே
உங்களை வதம் செய்ய காத்திருக்கிறார்கள்.
வாக்கு அளித்துக்கொண்டே நம்
வாழ்க்கையை அழித்துக்கொண்டது போதும்.
எத்தனை  எத்தனையோ
ஒன்பது ராத்திரிகள்
விழித்திருந்து தூங்கிவிட்டீர்கள்.
இனி வரும் ராத்திரிகளிலாவது
தூங்காமல் விழித்திருங்கள் !

=========================================================









No comments: