2026-07-16

பூதங்களும் வேதாளங்களும்

 


The world's most difficult Hobbit questions finally answered






பூதங்களும் வேதாளங்களும்

_____________________________________________


கற்பனையின் நீண்ட இந்த 

சொரசொரப்பான விரல்கள்

நம்மை சொரிந்து விடுகின்றன.

இருப்பினும்

கண்ணீரின் கன அழுத்தம்

மரண அச்சத்தின்

கூர் நகங்கள்

காதலின் மெல்லிய அநிச்ச சிறகுகள்

அல்லது

அதன் கனவுக்கழுவேற்றங்கள்

பெருமூச்சு விட்டுக்கொள்ள‌

வானவில்லில் கூட‌

தூக்கிட்டுக்கொள்கின்றன.

அம்புலிமாமா பக்கங்களில்

நம் பத்து பன்னிரெண்டு வயதுகள்

சோப்புக்குமிழி ஊதுகின்றன.

அப்போதே அவை திடீரென்று

சொக்கப்பனை கொளுத்த 

ஆரம்பித்து விடுகின்றன.

விக்கிரமனின் வாள் கொண்டு

கூறு போட்டாலும்

ஆயிரம் ஆயிரம் முண்டக்கண்களோடு

வானப்படுதாவில்

ரத்தம் கசியும்

கந்தல் சாளரங்களில்

விடியல் கொத்து பரோட்டாக்களை

வீசி எறிகின்றன.

எதுவாகினும்.

படியுங்கள்...படியுங்கள்.

காகிதங்களில் 

வரி ஊறும் எழுத்துக்களில்

சிந்தனைகளும் உண்டு.

சிதைகளும் உண்டு.

எரிந்து எரிந்து

பிறப்புகளில் குமிழ்க்கலாம்.

இந்த முடை நாற்றம் எடுத்த‌

புராணங்களே தான்

நம் மைல்கற்கள் தொலைந்த‌

பாதைகளா?

மீண்டு வாருங்கள்.

யுகங்களை விழுங்கி விழுங்கியும்

உங்கள் அறிவின் பசி

எப்போது தொடங்கும்?

_________________________________________

சொற்கீரன்

No comments: