2014-07-06

இடிபாடுகள்.





இடிபாடுகள்.
=========================================ருத்ரா



சென்னையில்...
மவுலிபுரம்
மனித உயிர்களின்
மலிவுபுரம்
ஆகிப்போனது.

சிமிண்டும் கல்லும்
மணலும் கூட‌
தேர்தலில் நின்றால்
மந்திரி தான்.

அடுக்கு மாடியில்
ஒரு இடுக்கு தான்
இப்போதைய‌
இந்தியாவின் கனவு.

அதற்கே
டன் கணக்கில் அல்லவா
தேவைப்படுகிறது
கரன்ஸி.

பணவீக்கம்
பொருளாதாரவளர்ச்சி.
கட்டுமான பங்குகள்
குத்தாட்டம் போடுகின்றன‌
தினம் தினம்
டி.வி வாந்திகளில்.

"அதோ
கால் தெரிகிறது"
நெஞ்சு பிழியும் குரல்.
இன்னும்
நசுங்காமல் கொக்கரிக்கும்
"கருப்பு"அரக்கனின்
முக அடையாளம்
தெரியவில்லையே.

மானுடம் இங்கே
கூழாய்ப் போன சாந்தில்
மேஸ்திரியின் கூவல்.
"டேய்..
ஒழுங்காய் செங்கல்
அடுக்கு"
அந்த குரலின் பிணமும்
அங்கு தான்.

எல்லாம்
எலும்புக்குவியல்தான்.
இந்த காங்க்ரீட்டையும்
அடித்து நொறுக்கி எடுக்க‌
காண்ட்ராக்ட் தயார்.

காசு பணம் துட்டு டப்பு
என்று
கானாப்பாட்டு
இங்கு எல்லோருக்கும் குஷி.

முதலில்
பிணங்கள் தான் பிறக்கின்றன.
சம்பாதித்த பிறகு தான்
மனிதன்கள் பிறக்கிறான்கள்.

இடிபாடுகளையும்
நிமிண்டியெடுத்து
உயிர்மீட்கும் அந்த‌
இதயங்களில்
இந்தியாவின் ஈரப்பசை
இன்னும் இருக்கிறதே.

கோடி நமஸ்காரம் அதற்கு.

இரண்டு அடுக்குகள்
பூமியின்
இரைப்பைக்குள் என்றார்கள்.
மிச்ச அடுக்குகளில்
மனிதக்குப்பை போக‌
கொஞ்சம்
ஸ்டீலும் கப்பியும் தேறுமே!
காஸ்ட் அக்கவுண்டன்ட்
கணக்கு போட்டார்.
இன்சுரன்ஸும் சட்டமும்
தலையை பிய்த்துக்கொண்டது.

கிடக்கட்டும் விடுங்கள்.
இடிபாட்டுச் செய்தியின் அருகேயே
வழ வழ பேப்பரில்
மூவர்ண ஃபோட்டோ ஃபினிஷில்
விளம்பரம் வந்திருக்கிறது
படியுங்கள்.
டபிள் பெட் ட்ரிபிள் பாத்ரூம்..
ஃப்ளாட்
எழுபத்திஅஞ்சு லட்சம் தானாம்..

=======================================
07.07.2014ல் எழுதியது.








No comments: