2015-12-27

இருளிலிருந்து ஒளி......






இருளிலிருந்து ஒளி......
=============================================ருத்ரா


"தமஸோ மாம் ஜ்யோதிர் கமய..."
அந்த கும்மிருட்டுக்கும்
நீலப்பிழம்பின் வானச்சதைக்கும்
சமஸ்கிருதம் புரியவில்லை.
தமிழும் தெளியவில்லை.

விதை பிளந்து
மண்ணைத்தின்றது.
வேர் நீட்டி
நீர் குடித்தது.
மயிர்கள் போல வேர்த்தூவியாய்
மண்ணின் இதயத்தோடு
நாளம் ஆகி நாட்கள் நகர்த்தியது.
வெளியே
செடியாய் மரமாய் கிளையாய்
விழுது வீழ்த்தி
நிலை பெற்றது.
சிவப்பு ஆலம்பழத்தை
அந்த பச்சைக்கிளி
சுவைத்து துப்பிய‌
கடுகினும் சிறிய விதைக்குள்
இத்தனை பெரிய ஆரண்ய காண்டம்
எப்படி நுழைந்தது?
இது விதையல்ல.
இது மனிதக்கேள்வி!
இது பற்றி யெரிந்து வேள்வியானதில்
கேள்வியும் எரிந்து விடையும் எரிந்து
சாம்பல் மட்டுமே மிச்சம்.
எஞ்சி நின்ற நாலு வர்ணத்தில்
நான்காவதாயும் ஐந்தாவதாயும்
மனிதன் சேற்றுப்புழுக்களாய்
நெளியவோ
இத்தனை அவதாரங்கள் கடவுளுக்கு?
இந்த மார்கழிப்பனியிலும்
எரிமலை லாவா
மனதுக்குள் ஓடுகிறது.
சங்கரர் தன் உள்ளத்து தீயால்
சுட்டுக்கொண்டு
பாடிய வரிகளைப்பாருங்கள்!

"கிம் கங்காம்புனி பிம்பிதே அம்பரமணௌ
சண்டாலவாடீபயஹ.
பூரே சாந்தரமஸ்தி காஞ்சன கடீ
ம்ருத்கும்பயோர்வாம்பரே.
ப்ரத்யக்வஸ்துனி நிஸ்தரங்க சஹஜானந்தாவ‌
போதாம் புதௌ.
விப்ரோஅயம் ச்வபசோயமித்யபி மஹான்
கோஅயம் விபேதப்ரமஹ."

இது அவரது மனீஷா பஞ்சகம் எனும்
மன உறுதிப்பாடல்களில் ஒன்று.

"கங்கை நீரிலும் சண்டாளன் வீட்டு அருகில் உள்ள
சாக்கடை நீரிலும் பிரதிபலிக்கின்ற சூரியனிடம்
வேற்றுமை ஏதாவது உண்டா?
பொன் பாண்டத்திலும் மண் பாண்டத்திலும்
உள்ள வெளியில்(ஸ்பேஸ்) வேற்றுமை இருக்கிறதா?
அலையில்லா சுபாவத்தைக் கொண்ட அளவில்லா
பேரானந்த கடலான உள்ளார்ந்த ஆன்மாவில்
இவன் பிராமணன்
இவன் நாய் மாமிசம் உட்கொள்பவன் என்ற‌
இந்த மகத்தான வேற்றுமை எனும் மோகம்
எங்கிருந்து வந்துள்ளது?"

இது சுவாமி ரங்கநாதானந்தரின்
அருமையான மொழி பெயர்ப்பு.
இன்னும் அர்ச்சகர் நியமனத்தில்
நீதியே இர‌ட்டை வேடம் போடுகிறது.
மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள்
அடித்துக்கொல்லப்படுகிறார்கள்.

அடித்துக்கொல்லப்படுவது
ஆதி சங்கரரா?
இல்லை
அந்த பிரம்மம் என்னும்
பரம்பொருளா?

ஆத்மீக பூமியான பாரத‌த்தில்
எப்படி இப்படி ஒரு
பாதக நிழல் படர்ந்தது?

=========================================================

No comments: