ருத்ராவின் கவிதைகள்

வாழ்க்கை ஒரு பயணம்.மைல் கல் எண்களே வாழ்க்கைக் குறிப்புகள்.குறிப்பிட‌ என்னிடம் எதுவும் இல்லை.நட்போடு தொடர்வோம். அன்புடன் ருத்ரா இ.பரமசிவன்

2022-10-31

STANDARD MODEL by L

 (13) The Equation That Explains (Nearly) Everything! - YouTube

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 10:26 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-10-30

ஓவியன்

 ஓவியன்

________________________________

ருத்ரா



உன் மீதே ஒரு ஓவியம் வரை.

உன் உள்ளக்கீறல்களை

தூரிகையாக்கு.

உன் இதயக்குப்பியிலிருந்து

உணர்ச்சிப்பெருக்குகளை

குபீர் குபீர் என்று

பிதுக்கித்தள்ளும் குழம்பினை

வண்ணங்களாக்கு.

இயற்கையோ

மனித முகங்களோ

பெண்மைப்பேரழகின் 

பெருந்தக்க முருகியல் சுழிப்புகளோ

இன்னும்

பட்டாம்பூச்சியின் துடிக்கும் 

சிறகுகளிலேயே

நெளிவுகள் காட்டும் 

திரைகளையோ

வரை..வரை வரை.

உன் தீட்டல்களுக்கு

எந்த சாஸ்திரங்களும்

தீட்டுகள் கற்பிக்க முடியாது.

அவர்கள் கூப்பாடு போடும்

பிரம்மத்தின் பிழம்பு அல்லவா

அந்த தூரிகை மயிர் விளிம்பில்

துளிர்த்து துளிர்த்து வருடுகிறது.

உன் சோகமே 

உன் ஓவியத்தை

சொர்க்கமாக்கும்.

வலிக்கும் நரம்பின் ஆற்றோட்டங்களை

அங்குலம் அங்குலமாய்

அந்த படுதாவில்

கொஞ்சம் படுக்க வை.

அந்த கண்கள் அற்ற கண்களான‌

கனவுப்பிழியல்களின்

கண்ணீர்ப்பளிங்கில் உன்

கதைகள் எழுது.

ஓவியனுக்குள்

கோடி கோடி ஓவியங்கள்

அச்சிடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

அவன் எண்ணத்தின் அகன்றகூடம்

இதோ ஒரு

மியூசியமாய்

விரிந்து கொண்டே இருக்கிறது.

நுழைவோம் வாருங்கள்.

அனுமதிச்சீட்டு ஏதுமில்லை.

அவன் இன்ப துன்பங்கள்

ஒரு மௌனத்தில் அங்கே 

பகிர்ந்து கொள்ளப்படுவதே

அவனுக்கு

ஒரு பாக்ஸ் ஆபீஸ் வசூல்.


___________________________________

 





இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 10:34 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-10-24

தீபாவளி வாழ்த்துக்கள்

 தீபாவளி வாழ்த்துக்கள்

___________________________________________

ருத்ரா


ஒரு வழியாய் இறந்துவிட்டான்

எண்ணெய் தேய்த்து குளித்து

கொண்டாடுவோம்.

புத்தாடையுடன் பட்டாசுகளுடன்.

இறந்தது யார்?

நரகாசுரனா?

தீர்த்தங்கரரா?

நெடுஞ்சாலைகளும்

கடைத்தெருக்களும்

பிதுங்கி நசுங்கி வழிய‌

பயணம் தான்.

அதில் நசுங்கிப்போவது

யார் அல்லது எது?

தமிழா! தமிழா!

அது நீயே தான்.

உன் வரலாறு தான்.

உன் தமிழ் இனம் தான்.

வராக அவதாரத்து திருமாலும் பூமாதேவியும் 

திருமணம் புரிந்ததில்

ஒரு மண்ணின் மனிதன் தானே

பிறந்திருக்க முடியும்.

வராகமாய் பூமியைக்காத்து உழுத‌

ஒரு உழவன் தான் பிறந்திருக்க முடியும்.

கடவுளே

அப்படி மண்ணின் மைந்தனாயும்

உழவச்செல்வனாயும் 

பிறந்தவன் எப்படி அசுரன் ஆனான்?

கடவுள் அசுரன் ஆகித்தான்

ஆரியன் அல்லாத திராவிடனை 

வதம் செய்ய வேண்டும்.

ஓநாய்கள்

ஓடையில் மேல் திசையில் இருந்து

தண்ணீரைக்கலக்கியதாய்

ஆட்டுக்குட்டிகள் மேல் பாய்ந்தது போல்

ஒரு புளுகுக்கதை புராணமே

இங்கு வதம் செய்ய வந்திருக்கிறது.

தமிழர்கள் தங்களையே வதம் செய்யும் 

அவலங்களின் திரியைப்பற்றவைக்கும்

இந்த உற்சாகங்களில் 

தீபாவளி களை கட்டுகிறது.

தீபாவளிக்களையை

என்றைக்கு பறித்து எறியப்போகிறோம்?

பிதாவே!

இவர்களை மன்னியும்.

இவர்கள் உற்சாகமாயிருக்கிறார்கள்.

எப்படியேனும் உற்சாகமாக‌ இருக்கிறார்களே.

அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்!


_________________________________________________________





இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 9:52 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-10-13

திருநீறாற்றுப்படை

 திருநீறாற்றுப்படை

_______________________________________

ருத்ரா




மந்திரமாவது நீறு என்று பாடி

சுந்தரத்தமிழ் அன்று ஒளிகாட்ட‌

இமை உயர்த்தி நாமும் வியந்தனமே.

இமையவன் புகழும் `பரவியதே.


சைவம் உலகில் தழைத்திடவே

தத்துவம் உயர்ந்து பரவியது.

என்ன தத்துவம் அது என்று

உள்ளே சித்தம் குதித்தது காண்.


பாட்டம் அப் ..டாப் பாட்டம் என‌

ஆங்கிலம் சொல்வதே அதுவாகும்.

அடி முடி கண்டால் போதும்

அண்டம் யாவும் விளங்கிடுமே.


உன்னை அறிய உன்னுள் நுழைய‌

உன் மிச்சம் என்ன அறிந்திடுவாய்.

வாழ்வு முடிந்து சுடலைப் பொடியாய்

மிஞ்சியதை நீ உள்ளறிவாய்.


சாம்பல் அல்ல அதுவென்றுணர்.

சாவி கிடைத்ததா?பூட்டுள் செல்.

பாஸ்வர்ட் தன்னைப்பற்றிக்கொள்

அதுவே அறிவியல் அது தெளிவியல்.


தெளிவு தான் "பிரசாதம்" என்றே உணர்.

குவாண்டம் இயற்பியல் உன் கோவில்

நாத்திகம் அறிய ஆத்திகம் செல்.

ஆத்திகம் அறிய நாத்திகம் செல்.


எது?என்ன? அது இது என்ன?

இருப்பும் இன்மையும் இரண்டறக்கலந்து

இன்மையும் ஆகி இருப்பும் ஆகி

நுண்மை அடர்த்தி புகுந்திடுவாய்.


ப்ராபபலிடி டென்சிடி அறிந்தாலே

ஆயிரம் சிவன்கள் உன் சிந்தையிலே

அடக்கம் ஆகும் அடங்காமையும் ஆகும்.

பெருவெடிப்பே உன் பிள்ளையார் சுழியாம்.


சுழிகள் ஸ்பைரல்களே காலக்சிகள் ஆகும்.

குவாண்டம் ஸ்பேஸ்ல் கோடி கோடியாய்

அண்டங்கள் யாவும் கரு தரிக்கும்!

அறிந்தால் போதும் சிவன்கள் எதற்கு?


இரண்டு குவாண்டம் எங்கோ இருந்து

சடை பின்னிக்கொள்ளும் இடையே

பில்லியன் பில்லியன் மைல்கள் என‌

ஒரு நொடியின் கோடித்துளியில்.


குவாண்டம் என்டாங்கிள்மெண்ட் எனும்

அந்த சிதம்பர ரகசியம் தெரிந்துவிடு.

இந்த வர்ண சாத்திரம் எல்லாம் இனி

தவிடு பொடிகள் ஆகிடட்டும்.


அந்த பொடியே  உன் திருநீறு.

பூசிக்கொள் உன் சிந்தையிலே அந்த‌

புரட்சியே உனக்கு தரிசனமாம் 

வறண்ட சாத்திரம் தொலையட்டும்.


திரு நீறாற்றுப் படை இதுவே.

இப்படை போதும் எப்படையும் வெல்ல.

உன்னை நீயே அழித்திடவா இங்கு

ஆகமம் ஆயிரம் நான் தந்தேன்.


அல்லவை அல்லவை அவை எல்லாம்

நல்லவை நல்லவை எது என்று

பகுத்தறிந்த கண் சொல்லும் இனி

அறிவியலே உன் திருநீறு.


நெற்றிக்கண் வேறு எங்கும் இல்லை

அந்த ஜேம்ஸ்வெப்பின் டெலஸ்கோப் தான்.

துருவு!துருவு!உற்றுப்பார்

எல்லாம் தெரிவாய்.எல்லாம் தெளிவாய்!


மன் திறம் இதுவே அறிவாய் நீ மற்ற‌

மந்திரக்கூச்சல்கள் தூர எறி.

எக்ஸொ பிளானட்டுகள் உனக்கு உண்டு.

சொர்க்கம் நரகம் இனி எதற்கு?



____________________________________________________________









இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 7:40 PM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-10-11

பரிமாணங்கள்

 


பரிமாணங்கள்

_________________________________

ருத்ரா




எனக்கு ஏதோ பயம்.

ஸ்ட்ரோக் வரலாம்.

சிறுநீரகம் நின்று விடலாம்.

இல்லாவிட்டால்

எந்த விதமாகவாவது

சின்னாபின்னம் நிகழலாம்.

இது ஒரு டைமன்ஷன்.

எல்லாம் ஐன்ஸ்டீனின் ஸ்பேஸ்டைம்ல்

சுருட்டி வைக்கப்பட்டது தான்.

இன்றைய இழைக்கோட்பாடு

இருப்பத்தாறு என்கிறது போசானிக்கில்.

பத்து என்கிறது

சூப்பர் சிம்மெட்ரியில்.

இது பிரபஞ்சமே கழன்று கொண்ட நிலை.

எம் தியரி எனும்

எல்லாவற்றுக்கும் ஆன தாய்க்கோட்பாட்டில்

பதினொன்று.

நம் ராமானுஜன் என்றைக்கோ

சொல்லிவிட்டுப்போன‌

மாடுலர் ஃபங்ஷன்ஸ்

எட்டுகளின் மடங்காய் 

இருபத்து நாலு என்று குறிப்பிட்டு

காட்டிவிட்டது.

ப்ரேன் காஸ்மாலஜி 

கணித சமன்பாடுகளை

சங்கிலி சங்கிலியாய் 

எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இந்த "பயம்"பற்றிய டைமன்ன்ஷனை

யாரிடம் கேட்பது?

புதிது புதிதாய் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்

திடுக்கிட வைத்து புல்லரிக்கச்

செய்து கொண்டே இருக்கிறது.

பாருங்கள் 

அந்த "செவ்வாய்க் கோளில்" கூட‌

ஒரு பெரிய சிவலிங்கச்சிலை 

அந்த பாழ்வெளியில்

சாய்ந்து சரிந்து கிடப்பதாய்

நாஸா காட்டுகிறதாம்.

இன்னும் விட்டால்

அந்த ப்ராக்ஸிமா பி எனும்

வெளி பூமியிலிருந்து

"போகர்"கூட சிக்னல் அனுப்பிவிடுவார்

போலிருக்கிறது.

இப்போது பயம் எனும் டைமன்ஷன்

பூதாகரமாய்

என்னை உலுக்கிக்கொண்டிருக்கிறது.

அட சீ என்ன இது?

அந்த சக்கரநாற்காலியின்

சக்கரவர்த்தி திருமகன்...

மனிதம் கோடி மடங்காய்

எழுச்சி பெற்ற அறிவியல் உருவகம்..

"ஸ்டீஃபன் ஹாக்கிங்" என 

உச்சரித்தேன்.

நானும் இப்போது "போகருடன்"

ஹாயாய்..அந்த‌

எக்ஸொப்ளேனட்டில்...



______________________________________


இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 11:29 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-10-09

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

__________________________________

ருத்ரா




பொன்னியின் செல்வன்

பாதி எழுதியது கல்கி.

மீதி வரைந்தது மணியம்.

வரலாற்றுப்புதினம் 

படிக்க படிக்க‌

பரபரப்பாய் இருந்தது.

வரலாற்றின் படிப்பாக இல்லை.

ஏனெனில் 

புதினம் என்ற புனைவில் 

சுருட்டப்பட்டு இருந்தது.

அடிப்படையில்

சமணமும் சைவமும் வைணவமும்

தங்களுக்குள் 

கழுவேற்றிக்கொண்டு

இருந்தது தான் நிகழ்வுகளின் பின்னணி.

ராஜ ராஜனும் ராஜேந்திர சோழனும்

கடல் கடந்து வெற்றிக்கொடி

நாட்டியது 

இந்திய அரசர்களிலேயே எந்த அரசர்களும்

செய்யாதது.

அசோகர் கூட புத்தமதம் பரப்பவே

இலங்கைக்கு தன் மக்களை அனுப்பினார்.

சோழச்சக்கரவர்த்திகளின்

இந்த சிறப்பு வரலாறு

நம் இந்திய வரலாற்றுப்பாடத்தில்

இருட்டடிக்கப்பட்டு விட்டது.

பொன்னியின் செல்வனின் இந்த 

புகழ் வெளிச்சத்தை

மறக்கடிக்கவும் 

மறைக்கவுமே

நந்தினியும் வந்தியத்தேவனும் 

ஆதித்த கரிகாலனின்

கொலைச்சூழ்ச்சியை வைத்துக்கொண்டு

"கொல கொலயா முந்திரிக்கா 

நரியே நரியே சுத்திவா"

என்று விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அதோடு விடவில்லை

நாற்காலியைப்பிடிக்க 

பொன்னியின் செல்வனே இதை

ஏற்பாடு செய்திருப்பானோ

என்ற சந்தேகப்பழியையும்

வலையாக பின்னப்பட்டதே

சுவையையும் விறுவிறுப்பையும் 

புதினத்தில் முறுக்கேற்றுவதற்குத்தான்.

கதை என்றால் அப்படித்தான்

இருக்கும் என்கிற பாமர ரசிகர்களாய்த்

தமிழர்கள் தடம் புரள வீழ்ந்து கிடந்தார்கள்.

அந்த படுகொலையைச்செய்தவர்களுக்கு

தண்டனையோ 

வெறும் நாடு கடத்தலும் 

சொத்துகள் பறிமுதலும் தான்.

மற்றவர்கள் செய்திருந்தால் தலைகள்

உருண்டிருக்கும்.

மனு நீதியின் ஆயிரம் ஆண்டுகளுக்கு

முந்திய கோர முகமே அந்த தீர்ப்பு.

இதை வைத்துக்கொண்டு தான்

"இந்து என்று சொல்லடா"

என்று சில கூட்டங்கள் உறுமுகின்றன.

இந்த கூச்சல்களையும் தாண்டி

ராஜ ராஜ சோழன்

தமிழன் என்று சொல்லடா

தலை நிமிர்ந்து நில்லடா

என்று

இடிக்குரல்கள் 

சிலிர்த்து எழுந்து முழங்குகின்றன.

தமிழா!

ஆயிரம்

இரண்டாயிரம் ஆண்டுகளாய்

நீ தொலைந்து கிடந்தாய்

என்பதை 

தோரணம் கட்டிக்கொண்டாடுவதற்குத்

தான்

பொன்னியின் செல்வனுக்கு

தலையணை தலையணகளாய்

நாலு ஐந்து பாகங்களில்

காத்துக்கொண்டிருக்கிறாய்.

இவற்றில் நீ

தூங்கிவிடாதே தமிழா!

தூங்கிவிடாதே.


___________________________________________

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 11:53 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-10-04

மானுடமே ஓங்கட்டும்.


யாரை நம்பி நான் பொறந்தேன்

போங்கடா! போங்க!

என் காலம் இங்கே வென்றதுவே

வாங்கடா! வாங்க!

நாலாயிரத்துக்கும் மேலே

நம்ம கையில் இருக்குடா

"எக்சோ பிளானட்டுகள்".

இந்த பூமி மட்டுமில்லே

அந்த பூமிகளும் சொந்தமடா!

மானிடமே வென்றதடா!

மனித அறிவே இங்கு

வெளிச்சம் காட்டி நிற்குதடா.

வர்ணம் எனும் இருட்டை காட்டி நம்

வாழ்வை அழிக்கும் தந்திரம் இனி

பலிக்காமல் தொலையட்டும்.

மானுடமே ஓங்கட்டும்.


__________________________________________

ருத்ரா


Swiss astronomer who won Nobel for discovering exoplanet to deliver lecture in this Indian city (msn.com)
THANKS for the LINK

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 7:50 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

பிரம்ம சிரிப்பு

 


எல்லாவற்றையும் பூஜை செய்யும் 

வழக்கம் ஒட்டிக்கொண்டதால்

கடவுள் இல்லை என்பதையும்

தேங்காய் உடைத்து கற்பூரம் கொளுத்தி

பூஜை செய்தார்கள்.

கடவுளே உள்ளம் குளிர்ந்து

"வெளித்தோன்றி சொல்லிவிட்டார்.

நான் கடவுள் இல்லை.

கடவுள் நான் இல்லை.

கடவுள் கடவுளே இல்லை.

கடவுள் என்பது இல்லவே இல்லை.

சந்தோஷம் தானே"


சந்தோஷமா?

அயோக்கியப்பயலே

மொள்ள மாரி

கசமாலம் 

முடிச்சவிக்கி

முட்டாப்பயலே..

.................

"அப்படியா..

அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு

இது வரையும் 

இது தான் அர்த்தமா?"

கடவுள் ஓடியே போய்விட்டார்.

கடவுளைக்காணோம்.


"கடவுள்...

இதோ தூணிலும் இருப்பார்

துரும்பிலும் இருப்பார்.

..........

..............."


பக பகவென்று

சிரிப்பொலி மட்டும் கேட்டது.

பிரம்ம சிரிப்பு அது.


_____________________________________________________‍

ருத்ரா

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 2:24 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-10-01

வீரசிவாஜி வாழ்க!

 வீரசிவாஜி வாழ்க!

_______________________________________‍

ருத்ரா



வீரசிவாஜியே வாழ்க.

அந்த மராட்டிய மன்னனை அல்ல‌

உன்னைத்தான் சுட்டுகிறோம்.

வழக்கமான 

ஒரு மூக்குப்பொடி சிட்டிகையில்

எழுதிக்குவித்த அந்த நாடகப்பக்கங்கள்

எல்லாம்

நம் பேரறிஞர் வெடித்த பீரங்கிகள் 

அல்லவா?

சிம்மக்குரலோனே அன்று நீ

கர்ஜித்த வீரம்

இன்றும் தன் சூடு அடங்க வில்லை.

தமிழா!தமிழா!

சூத்திரன் சூத்திரன் என‌

இழிவு படுத்திய‌

ஆதிக்க கும்பலின் 

கும்பாபிஷேகங்களில்

கரைந்து விடாதே.

சிவாஜி வெடித்த தமிழ்

உன்னிடம் உண்டு.

அதைக்கொண்டு 

தமிழா

நீ ஆயிரம் எரிமலைகளை

பற்ற வைத்துக்கொள்.

உன் மீது கிடக்கும் 

அடிமை சாசனங்கள்

எரிந்தொழியட்டும்.


இமயங்கள் கூட‌

வணங்கிக்குனிந்ததே

வீர சிவாஜியாய் நீ

வீறிட்ட‌  குரலில்.

நடிகர் திலகம் அவர்களே!

"சிந்து நதியின் மிசை நிலவினிலே.."

என்ற பாடல் காட்சியில்

பாரதியின் அந்த‌

முறுக்கிய மீசையிலும்

கங்கு விழிகளாய் தெறித்த‌

பார்வையிலும்

எங்கள் உடம்பெல்லாம் இன்றும்

சிலிர்த்து நிற்கிறது.

நடிப்பின் மேதையே!

உன் நடிப்புக்கடலில் 

நீரை எங்கு அள்ளினாலும்

எங்கள் இதயங்களே அங்கு

மீன்களாய் துள்ளித்தும்பும்.

உன் நடிப்பின் மொழியும்

நம் தமிழ் போல் 

ஒரு செம்மொழி தான்.

நடிப்பின் எம்மொழியும் 

அதில் தான் உயிர் தரிக்கும்.

ஓங்குக‌

நடிகர் திலகம் சிவாஜியின் புகழ்!


___________________________________________________







இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 5:30 PM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Followers

உள்ளே...

  • ►  2025 (6)
    • ►  Apr 2025 (6)
  • ►  2024 (64)
    • ►  Aug 2024 (6)
    • ►  Jul 2024 (14)
    • ►  Jun 2024 (11)
    • ►  May 2024 (18)
    • ►  Apr 2024 (13)
    • ►  Mar 2024 (2)
  • ►  2023 (38)
    • ►  Dec 2023 (5)
    • ►  Nov 2023 (4)
    • ►  Oct 2023 (1)
    • ►  Jul 2023 (6)
    • ►  Jun 2023 (3)
    • ►  Apr 2023 (2)
    • ►  Mar 2023 (8)
    • ►  Feb 2023 (9)
  • ▼  2022 (52)
    • ►  Dec 2022 (5)
    • ►  Nov 2022 (7)
    • ▼  Oct 2022 (9)
      • STANDARD MODEL by L
      • ஓவியன்
      • தீபாவளி வாழ்த்துக்கள்
      • திருநீறாற்றுப்படை
      • பரிமாணங்கள்
      • பொன்னியின் செல்வன்
      • மானுடமே ஓங்கட்டும்.
      • பிரம்ம சிரிப்பு
      • வீரசிவாஜி வாழ்க!
    • ►  Sep 2022 (31)
  • ►  2021 (18)
    • ►  Sep 2021 (11)
    • ►  Aug 2021 (6)
    • ►  May 2021 (1)
  • ►  2019 (1)
    • ►  May 2019 (1)
  • ►  2018 (1)
    • ►  Feb 2018 (1)
  • ►  2016 (4)
    • ►  Sep 2016 (2)
    • ►  Aug 2016 (1)
    • ►  Jan 2016 (1)
  • ►  2015 (4)
    • ►  Dec 2015 (2)
    • ►  Oct 2015 (2)
  • ►  2014 (12)
    • ►  Sep 2014 (2)
    • ►  Aug 2014 (2)
    • ►  Jul 2014 (2)
    • ►  Jun 2014 (2)
    • ►  Feb 2014 (4)
  • ►  2011 (1)
    • ►  Oct 2011 (1)
  • ►  2009 (3)
    • ►  Jul 2009 (1)
    • ►  Mar 2009 (2)
  • ►  2008 (1)
    • ►  Nov 2008 (1)

Subscribe To

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments
பதிப்புரிமை ஆசிரியர்க்கே. Simple theme. Powered by Blogger.