"கல்லத்தி முடுக்கு"
------------------------------------------------------------------------
திருநெல்வேலியின்
மூலை முடுக்குகள் கூட
எனக்கு
வரலாற்றுத் திருப்பங்கள்.
பள்ளிக்கூட கோடைக்கால
விடுமுறைகளின்
வசந்த மாளிகைகளாக
அந்த திலி-டவுணின் சந்து பொந்துகள்
உல்லாச வெளிச்சத்தை
சொக்கப்பனையாக்கி நிற்கும்.
பாப்புலர் டாக்கீஸின்
ஒலிச்சித்திரங்கள்
கொலுசு கட்டி ஆடும்.
"வீடு நோக்கி ஒடி வந்த என்னையே ..."
என்ற அந்த சிவாஜியின் பாட்டு
கன்னம் அதிர இசைக்கும் உணர்சசியை
அங்கு படரவிடும்.
அதிலும் அந்த
"கல்லத்தி முடுக்கு"
முடுக்கிவிடும் விசையை
மறக்க முடியாது.
அந்த "குறுந்தெருவு"முனையிலிருந்து
என் நடையைத் துவக்குவேன்.
நெல்லை நகரத்தின்
விலாப்புறத்தை உரசிக்கொண்டே
ஒரு
கிச்சு கிச்சு தாம்பாளம்
கீயாளித்தாம்பாளம்
விளையாடிக்கொண்டே
போவது போல் தான் இருக்கும் .
நடந்து கொண்டே
மணித்திரமூர்த்தி உயர்நிலைப்பள்ளியைத்
தழுவிக்கொண்டு நிற்கும்
தூங்குமூஞ்சி மரத்து பூஞ்சிறகு நிழல்களின்
மகரந்தப்பொழிவில்
கொஞ்சம் நனைந்து பார்க்கச்சொல்லும்.
கரிப்புகையை மூச்சு விட்டுக்கொண்டே
செல்லும்
மேக்கே போகும் ரயில் ஒன்று
திலி ஜங்க்ஷனிலிருந்து
தம் பிடித்து குப் குப்பென்று
ஓடுவது
ஒருவன் சட்டையின் பின் புறத்தை
இன்னொருவன் பிடித்துக்கொண்டு ஓடும்
குறும்புக்கார பயல்களின்
ரயில் விளையாட்டை
கண் முன் நிறுத்தும்.
அந்த "அம்பதுகள் "
இந்த
வைரப்பூங்கா கால ஓட்டத்தின்
"ஸ்பேஸ் டிராவல்" புகை விளையாட்டை
நடத்தித்தராதா?
---------------------------------------------------------------------------------------------
சொற்கீரன்.